/

128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 3

பெண்களின் கண்களுக்கு

News image
Updated On :1 மே 2019, 12:38 pm


பாடல் 3:

    போழு மதி தாழு நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன்
    யாழின் மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதி தான்
    வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடலார்
    தாழை முகிழ் வேழ மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே

விளக்கம்:

பிராட்டியின் கூந்தல் மற்றும் முகத்தின் அழகினை முதல் இரண்டு பாடல்களில் கூறும் சம்பந்தர் இந்த பாடலில் கண்களின் அழகினை, மாவடு போன்று கண்கள் என்று குறிப்பிடுகின்றார். பெண்களின் கண்களுக்கு மாவடுவினை உவமையாக சொல்வது இலக்கிய வழக்கு; நமக்கு திருவாசகம் பொற்சுண்ணம் பதிகத்தின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகின்றது. தன்னையும் ஒரு பெண்ணாக பாவித்துக் கொண்டு பெருமான் நீராட நறுமணம் கொண்ட பொடி தயார் செய்யவேண்டும் என்று மாணிக்கவாசகர் விரும்புகின்றார். பெருமானுக்கு பொற்சுண்ணம் இடிக்க அழகிய கண்கள் கொண்ட பெண்களை அழைக்கும் அடிகளார், அவ்வாறு வரும் பெண்கள் பெருமானின் புகழினை தன்னுடன் சேர்ந்து பாடவேண்டும் என்றும், புறத்தே பெருமானின் அடியார்கள் ஒருவரும் இல்லாத வண்ணம் அனைவரும் கலந்து கொண்டு பெருமானுக்கு பொற்சுண்ணம் இடிக்க வேண்டும் என்று விரும்புகின்றார். எனவே தான் வரும் பெண்கள் மற்றவரை கூவி அழைக்க வேண்டும் என்றும் கூறுகின்றார். பெருமானுக்கு பொற்சுண்ணம் இடிக்கும் திருப்பணியில், அடியார்கள் எவரையும் விட்டு விடாமல் ஈடுபடுத்த வேண்டும் என்ற தன்னலமற்ற ஆசை இங்கே வெளிப்படுகின்றது. இவ்வாறு அனைவரும் ஈடுபட்டு செய்வதன் பலன் என்ன என்பதையும் இந்த பாடலில் அடிகளார் உணர்த்துகின்றார். பிராட்டியுடன் பெருமான் தோன்றி அனைவரையும் ஆட்கொள்ளுவார் என்று கூறி திருப்பணியில் கலந்து கொள்ளுமாறு ஊக்குவிப்பதை நாம் இந்த பாடலில் உணரலாம்.   

    பூவியல் வார்சடை எம்பிராற்கு பொன் திருச்சுண்ணம்
           இடிக்க வேண்டும்
    மாவின் வடுவகிர் அன்ன கண்ணீர் வம்மின்கள் வந்து
           உடன் பாடுமின்கள்
     கூவுமின் தொண்டர் புறம் நிலாமே குனிமின் தொழுமின்
           எம் கோன் எம் கூத்தன்
    தேவியும் தானும் வந்து எம்மை ஆளச் செம்பொன் செய்
           சுண்ணம் இடித்தும் நாமே

போழும்=பிளந்த, வட்டத்தின் ஒரு பகுதியாக பிளந்த சந்திரன்; தாழுநதி=தாழ்ந்து கீழே பாய்ந்து இறங்கிய கங்கை நதி; பொங்கரவு=சீறும் பாம்பு; புன்சடை=செம்பட்டை நிறத்தில் உள்ள சடை; புரி=முறுக்கிய; மாழை=மாவடு; தாழை முகிழ்=தாழையின் மொக்கு; ஞாழல்= புலிநகக் கொன்றை; மன்னு=நிலையாக விளங்கும்; புனை=புன்னை மரங்கள்; மாடு=அருகே;  வுந்துதரு=தலையில் சூட்டிக் கொள்ளாமல் அலட்சியம் செய்யும்; ஏழை=தனியாக தனக்கென்று எந்த செயலும் இல்லாமல் இறைவனது எண்ணங்களை செயல்படுத்தும்; தாழுநதி என்ற சொல் தண்ணீரின் தன்மையை, மேடான இடத்தில் நில்லாமல் கீழே பாயும்  தன்மையை உணர்த்துவதாகவும் பொருள் கூறுவார்கள். உயர்ந்த சடையில் தேக்கிவைக்கப் பட்ட கங்கை நதி கீழே வாராமல் நிறுத்திய பெருமானின் வல்லமை மலைப்புக்கு உரியது.     

பொழிப்புரை:

வட்ட வடிவினைப் பிளந்தது போன்று தோன்றும் ஒற்றைப் பிறைச் சந்திரனையும், சீறிப் பாய்கின்ற இயல்பினை உடைய பாம்பினையும், வேகமாக கீழே இறங்கி வந்த கங்கை நதியையும் தனது சுருண்ட செம்பட்டை நிறத்தில் உள்ள சடையில் தங்கும் வண்ணம் செய்த பெருமான், யாழின் ஒலி போன்று இனிய குரலினையும் மாவடு போன்று அழகிய கண்களையும் உடையவளும், தனக்கென்று தனியாக எந்த செயலும் இல்லாமல் எப்போதும் இறைவனின் எண்ணங்களை செயல்படுத்தும் தன்மை உடையவளும் ஆகிய பார்வதி தேவியுடன் இணைந்து இருக்கும் பதி சண்பை நகர் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமே. வாழை மற்றும் புலிநகக் கொன்றை, மகிழ மரம், புன்னை மரம் ஆகிய மரங்கள் அடர்ந்து விளங்கும் சோலைகளின் அருகே, தாழை செழித்து வளர்ந்து காணப்படுவதால் யானையின் தந்தங்கள் என்று தவறாக கருதப்பட்டு தங்களது கூந்தலில் சூட்டிக் கொள்ளாமல் மகளிரால் அலட்சியம் செய்யப்படும் மடல்கள் பொருந்திய தாழை மொக்குகள் படர்ந்து கிடக்கும் சண்பை நகரமே பெருமான் உறையும் பதியாகும்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.