/

128. எந்தமது சிந்தை பிரியாத - பாடல் 9

நீண்ட இறகுகளை

News image
Updated On :9 மே 2019, 6:30 pm

பாடல் 9:

    நீலவரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவமாம்
    மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவமான வரதன்
    சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம்
    சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே

விளக்கம்:

வரை=மலை; நீலமலை போன்று நெடிய உருவம் கொண்ட திருமால்; இனம்=சிறந்த; நேர்=நேராக உயர்ந்த நெடிய உருவம்;  நீள்=நீண்ட இறகுகளை உடைய அன்னப் பறவை; பரமன்=அனைவரிலும் உயர்ந்தவன்; பிரமன் மற்றும் திருமால் காண முடியாமல் திகைத்து நின்ற தன்மை அவர்கள் இருவரையும் விடவும் பெருமான் உயர்ந்தவன் என்று உணர்த்துவதால், பரமன் என்றார் திருப்பெயரால் பெருமானை அழைக்கின்றார்.  சூழ் புறவு= தலத்தை சூழ்ந்த இடங்கள்; பயில்=தொடர்ந்து செய்யப்படும் ஒரு செயல்.

பொழிப்புரை:

பெரிய நீலமலை போன்ற உருவமுடைய பன்றியாக வடிவெடுத்த திருமாலும், நீண்ட இறகுகளை உடைய அன்னப்பறவையாக உருவெடுத்த பிரமனும் காண முடியாத வண்ணம்  நெடிது வளர்ந்த தீயுருவமாக நின்றவன் பெருமான். அடியார்களுக்கு வேண்டும் வரங்கள் அளிக்கும் வரதனாகிய பெருமான், சிறந்த மீன்கள் போன்றும் வேல் போன்றும் நீண்டும் நுனியில் கூர்மையாகவும் உள்ள கண்களைக் கொண்ட உமையன்னையுடன் மகிழ்ந்து உறையும் தலம், சண்பை நகரம் என்று அழைக்கப்படும் சீர்காழி நகரமாகும். இந்த தலத்தைச் சுற்றியுள்ள வயல்களில் நெற்பயிர்கள் செழித்து வளர, அருகில் உள்ள சோலைகளில் கிளிகள் குயில்கள் மற்றும் ஏனைய பறவைகள் தொடர்ந்து வசிக்கின்றன.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.