திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

104. மெய்த்தாறு சுவையும்  - பாடல் 1

வணங்கி மகிழ்ந்து

News image
Updated On :31 ஜூலை 2018, 6:30 pm


பின்னணி:

எருக்கத்தம்புலியூர் சென்று ஆங்குள்ள இறைவனை வணங்கி மகிழ்ந்து பதிகம் பாடி வழிபட்ட திருஞானசம்பந்தர் ஆங்கிருந்து புறப்பட்டு, முதுகுன்றம் (தற்போதைய பெயர் விருத்தாசலம்) நோக்கி புறப்படுகின்றார். அவ்வாறு செல்லும் வழியில் பல தலங்களும் சென்று இறைவனைப் பணிந்து பதிகங்கள் பாடினார் என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். ஆனால் நமக்கு அந்த தலங்கள் யாவை என்று தெரியவில்லை. மேலும் அந்த தலங்களுக்கு உரிய பதிகங்களும் நமக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு முதுகுன்றம் செல்லும் வழியில், மத்தா வரை நிறுவி என்று தொடங்கும் பதிகம் பாடி (1.12) முதுகுன்று அடைவோம் என்று கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களும் முதுகுன்று அடைவோமே என்று முடிகின்றன. தலத்தினை அடைந்த சம்பந்தர் தலத்தில் உள்ள குன்றினை வலம் வந்தவாறு நின்று மலர் தூவி என்று தொடங்கும் பதிகத்தினை (1.93) பாடுகின்றார். பின்னர் திருக்கோயிலின் உள்ளே நுழைந்த சம்பந்தர் முரசதிர்ந்து என்று தொடங்கும் (3.99) பதிகம் பாடி இறைவனைத் தொழும் அடியார்கள் பெறவிருக்கும் பயன்களை உணர்த்துகின்றார். பின்னர் இறைவனின் பெருமைகளை குறிப்பிட்டு அத்தகைய இறைவன் உறையும் திருத்தலம் முதுகுன்றம் என்று தேவராயும் என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்களில் (1.53) கூறுகின்றார். பல நாட்கள் இந்த தலத்தில் தங்கியிருந்த சம்பந்தர் மெய்த்தாறு என்று தொடங்கும் பதிகம் பாடி (1.131) பெருமானின் பெருமையையும் தலத்தின் செல்வச் செழிப்பையும் உணர்த்துகின்றார். தலத்தில் பல நாட்கள் தங்கியதால், தலத்திற்கு வரும் அடியார்களின் தன்மையை உணரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது போலும். அவ்வாறு தான் உணர்ந்தவற்றை, தேவா சிறியோம் (2.64) என்று தொடங்கும் பதிகம் மூலம் உணர்த்தி நம்மையும் அத்தகைய அடியார்களை பின்பற்றும் வண்ணம் தூண்டுகின்றார். மேலும் வண்ண மாமலர் என்று தொடங்கும் பதிகம் மூலம் (3.34) இறைவன் அன்னையுடன் வீற்றிருக்கும் அழகினை கூறுகின்றார். இந்த பதிகத்தின் முதல் ஏழு பாடல்களிலும் உமையன்னை பற்றிய குறிப்பு காணப்படுகின்றது.            

பாடல் 1:

    மெய்த்தாறு சுவையும் ஏழ் இசையும் எண் குணங்களும் விரும்பு நால் வே
    தத்தாலும் அறிவொண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம் 
    ஒத்தாறு சமயங்கட்கு ஒரு தலைவன் கருதும் ஊர் உலவு தெண்ணீர்
    முத்தாறு வெதிர் உதிர நித்திலம் வாரிக் கொழிக்கும் முதுகுன்றமே

விளக்கம்:

