/

129. விளங்கிய சீர்ப் பிரமனூர் - பாடல் 6

பிரமன் வழிபட்ட பிரமாபுரம்

News image
Updated On :17 மே 2019, 6:30 pm

பாடல் 6:

    புண்டரீகத்து ஆர் வயல் சூழ் புறவ மிகு சிரபுரம்
         பூங்காழி சண்பை
    எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு புகலி பூந்தராய்
         தோணிபுரம் சீர்
    வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம் நற்கொச்சை வானவர்
         தம் கோன் ஊர்
    அண்ட அயனூர் இவை என்பர் அரும் கூற்றை உதைத்து உகந்த
         அப்பன் ஊரே

விளக்கம்:

புண்டரீகம்=தாமரை மலர்கள்; ஆர்=நிறைந்த; மிகு=புகழினால் மிகுந்த; அண்ட=அண்டங்களை  படைக்கும்; அரும்=வெல்வதற்கு அரிய; பூங்காழி=அழகு நிறைந்த காழி;

பொழிப்புரை:

தாமரை மலர்கள் நிறைந்த கழனிகளால் சூழப்பட்ட புறவம், புகழினால் மிகுந்த சிரபுரம், அழகு நிறைந்த காழி, சண்பை நகரம், உலகின் எட்டு திசைகளிலும் உள்ளவர்களால் வணங்கப் படும் வெங்குரு, புகலி, பூந்தராய், தோணிபுரம், சிறந்த வண்டுகள் வந்து சேரும் அழகிய சோலைகள் மலிந்து நிறைந்த கழுமலம், அடியார்களுக்கு நன்மை பயக்கும் கொச்சைவயம், இந்திரன் வழிபட்ட வேணுபுரம், பல உலகங்களையும் படைக்கும் பிரமன் வழிபட்ட பிரமாபுரம், என்ற பன்னிரண்டு பெயர்களை உடைய தலமாகிய சீர்காழி தலம், தனது அடியான் சிறுவன் மார்க்கண்டேயனுக்காக இயமனை உதைத்தவனும், நம் அனைவர்க்கும் தந்தையும் ஆகிய இறைவன் உறையும் தலமாகும்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.