தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

103. தேவா சிறியோம் பிழையை  - பாடல் 11

அழகும் குளிர்ச்சியும்

News image
Updated On :30 ஜூலை 2018, 6:30 pm


பாடல் 11:

    அறையார் கடல் சூழ் அந்தண் காழிச் சம்பந்தன்
    முறையால் முனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றைக்
    குறையாப் பனுவல் கூடிப் பாட வல்லார்கள்
    பிறையார் சடை எம் பெருமான் கழல்கள் பிரியாரே

விளக்கம்:

அறை=ஒலி முழக்கம்; குறையாப் பனுவல்=குறையேதும் இன்றி நிறைந்த தன்மையில் உள்ள பதிகம். அந்தண்=அழகும் குளிர்ச்சியும் உடைய; அகத்தியரும் பிரமனும் இந்த தலத்தில் பெருமானை வழிபட்டதாக தலபுராணம் கூறுவதால். முனிவர் என்ற சொல் அவர்கள் இருவரையும் குறிக்கும் என்று கூறுவார்கள். 

பொழிப்புரை:

அலைகள் வீசுவதால் எப்போதும் ஒலி எழுப்பிய வண்ணம் உள்ள கடலால் சூழப்பட்டு அழகும் குளிர்ச்சியும் உடையதாக விளங்கும் சீர்காழி நகரத்து ஞானசம்பந்தன், முறையாக முனிவர்கள் வணங்கும் முதுகுன்றத்து இறைவனை குறித்து, குறையேதும் இல்லாத தன்மையால் நிறைந்த தன்மை உடைய பதிகத்து பாடல்களை, பலருடன் இணைந்து பாடும் வல்லமை உடைய அடியார்கள் பிறைச்சந்திரனைத் தனது சடையில் சூடிய பெருமானின் திருவடி நிழலிலிருந்து என்றும் பிரியாமல் நின்று பேரின்பம் பெறுவார்கள்.       

முடிவுரை:

பெருமானை வந்து வழிபடும் அடியார்களின் தன்மையை சம்பந்தர் உணர்த்துவது, அத்தகைய அடியார்களை பின்பற்றி நாமும் பெருமானை வழிபட்டு பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் என்பதை நாம் உணரவேண்டும். பல திருமுறை பாடல்களில்  அடியார்களின் தன்மை உணர்த்தப் படுகின்றது. சில பதிகங்களில் அனைத்துப் பாடல்களில் அடையார்களின் தன்மை உணர்த்தப் படுகின்றது. அத்தகைய பதிகங்களில் கூறப்படும் அடியார்களின் தன்மையை நாம் சுருக்கமாக காண்போம்.    

கன்றாப்பூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (6.61) பாடல்களில் எத்தகைய அடியார்களின் நெஞ்சினில் கன்றாப்பூர் பெருமானை காணலாம் என்று அப்பர் பிரான் பட்டியல் இடுகின்றார். பெருமானைப் பலவாறு புகழ்ந்து பெருமான் பால் உண்மையான அன்பு கொண்டு மூன்று வேளைகளிலும் நீரும் மலரும் கொண்டு வழிபடும் அடியார்கள் என்றும், நறுமணம் மிகுந்த மலர்களை பெருமானது திருமேனியில் தூவி வழிபடும் அடியார்கள் என்றும், பெருமானின் அடியார்களையும் பெருமான் என்று கருதி வழிபடும் அடியார்கள் என்றும், பெருமானின் அடியார்களை சிறப்பித்து வழிபட தம்மிடம் போதுமான செல்வம் இல்லையே என்று வருந்தி ஒதுங்காமல் எப்பாடு பட்டாவது அடியார்களின் தேவைகளை நிறைவேற்றும் அடியார்கள் என்றும், புலன்களை அடக்கி பெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் பற்றாக கருதாமல் பெருமானை மட்டும் வழிபடும் அடியார்கள் என்றும், மனம் கசிந்து திருவைந்தெழுத்தினை சொல்லி வணங்கும் அடியார்கள் என்றும், மெய்யரும்பி விதிர்விதிர்த்து அகம் குழைந்து பெருமானின் திருப்பாதங்களைத் தொழும் அடியார்கள் என்றும், பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற்று பெருமானுடன் இணைந்திருப்பதே தங்களது நோக்கம் என்று கருதி பெருமானை வழிபடும் அடியார்கள் என்றும், பெருமானின் பல வீரச் செயல்களையும் பல கருணைச் செயல்களையும் நினைத்து உள்ளம் நைந்து தொழும் அடியார்கள் என்றும் அடியார்களின் தன்மைகளை அப்பர் பிரான் இந்த பதிகத்து பாடல்களில் கூறுகின்றார்.         

