பாடல் 2:
எந்தை இவன் என்று இரவி முதலா இறைஞ்சுவார்
சிந்தையுள்ளே கோயிலாகத் திகழ்வானை
மந்தி ஏறி இன மா மலர்கள் பல கொண்டு
முந்தித் தொழுது வணங்கும் கோயில் முதுகுன்றே
விளக்கம்:
முதல் பாடலில் முனிவர்கள் முதுகுன்றத்து இறைவனை வழிபடுவதை குறிப்பிட்ட சம்பந்தர் இந்த பாடலில் அந்தணர்கள் இறைவனை வழிபடுவதை குறிப்பிடுகின்றார். இரவி=சூரியன்; இரவி முதலா இறைஞ்சுவார் என்ற தொடருக்கு இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப் படுகின்றது. அந்தணர்கள் மூன்று வேளையும் சூரியனை வழிபட்டு அர்க்கியம் கொடுப்பது வழக்கும். சந்தியாவந்தனம் என்று அழைக்கப்படும் இந்த சடங்கினில், சூரியனை இறைவனின் ஒரு அங்கமாக கருதி, சூரியனை வழிபடுவதன் மூலம் இறைவனை வழிபடுவதாக நம்புகின்றனர். காலையில் விழித்ததும் முதலாக செய்யப்படும் இந்த செயலுக்கு பிறகு காலைக் கடன்களை கழித்துவிட்டு, நீராடி சிவபெருமானுக்கு பூஜை செய்வது வழக்கம். இந்த தன்மையை குறிப்பிடும் வண்ணம், சூரியனை முதலாக வழிபடும் கொள்கையினை உடைய அந்தணர்கள் என்று கூறுவது ஒரு வகையான விளக்கம். இரவி முதலா என்ற தொடருக்கு சூரியன் முதலான அனைத்து தேவர்கள் என்று பொருள் கொண்டு, தேவர்கள் அனைவரும் பெருமானை வழிபட்டு இறைஞ்சுகின்றனர் என்று சொல்வது இரண்டாவது விளக்கம். முதுகுன்றத்து திருக்கோயில் வந்து வணங்கும் அடியார்களை குறிப்பிடும் பதிகமாக உள்ளதால், முதலாவது விளக்கம் மிகவும் பொருத்தமாக தோன்றுகின்றது.
குரங்கின் கையில் மலரோ மலர் மாலையோ கிடைத்தால், முதலில் குரங்கு அந்த மலரினையும் மாலையையும் பிய்த்து எரிவதை தான் நாம் காண்கின்றோம். இது இயற்கை. அதனால் தான் குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்ற பழமொழியும் எழுந்தது. ஆனால் சம்பந்தர் கண்ட முதுகுன்றத்து குரங்குகள் சற்று வித்தியாசமானவை. அந்த குரங்குகள் தினமும் அடியார்கள் பூக்களை சுமந்து கொண்டு இறைவனின் திரு முன் சென்றடைந்து இவை, இறைவனின் திருமேனியின் மீது பூக்கள் தூவி வழிபடுவதை கண்ட குரங்குகள். மனிதன் செய்யும் பல செயல்களை உற்று கவனிக்கும் குரங்குகள், தாங்களும் அந்த செயல்களை செய்ய முயற்சி செய்வதை நாம் கண்டிருக்கின்றோம். அத்தகைய இயல்பு கொண்ட குரங்குகள், முதுகுன்றத்து அடியார்கள் மலர்கள் கொண்டு இறைவனை வழிபடும் மனிதர்களைக் கண்டு, தாங்களும் மலர்கள் கொணர்ந்து இறைவனின் திருமேனி மேல் தூவியதை தான் கண்டதாக சம்பந்தர் இந்த பாடலில் கூறுகின்றார். முந்திச் சென்று குரங்குகள் தொழுது வணங்கியதாக சம்பந்தர் கூறுவது, அடியார்கள் செல்வதற்கு முன்னமே தினமும் குரங்குகள் திருக்கோயிலுக்கு சென்றதை உணர்த்துகின்றது போலும். இந்த குறிப்பு நமக்கு குரக்குக்கா தலத்தில் இன்றும் நடைபெறும் நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றது. சித்திரை வைகாசி மாதங்களில் இன்றும் குரங்குகள் கூட்டம் கூட்டமாக மலர்களுடன் வந்து குரக்குக்கா தலத்து இறைவனை வழிபடுவதை நாம் காணலாம்.
பொழிப்புரை:
எங்களது தந்தை என்று, தினமும் காலையில் எழுந்ததும் சூரியனை வழிபடும் வழக்கம் கொண்டுள்ள அந்தணர்கள் முதுகுன்றத்து இறைவனை வணங்க, அவர்களது சிந்தையையை திருக்கோயிலாக கொண்டு உறைபவன் முதுகுன்றத்து இறைவன். அடியார்கள் மலர்கள் தூவி வழிபடுவதைக் காணும் குரங்குகள், கூட்டம் கூட்டமாக மரங்களின் மீதேறி, சிறந்த மலர்களை பறித்து வந்து, அடியார்கள் திருக்கோயிலுக்கு வருவதன் முன்னமே கோயில் வந்தடைந்து பெருமானின் திருமேனி மேல் பூக்கள் தூவி வழிபடும் திருக்கோயில் முதுகுன்றம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