மெய்த்த ஆறு என்பது மெய்த்தாறு என்று சேர்ந்தது; உடலினால் அறியப்படும் ஆறு சுவைகள், உப்பு புளிப்பு இனிப்பு கசப்பு காரம் மற்றும் துவர்ப்பு; ஏழிசைகள் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம். தமிழ் மொழியில் இவ்வாறு அழைக்கப்படும் இந்த ஏழு இசைகள், வடமொழியில் சஞ்சமம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாரம் என்று அழைக்கப்படுகின்றன. சுருக்கமாக சரிகமபதநி என்று கூறுவார்கள்; சுவை, இசை, குணம் ஆகியவை மாயையின் காரியங்கள் என்பதால் அவைகளால் இறைவனால் அறியமுடியாது. வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பொருட்களையும் கடந்தவன் இறைவன் என்பதால் வேதங்களாலும் இறைவனை அறியமுடியாது. நடை=நன்னடை. ஒழுக்கமான வாழ்க்கை;   

ஒத்த ஆறு சமயங்கள்=சைவத்தின் பிரிவான ஆறு அகச்சமயங்கள்; பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வாமனம் பைரவம் மற்றும் சைவம் என்பன சைவ சமயத்தின் ஆறு உட்பிரிவுகள்; இந்த ஆறு சமயங்களும் மாறுபாடு ஏதுமின்றி சிவபெருமானை தலைவனாக ஏற்றுக் கொள்வதால் ஒத்த ஆறு சமயங்கள் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. வெதிர்=மூங்கில்; நித்திலம்=முத்து; மூங்கில்கள் வெடித்து அதன் உள்ளே இருக்கும் முத்துக்கள் சிதற அவற்றை அடித்துக் கொண்டு வரும் ஆறு என்பதால் முத்தாறு என்ற பெயர் வந்தது போலும்.  

இந்த பாடலில் மூங்கிலில் முத்து தோன்றும் என்று ஞானசம்பந்தர் கூறுகின்றார். யானையின் தந்தம், பன்றியின் கொம்பு. மூங்கில், தாமரை, கரும்பு, பெண்களின் கழுத்து, சிப்பி, உடும்பு ஆகியவற்றில் முத்து கிடைப்பதாக இலக்கியங்கள் கூறுகின்றன. பல சங்க இலக்கியங்கள் யானை மற்றும் மூங்கில் முத்தின் பிறப்பிடம் என்று கூறுகின்றன.  ஆனால் சங்கினைத் தவிர்த்த வேறு எந்த பொருளிலும் முத்துகள் இருப்பதாக நிரூபணம் ஆனதில்லை. காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரம் இலக்கியம் இருபது இடங்களில் முத்து தோன்றுவதாக குறிப்பிடுகின்றது. 

பொழிப்புரை:

உடல் உணரும் ஆறு சுவைகளாலும், உடல் கேட்கும் ஏழு இசைகளாலும், எட்டு குணங்களாலும் அறிய முடியாத இறைவன், அனைவரும் விரும்பும் நான்கு வேதங்களில் சொல்லப்பட்டுள்ள பொருட்களையும் கடந்து நிற்பதால் நான்கு வேதங்களாலும் அறிய முடியாதவனாக உள்ளான். மேலே குறிப்பிட்டவாறு அறியப்படாமல் இருப்பவனும், ஒழுக்கமான வாழ்வு கொண்டு அன்புடன் அணுகினால் மட்டுமே தெளிவாக அறியப்படுபவனும், பளிங்கு போன்று திருமேனியில் உமை அன்னையை ஒரு பாகத்தில் ஏற்றுக் கொண்டுள்ளவனும், தங்களுக்குளே மாறுபாடு ஏதுமின்றி ஒத்த கருத்துடன், பாசுபதம் மாவிரதம் காபாலிகம் வாமனம் பைரவம் மற்றும் சைவம் ஆகிய சமயங்களால் தலைவனாக ஏற்றுக் கொள்ளப்படுபவனும்; ஆகிய சிவபெருமான் விருப்பமுடன் உறையும் ஊர் முதுகுன்றமாகும். தெளிந்த நீரினை உடைய மணிமுத்தாறு நதி மலையின் கண் உள்ள மூங்கில்கள் உதிர்க்கும் முத்துக்களை வாரிக் கொணர்ந்து சேர்க்கும் கரைகளை உடைய ஊர் முதுகுன்றமாகும்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.