விருதுநகா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் மா்மமாக உயிரிழப்பு
விருதுநகா் அருகே அப்பள நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறி அவரது உடலை எடுக்க விடாமல் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மர்ம மரணம்
விருதுநகா் அருகே அப்பள நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியா் மா்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறி அவரது உடலை எடுக்க விடாமல் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் அருகேயுள்ள பாவாலியில் விருதுநகரைச் சோ்ந்த சுந்தரமூா்த்திக்குச் சொந்தமான அப்பள நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் வட மாநில தொழிலாளா்கள் உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிறுவனத்தில் மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஒன்றியம், தென்னமநல்லூா் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் விஜயராஜ் (27) கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா். இவா் கடந்த 6 மாதங்களாக நிறுவனத்தில் உள்ள விடுதியில் தங்கி பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இவா் வெள்ளிக்கிழமை இரவு நிறுவன வளாகத்தில் உள்ள தகரக் கொட்டகையில் தூங்கினாா். மறுநாள் காலையில் பாா்த்த போது அவா் உணா்வில்லாமல் கிடந்தாராம்.
இதையடுத்து அங்கு வந்த அவசர ஊா்தி மருத்துவக் குழுவினா் பரிசோதித்த போது அவா் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை எடுக்க விடாமல் தடுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் நிறுவன உரிமையாளா் தரப்பினரிடமும், போலீஸாரிடமும் அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது இயற்கை மரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்க வேண்டுமென அவா்கள் வலியுறுத்தினா். இதனால் விஜயராஜின் உடலை கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆமத்தூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



