வாழ்வை மாற்றிய 15 வினாடி சிரிப்பு! பல மீம்களில் டீ கப்புடன் சிரிக்கும் அந்த சிறுவன்!
பல மீம்களின் நிறைவில் டீ கப்புடன் சிரிக்கும் அந்த சிறுவனைப் பற்றிய தகவல்..


15 வினாடி சிரிப்பு ஒருவரது வாழ்க்கையையே மாற்றும் என்று சொன்னால் நம்ப முடியாது, ஆனால், இந்த டிஜிட்டல் உலகில் எதுவும் நடக்கலாம்.
அப்படித்தான், தன்னுடைய முதலாளி சொன்ன ஒரு நகைச்சுவையை, கேட்டுக் கொண்டிருந்த அருண் குமார் என்ற 15 வயது சிறுவன், தன்னை மறந்து சிரித்த 15 வினாடி சிரிப்பு அவனது வாழ்க்கையையே புரட்டிப்போட்டிருக்கிறது நல்ல முறையில். இவர் ஆந்திரத்தைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 18 வயதாகும் அருண் குமாரின் அந்த சிரிப்பை நாமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைகள் பார்த்து சிரித்திருப்போம். அதாவது ஒவ்வொரு நகைச்சுவை மீம்களின் இறுதியிலும், அருண் குமாரின் சிரிப்பு விடியோதான் நிறைவாக இருக்கும்.
ஒரு சில வினாடி சிரிப்பினால், எதையும் மாற்ற முடியும் என்று நிரூபித்திருக்கிறது அருண் குமாரின் வாழ்க்கை. இன்று அருண் குமாரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர் யார்? எங்கிருக்கிறார், என்ன பெயர் என்று வேண்டுமானால் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், அவரது அந்த சிரிப்பு.. தெரியாதவர்கள் இருக்க முடியாது.
அருண் குமார் தன்னுடைய 10வது வயதில், குடும்ப வறுமை காரணமாக நான்காம் வகுப்பிலேயே பள்ளியை பாதியில் நிறுத்திவிட்டு வேலைத் தேடிக் கொண்டிருந்த போது, லாரி ஓட்டுநர் நேரு என்பவர், அருண் குமாரை தன்னுடைய உதவியாளராக வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.
ஒருநாள், மாலை வேளையில், தேநீர் இடைவேளையின்போது, நேரு சொன்ன ஒரு நகைச்சுவையைக் கேட்டுக் கொண்டிருந்த அருண் குமார் மனம் விட்டு சிரித்ததை நேரு விடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட, அது யாரும் எதிர்பாராத வகையில் வைரலானது. ஒரு விடியோ வைரலாகும். அதனை பலரும் பார்ப்பார்கள். ஒரு கோடி பார்வையாளர்கள் என்று சொல்வார்கள் அவ்வளவுதான். ஆனால், அருண் குமார் சிரிப்போ வேறு வகையில் சாதனை படைத்தது. பலரும் அந்த சிரிப்பை தங்களது மீம்ஸ்களின் இறுதியில் சேர்க்க ஆரம்பித்தனர். அது முடிவு பெறாமல் இன்றுவரை தொடர்கதையாக உள்ளது.
அப்போதுதான் அருண் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகத் தொடங்கியது. அருணை பணிக்கு அமர்த்திய நேருவும், குடும்ப வறுமையால் கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு லாரி ஓட்டும் வேலைக்கு வந்தவர். தன்னைப் போல அருண் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவனுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்து படிக்க வைத்து 10ஆம் வகுப்புத் தேர்வெழுத வைத்தார்.
லாரி ஓட்டுநர் அறையே ஒரு சிறிய வகுப்பறையாக மாறியது. அருணுக்கு பாடங்களை சொல்லிக் கொடுத்தார். கடைசியாக அருண் பத்தாவது பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, படிப்பை பாதியில் விட்ட அருண் என்ற அடையாளத்தை மாற்றி 10வது படித்த அருண் என மாறியிருக்கிறது.
ஒரு அதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம், அதனைத் திறந்து சாதனை படைக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த வாழ்க்கைப் பாடம் கற்றுத் தருவதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...