பாடல் 6:
விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பாக
உண்ணவனைத் தேவர்க்கு அமுது ஈந்து எவ்வுலகிற்கும்
கண்ணவனைக் கண்ணார் திகழ் கோயில் கனி தன்னை
நண்ண வல்லார்கட்கு இல்லை நமன் பால் நடலையே
விளக்கம்:
அனைத்து உறுப்புகளிலும் கண்ணே மிகவும் அருமையான உறுப்பாக அனைவராலும் கருதப் படுகின்றது. கண் என்பது ஒரு மனிதனுக்கு இன்றியமையாத உறுப்பு. அதனால் தான் மிகவும் முக்கியமாக கருதுவோரை நமது கண் என்று அழைக்கின்றோம். பல திருமுறைப் பாடல்கள் இறைவன் நமக்கு கண் போன்று திகழ்கின்றான் என்று உணர்த்துகின்றன. அத்தகைய பாடல்கள் சிலவற்றை நாம் இங்கே காண்போம். பல்லவனீச்சரம் தலத்தின் மீது அருளிய பதிகத்து பாடலில் (1.65.2) இமையோர்களின் கண்களாய் விளங்குபவன் என்று கூறுகின்றார்.
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தை பிரான் இமையோர்
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்ணுதல் நண்ணுமிடம்
மண்ணார் சோலைக் கோல வண்டு வைகலும் தேன் அருந்தி
பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சரமே
உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் கண் போன்றவன் என்று காறாயில் பதிகத்தின் பாடலில் (2.15.3) சம்பந்தர் கூறுகின்றார். ஏதம்=குற்றம், கேடு, துன்பம்; விண்=வீடுபேறு; எண்= எண்ணம்; எண்ணான்=உள்ளத்தில் நாம் எண்ணுவதற்கு ஏதுவாக எளிமையாக இருப்பவன்; நாம் அவனை நமது மனதினில் எண்ணி துதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவன் மிகவும் எளிமையாக இருக்கின்றான். அவ்வாறு மிகவும் எளிமையாக இருக்கும் இறைவனை எண்ணித் துதிப்போர்க்கு இடர்கள் ஏற்படாது துன்பம் விளையாது என்று கூறுகின்றார்.
விண்ணானே விண்ணவர் ஏத்தி விரும்பும் சீர்
மண்ணானே மண்ணிடை வாழும் உயிர்க்கு எல்லாம்
கண்ணானே கடி பொழில் சூழ் திருக் காறாயில்
எண்ணானே என்பவர் ஏதம் இலாதாரே
பெருவேளூர் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் முதல் பாடலில் (3.64.1) உலகுக்கு கண்ணாகவும் வழிபடும் அடியார்களின் கருத்தாகவும் பெருமான் விளங்குகின்றார் என்று சம்பந்தர் கூறுகின்றார். பேரருளாளன் என்று அழைக்கப்படும் பெருமான், விண்ணவர்களும் மன்னவர்களும் வியக்கும் வண்ணம் அடியார்களுக்கு, அருள் செய்கின்றார் என்று சம்பந்தர் கூறுகின்றார். அண்ணா= அண்ணாமலை;
அண்ணாவும் .கழுக்குன்றும் ஆயமலை அவை வாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள் செய்வார்
கண்ணாவார் உலகுக்குக் கருத்தானார் புரிம் எரித்த
பெண் ஆணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே
கண்ணாகவும் கண்ணின் மணியாகவும் பெருமான் இருப்பதாக அபப்ர் பிரான் திருவையாறு பதிகத்தின் பாடல் (1.13.7) ஒன்றினில் கூறுகின்றார். தனக்கு கண்ணாகவும், கண்ணின் மணியாகவும், தனது கருத்தாகவும், தான் நுகர்ந்து அனுபவிக்கும் பொருளாகவும், இருக்கும் பெருமானை, தனக்கு மிகவும் நெருங்கியவனாக இறைவன் உள்ளான் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம் அண்ணா என்று இறைவனை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இவ்வாறு தனக்கு மிகவும் நெருங்கியவனாக இருக்கும் பெருமானுக்கு அடிமையாக அப்பர் பிரான் மாறியதில் வியப்பேதும் இல்லை. அருத்து=நுகர்ச்சி;
கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் அருத்தானாய்
எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பானாய்
விண்ணானாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே
அண்ணான ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
பாவநாசத் திருப்பதிகத்தின் பாடலில் (4.15.4) காண்பார் காணும் கண்ணான் என்று அப்பர் பிரான் பெருமானை குறிப்பிடுகின்றார். அரிமான் ஏற்று=ஆண் சிங்கம்; கறங்கும்=ஒலிக்கும்; காண்பார் காணும் கண்ணானை என்பதற்கு வேறொரு விதமாகவும் சுவையான விளக்கம் அளிக்கப் படுகின்றது. அன்புடன், திருக்கோயில்களில் உள்ள தனது உருவத்தைக் காணும் அடியார்களின் கண்களாக செயல்பட்டு தனது உருவத்தினை அவர்களுக்கு காட்டும் பெருமான் என்று கூறுகின்றார். பெருமானின் அருளே கண்ணாகக் காணின் அல்லால் அவனது திருவுருவத்தை எவராலும் காண முடியாது என்று அப்பர் பிரான் கூறுவது நமது நினைவுக்கு வருகின்றது.
புறம்பயத்து எம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை
உறைந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளங்கும் ஞாயிற்றைக்
கறங்கும் அருவிக் கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை
அறம் சூழ் அதிகை வீரட்டது அரிமான் ஏற்றை அடைந்தேனே
