பாடல் 11:
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர்
சாரின் முறல் தென் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல்
பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரை செய்
சீரின் மலி செந்தமிழ்கள் செப்பும் அவர் சேர்வர் சிவலோக நெறியே
விளக்கம்:
வார்=மார்பு கச்சை; நங்கை=மகளிரில் சிறந்தவள்; சங்கரன்=நன்மையைச் செய்பவன்; சாரின்= வீதி முதலான இடங்கள்; மலி=மிகுந்த, மிகுந்த புகழ் என்பதை நிலையான புகழ் என்று பொருள் கொள்ளவேண்டும்.
பொழிப்புரை:
கச்சை பொருந்திய மார்பங்களை உடையவளும், பெண்களில் சிறந்தவளும் ஆகிய உமை அன்னையுடன், அனைத்து உயிர்களுக்கும் நன்மை விளைவிப்பவனாகிய சங்கரன் மகிழ்ந்து உறைவதும், கடலலைகள் எழுப்பும் ஒலி போன்று ஆரவாரம் நிறைந்த ஒலிகள் வீதிகளிலிருந்து உயர்ந்து எழுந்து வானளாவச் செல்லும் சிறப்பினை உடையதும், ஆகிய சண்பை நகரின் மீது, உலகினில் நிலையான புகழினைக் கொண்டவனும் தமிழ் மொழியில் வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் உரைத்த, சிறப்பு வாய்ந்த இந்த பத்து செந்தமிழ் பாடல்களை முறையாக ஓதும் அடியார்கள் சிவலோகத்தினை அடைவார்கள்.
முடிவுரை:
அழகன் என்று குறிப்பிடப்படும் இறைவனின் துணையாகிய இறைவியின் அழகினை பதிகத்தின் முதல் ஆறு பாடல்களில் குறிப்பிடுவது இந்த பதிகத்தின் தனிச் சிறப்பாகும். பரமனின் பெருமையையும் தேவியின் அழகினையும் பதிகத்தின் முதல் ஆறு பாடல்களில் குறிப்பிட்ட சம்பந்தர், பதிகத்தின் ஏழாவது பாடலில் தலத்தில் வாழும் அடியார்களின் சிறப்பினை, என்றும் மாறாத கொடைத் தன்மையை குறிப்பிடுகின்றார். எட்டாவது பாடலில் தலத்தில் நடைபெறும் திருவிழாவின் சிறப்பு உணர்த்தப் படுகின்றது. ஒன்பதாவது மற்றும் பத்தாவது பாடல்களில் பெருமான் பிராட்டியை விட்டு பிரியாது இருக்கும் தன்மை குறிப்பிடப் படுகின்றது. பத்தாவது பாடலில் நன்மை பயக்கும் நெறியாகிய சிவநெறியை பின்பற்றி அவனது திருநாமங்களை சொல்லி உய்வினை அடையவேண்டும் என்ற அறிவுரை வழங்கப் படுகின்றது. பதிகத்தின் கடைப் பாடலில் இந்த பதிகத்து பாடல்களை முறையாக ஓதி, சிவலோகம் செல்வதற்கான பாதையை வகுத்துக் கொள்ளலாம் என்று பதிகம் ஓதுவதன் பலன் கூறப்படுகின்றது. பெருமானின் திருவடிகளை வழிபாட்டு நல்ல குணங்கள் வரப்பெற்று, இந்த பதிகத்தின் பாடல்களை முறையாக ஓதி சிவலோகம் செல்வதற்கான பாதியினை வகுத்துக் கொண்டு பெருமானின் திருவடிகளில் இணைந்து என்றும் அழியாத ஆனந்தத்தை அனுபவிப்போமாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


