முதல் மரியாதைக்குக் கதையெழுதிய செல்வராஜ் படம் முழுவதும் தன்னுடைய வசனங்களால் அனைவருக்கும் பெருமை சேர்த்திருப்பார். பெரிசுக்கு நெஞ்சுக்குழிக்குள்ள ஏதோ நினைப்பு இழுத்துக்கிட்டு கிடக்கு, எல்லோரையும் நனையாம கூட்டிக்கிட்டு போறியே உன் வயிறு நனையாம இருக்கணுமே, ஆத்துக்கு இரண்டு பக்கம் கரையிருக்கிற மாதிரி ஒரு புருசனுக்கு பொஞ்சாதியும் அத்தைக்காரியும் இருக்கனும்மா, எங்கள மாதிரி பஞ்சம் பொழைக்க வந்தவங்களுக்கு பூசிமொழுகின தரையோ, மாட்டுக்கொட்டகையோ எங்கிருந்தாலும் சரி படுத்தா உடனே தூங்கிற ஜாதிய்யா எங்களுது, மண்ணத் தின்னாலும் மறுபடியும் பசிக்கிற வயிறுய்யா, வில்லங்கம் இல்லாத வயிறுய்யா, பறவை மிருகங்களெல்லாம் எந்த ஜாதிய்யா அதெல்லாம் சந்தோசமா வாழல, நல்லவேளை நாடார் குருவி, தேவர் கிளி, நாயக்கர் கொக்குன்னு சாதி பிரிக்கல, உசுரப் பிடுங்கிற எமன்கிட்டயும் கயிறு இருக்கு... காப்பாத்தற சிவன்கிட்டேயும் கயிறு இருக்கு, வேசம் போடாதய்யா உன் மனசுக்குள்ளே எதையெதையோ மறைச்சு வைச்சிருக்கே, அதில பெரிய வீட்டுக்கதையும் இருக்கு, இந்த சின்ன சிறுக்கி மனசும் இருக்கு, இடுப்பில இருக்கிற குழந்தை சுமையையே எங்கயாவது இறக்கி வைக்க மனது அலையறப்போ இவ்ளோ பெரிய சுமையை இத்தனை வருசமா எப்படிப்பா சுமந்துகிட்டு இருந்தீங்க, மாப்பிள்ளையாக இல்ல மனுசனா இருக்க விரும்பறேன், தீர்ந்து போன கணக்க திருப்பி பார்க்க வந்தியா வரவுக்கும் செலவுக்கும் சரியா போச்சே இப்ப வம்பு எதுக்குடா உனக்கு... என படம் முழுவதும் தத்துவம் போல கிராமத்தார்களின் கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் இன்றும் உயிர் வாழ்கிறது. குறிப்பாக குயில் பேசும் வசனங்களும், பொன்னாத்தாவின் கிராமப் பழமொழிகளும் பொருத்தத்துடன் இருந்தன.