இடர் களையும் பதிகத்தினில் (1.52) சம்பந்தர், கொள்கையினால் உயர்ந்த அடியார்கள் என்றும், பெருமானின் சிறப்பினை விளக்கும் பாடல்களை தங்களது மனதினில் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் இரவும் பகலும் அவனது நினைவாகவே இருக்கும் அடியார்கள் என்றும், பெருமானை வழிபடும் பொருட்டு பூவினையும் நீரினையும் சுமந்து செல்லும் அடியார்கள் என்றும், பெருமானது திருவடி நிழலில் நிலையாக நிற்கும் அடியார்கள் என்றும் பெருமானின் திருவடிகளிலிருந்து நீங்காமல் வாழும் அடியார்கள் என்றும், பெருமானின் சிறப்புகளை ஆடியும் பாடியும் உணர்த்தும் அடியார்கள் என்றும், பெருமானின் திருமேனி மீது படர்ந்த திருநீற்றினை சந்தனமாக கருதி மகிழ்ந்து தங்களது உடலினில் பூசிக் கொள்ளும் அடியார்கள் என்றும், பெருமானின் வீரச் செயல்களை குறிப்பிட்டு இரவும் பகலும் நைந்த உள்ளத்துடன் பாடும் அடியார்கள் என்றும், பெருமானின் பொன்னடியின் நிழலில் வாழும் அடியார்கள் என்றும், பெருமான் குறித்த தோத்திரங்களை தங்களது நெஞ்சினில் வைக்கும் அடியார்கள் என்றும் குறிப்பிட்டு, இத்தகைய  அடியார்களின் இடர்களை நெடுங்களத்து ஈசன் களையவேண்டும் என்று சம்பந்தர் இறைவனிடம் வேண்டும் பதிகம்.  

முதல் பாடலில் மனிதர்களில் உயர்ந்த நிலையில் விளங்கும் முனிவர்களையும், அடுத்த பாடலில் அந்தணர்களையும், மூன்றாவது பாடலில் பெருமானது தன்மையை எப்போதும் ஆராய்ந்தவாறு இருக்கும் அடியார்களையும், நான்காவது பாடலில் மேலே குறிப்பிட்ட  ஆராய்ச்சியின் விளைவாக பெருமான் ஒருவனே வீடுபேறு அளிக்கும் வல்லமை பெற்றவன் என்பதை அறிந்து கொண்ட அடியார்களையும், வரவிருக்கும் நாட்களில் ஏற்படும் துயரினை நீக்கும் சேமிப்பு நிதி போன்றவனே என்று வணங்கும் அடியார்களையும், நம்பனே என்று பெருமானையே பற்றுக்கோடாக நினைக்கும் அடியார்களையும், இடைவிடாது என்றும் பூஜை செய்யும் அடியார்களையும், முல்லை நிலத்து வேடர்களையும், இந்த பதிகத்தில் குறிப்பிடும் ஞானசம்பந்தர், அவர்கள் எவ்வாறு இறைவனை வணங்கினார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பல விதமான அடியார்கள் வணங்கிப் புகழும் முதுகுன்றத்து முதியோனை நாமும் வழிபட்டு வணங்கி பயன் அடைவோமாக.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.