கயிலாயத் தலத்தின் மீது அருளிய பதிகத்தின் பாடலில் (6.55.11) கண்ணாய் உலகுக்கு நின்றாய் நீயே என்று அப்பர் பிரான் இறைவனை அழைக்கின்றார். கண் என்பதற்கு பற்றுக்கோடு என்று பொருள் கொண்டு, உலகத்தவர் அனைவர்க்கும் பற்றுக்கோடாக இருப்பவன் பெருமான் என்று உணர்த்தப் படுகின்றது என்று பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இறை விரல்=சிறிது நேரமே விரலை வைத்து மலையினை அழுத்தியவன்;
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம்
உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக் கோன் தன்னைப் போற்றி இறை விரலால்
வைத்து உகந்த ஈசா போற்றி
பண்ணார் இசையின் சொல் கேட்டாய் போற்றி பண்டே என்
சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி கயிலை மலையானே
போற்றி போற்றி
நாட்டியத்தாங்குடி என்ற தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (7.15) பாடலில் சுந்தரர் பெருமானை கண்ணா என்று அழைக்கின்றார். தனக்கு கண் போன்று மிகவும் அருமையானவன் பெருமான் என்று இதன் மூலம் சுந்தரர் உணர்த்துகின்றார். குண்டாடி=மூர்க்கத் தன்மை; அன்பினால் மட்டுமே நாம் எதையும் அடைய முடியும் என்பது சைவர்களின் கொள்கை. எனவே அன்பு வழியினைத் தவிர்த்து நாம் வேறு எந்த வகையிலும் செல்லலாகாது என்பதை சுந்தரர் இங்கே உணர்த்துகின்றார். தங்களது மூர்க்கத் தன்மையால் சமணர்களும் சாக்கியர்களும் தாங்கள் அடைய விரும்பும் பொருளினை அடைகின்றனர் என்பதை கேள்விப் பட்டாலும், நேரில் கண்டாலும் அதனை ஒரு பொருட்டாக கருதாமல், சிவநெறியாக உள்ள அன்பு வழியில் தான் செல்வேன் என்று சுந்தரர் இங்கே கூறுகின்றார்.
குண்டாடிச் சமண் சாக்கியப் பேய்கள் கொண்டார் ஆகிலும்
கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன்
தொண்டாடித் தொழுவார் தொழக் கண்டு தொழுதேன் என் வினை போக
நண்டாடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ
திருக்கடவூர் வீரட்டம் தலத்தின் மீது அருளிய பாடலில் (7.28.6), சுந்தரர் தனது கண்ணாகவும் கண்ணின் மணியாகவும் உள்ள பெருமான் என்று குறிப்பிட்டு, பெருமானைத் தவிர்த்து தனக்கு வேறு எவரையும் துணையாக கருத மாட்டேன் என்று கூறிகின்றார். வரு=சொல்ல வருகின்ற;
மண் நீர் தீ வெளி ஆகாசம் வரு பூதங்களாகி மற்றும்
பெண்ணோடு ஆண் அலியாகிப் பிறவா உரு ஆனவனே
கண்ணார் உள் மணியே கடவூர் தனுள் வீரட்டத்து எம்
அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே
வேலை=கடல், இங்கே பாற்கடல்; உண்ணவன்=உண்டவன்; நடலை=துன்பம்; இந்த பாடலில் எமதருமனால் ஏற்படும் துன்பம் ஏதும் இல்லை என்று சம்பந்தர் கூறுகின்றார். பல திருமுறைப் பாடல்களில் நரகத்தில் விளையும் துன்பங்களிலிருந்து பெருமானை நோக்கி செய்யப்படும் வழிபாடு தவிர்க்கும் என்று கூறப்படுகின்றதே தவிர இறப்பு தவிர்க்கப்படும் என்றும் எங்கும் சொல்லப் படவில்லை. மனிதராய் பிறந்த அனைவர்க்கும், ஏன் உலகத்தில் பிறந்த எந்த உயிருக்கும், இறப்பு என்பது நிச்சயம், எனவே அந்த இறப்பினை எவராலும் தவிர்க்க இயலாது. பொதுவாக எந்த உயிரும் உடலிலிருந்து பிரிந்த பின்னர், சூக்கும உடலுடன் நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் எடுத்து செல்லப்பட்டு, ஆங்கே இன்ப துன்பங்களை அனுபவித்து தங்களது வினையின் ஒரு பகுதியை கழித்துக் கொள்கின்றன. பெருமானின் அடியார்களை அவ்வாறு நரகத்திற்கு செல்ல விடாமல் பெருமான் பாதுகாத்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வான் என்பதே திருமுறை ஆசிரியர்கள் உணர்த்தும் பொருள். இதனை நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். .
பொழிப்புரை:
பாற்கடலிலிருந்து பொங்கி எழுந்த கொடிய விடத்தின் தாக்கத்திலிருந்து காப்பாற்றும் பொருட்டு, மிகுந்த விருப்பத்துடன் நஞ்சினை உண்ட பெருமான், அவ்வாறு நஞ்சினை தான் உட்கொண்டு தேவர்களுக்கு அமுதம் அளித்தவன் ஆவான். அவன் உலகினுக்கு, உலகினில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் கண் போன்று மிகவும் அருமையானவனாகத் திகழ்கின்றான். அத்தகைய பெருமான் கண்ணார்கோயில் தலத்தில், நாம் அனைவரும் அவனை வணங்கி, அந்த வணக்கத்தின் பலனை அனுபவிக்கும் பொருட்டு, இனிய கனியாக திகழ்கின்றான். அந்த இனிய கனியினை நெருங்கித் தொழுது வணங்கும் அடியார்களை, இயமனால் ஏற்படும் துன்பங்கள் எவையும் அணுகாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆஷா போஸ்லே மறைவு: ராகுல் காந்தி இரங்கல்

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

அமைச்சர் அன்பில் மகேஸ் வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை!

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


