/

130. தண்ணார் திங்கள் - பாடல் 8

இந்திரனும் திருமாலும் வழிபாட்டு

News image
Updated On :30 மே 2019, 6:30 pm


பாடல் 8:

    பெருக்கு எண்ணாத பேதை அரக்கன் வரைக் கீழால்
    நெருக்குண்ணாத் தன் நீள் கழல் நெஞ்சில் நினைந்து ஏத்த
    முருக்குண்ணாதோர் மொய் கதிர் வாள் தேர் முன் ஈந்த
    திருக் கண்ணார் என்பார் சிவலோகம் சேர்வாரே  

விளக்கம்:

பெருக்கு=பெருமை; வரை=மலை, இங்கே கயிலை மலையினை குறிக்கின்றது; முருக்கு=அழிவு; பேதை=அறிவற்றவன், பெருமான் இராவணனுக்கு தேர் ஈந்ததாக இந்த பாடலில் சம்பந்தர் சொல்வதை நாம் உணரவேண்டும். பதிகத்தின் ஆறாவது பாடலில் பெருமானின் அடியார்களுக்கு இயமனால் துன்பங்கள் ஏதும் ஏற்படாது என்று கூறிய சம்பந்தர், இந்த பாடலில், இயமனால் ஏற்படும் துன்பங்கள் எவ்வாறு தவிர்க்கப்படும் என்பதை உணர்த்துகின்றார். அத்தகைய அடியார்களை, இயமன் நரகத்திற்கு அழைத்துச் செல்வதை தடுத்து, பெருமான் அவர்களை சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார் என்று கூறுகின்றார். முந்தைய ஏழு பாடல்களில் இந்த தலம் சென்று இறைவனை வணங்குமாறு நம்மைத் தூண்டும் சம்பந்தர், உதாரணமாக இந்திரனும் திருமாலும் வழிபாட்டு பயன் அடைந்ததை நமக்கு உணர்த்தும் சம்பந்தர், இந்த தலத்திற்கு நேரில் செல்ல முடியவில்லையே என்று வருத்தம் அடையும் அன்பர்களின் நிலையினை உணர்ந்து அத்தகையோர் தலத்தின் உறையும் பெருமானின் திருநாமத்தினை சொல்லி உய்வினை அடையலாம் என்று கூறுகின்றார்.  

பொழிப்புரை:

திருக்கயிலை மலையின் பெருமையை அறியாத அறிவிலியாக விளங்கிய அரக்கன் இராவணன், கயிலை மலையினை பேர்த்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, பெருமான் தனது கால் பெருவிரலை மலையின் மீது அழுத்தியதன் விளைவால், அரக்கன் மலையின் கீழே நெருக்குண்டு துன்பம் அடைந்தான். அப்போது தனது தவறினை உணர்ந்த அரக்கன், பெருமானின் நீண்ட கழல்களை நினைத்து புகழ்ந்து சாமகானம் பாடியதை கண்ணுற்ற இறைவன், அரக்கனை அவன் அடைந்த துன்பத்திலிருந்து விடுவித்து, அவனுக்கு ஒளிவீசும் வாளொடு தேரினையும் அருளினார். இத்தகைய கருணை உள்ள கொண்ட பெருமானின் திருநாமத்தை, கண்ணார் என்று சொல்லும் அன்பர்கள் சிவலோகம் சென்று சேர்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.