பாடல் 7:
குரவனார் கொடுகொட்டியும் கொக்கரை
விரவினார் பண் கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப் பொன்னிப் பாலைத் துறையரே
விளக்கம்:
குரவனார்=குருவாக இருப்பவர்: நாண்மலர்=அன்றைய நாளில் பறித்த மலர்கள், புது மலர்கள்: சிவபெருமான் வீணை வாசிப்பது பல திருமுறைப் பாடல்களில் குறிப்பிடப் படுகின்றது. திருவாசகம் திருவண்டப்பகுதி அகவலில், மணிவாசகர் இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க என்று குறிப்பிடுகின்றார். சிரபுரம் (சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்தின் மீது அருளிய பதிகத்தில் (1.47.6) கையினில் வெண்மழுவும், வீணையும் பாம்புடன் வைத்தவன் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். மூன்று கண் உடையவன் என்று சிவபெருமானை குறிப்பிடும் சம்பந்தர் எண் மூன்றுடன் இணைந்த பல பொருட்கள் சிவபெருமான் மற்றும், அவனது அடியார்களுடன் இணைந்திருப்பதாக இங்கே நயமாக கூறுகின்றார். மூன்று பண்களை உடைய வீணை என்று, கீழ்ஸ்தாயி, நடுஸ்தாயி மற்றும் மேல்ஸ்தாயி ஆகிய மூன்று விதமாக இசை எழுப்பும் வீணை என்று இங்கே குறிப்பிடுகின்றார். மேலும் மூன்று கனல்கள் (ஆகவனீயம், காருகபத்தியம், தாக்ஷிணாக்னி ஆகிய மூன்று வகை நெருப்புகள்) , மூன்று வேள்விகள் (தேவ வேள்வி, பித்ரு வேள்வி மற்றும் முனிவர்கள் வேள்வி) ஆகியவை மூன்றுடன் இணைந்த மற்ற பொருட்கள் ஆகும். கண்ணு மூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்
பண்ணு மூன்று வீணையோடு பாம்புடன்
வைத்தல் என்னே
எண்ணு மூன்று கனலும் ஓம்பி எழுமையும்
விழுமியராய்
திண்ண மூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே
பெருமான் வீணை வாசிப்பதைக் குறிப்பிடும் அப்பர் பிரானின் பாடல் (4.112.7) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. முற்றூழிக் காலத்தில் அனைத்து உயிர்களும் உடலிலிருந்து பிரிந்து, பெருமானிடம் ஒடுங்கிய பின்னர், பெருமான் உயிரற்ற திருமால் மற்றும் பிரமனின் உடல்களைத் தனது தோளில் வைத்துக்கொண்டு கூத்தாடுகின்றான். பின்னர் உயிர்கள் பால் கொண்டுள்ள கருணையால், அந்த உயிர்கள் தங்களது வினைத் தொகையைக் கழித்து தன்னிடம் வந்து சேர்வதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் முகமாக, மீண்டும் ஒடுங்கப்பட்ட உயிர்களும், உலகப் பொருட்களும் விடுவிக்க எண்ணி வீணை வாசிக்கின்றான் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். உயிர்களின் நன்மை கருதி, உயிர்களை விடுவிப்பாதும் உலகைத் தோற்றுவிப்பதும் தனது கடமையாக நினைத்து இறைவன் செயல்படுகின்றான் என்று இங்கே கூறுகின்றார். முற்றூழிக் காலத்தில் எஞ்சி இருப்பது சிவபெருமானும், பெரு வெளியும் மட்டுமே. வீணையில் பிறக்கும் நாதம், உலகத் தோற்றத்திற்கு காரணமாக இருப்பதால் தான், நாதத்தை எழுப்பும் உடுக்கை, தோற்றத்தை உணர்த்துவதாக நடராஜ தத்துவம் கூறுகின்றது.
பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு
பிரமனும் போய்
இருங்கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமும் கொண்டு
கங்காளராய்
வரும் கடன் மீள நின்று எம் இறை நல்வீணை
வாசிக்குமே
வீணை தான் பெருமானின் இசைக் கருவி என்று சுந்தரர் உணர்த்தும் பாடல் (7.33.5) இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.
கோணல் மாமதி சூடரோ கொடுகொட்டி
காலொர் கழலரோ
வீணை தான் அவர் கருவியோ விடை ஏறு
வேத முதல்வரோ
நாணதாகவொர் நாகம் கொண்டு அரைக்கு
ஆர்ப்பரோ நலமார் தர
ஆணையாக நம் அடிகளோ நமக்கு
அடிகளாகிய அடிகளே
பொழிப்புரை:
அனைவருக்கும் குருவாக விளங்குபவரும், கொடுகொட்டி, கொக்கரை மற்றும் வீணை ஆகிய இசைக் கருவிகளிலிருந்து எழும் இசையுடன் கலந்து இருப்பவரும் ஆகிய சிவபெருமான், அழகிய மல்லிகை, செண்பகம் என்று புதியதாக மலர்ந்த மலர்களைக் கொண்ட நிலப் பரப்பினை உடையதும் காவிரி நதிக் கரையில் உள்ளதும் ஆகிய பாலைத்துறை தலத்தில் உறையும் இறைவன் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிா் நலனில் அக்கறை கொண்டவா் முதல்வா் ஸ்டாலின்: பிரேமலதா விஜயகாந்த்

கட்சிக் கொடிக் கம்பங்கள் இல்லாத கிராமம்

உரிய ஆவணமின்றி அனுப்பவிருந்த சேலைகள், துண்டுகள் பறிமுதல்

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் எ.வ.வேலு குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


