ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரவில் தயிர் சாப்பிடலாமா?

எனக்குக் கெட்டியான தயிர் சாதம் என்றால் உயிர். அதில் இஞ்சி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவதில் அலாதியான பிரியம். ஆனால் சிலர் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது என்கின்றனர். அது ஏன்? மஞ்சுளா, திருந
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: இரவில் தயிர் சாப்பிடலாமா?
Updated on
2 min read

எனக்குக் கெட்டியான தயிர் சாதம் என்றால் உயிர். அதில் இஞ்சி, கடுகு, பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவதில் அலாதியான பிரியம். ஆனால் சிலர் இரவில் தயிர் சாப்பிடக்கூடாது என்கின்றனர். அது ஏன்?

மஞ்சுளா, திருநெல்வேலி.

தயிரை உணவுப் பொருளாக உபயோகிக்கும் போது சில கட்டுப்பாடுகளை ஆயுர்வேதம் உபதேசிக்கிறது. அவை-

தயிரை இரவில் சாப்பிடக் கூடாது. நெய், சர்க்கரை, பயத்தம் பருப்பு, தேன், நெல்லி முள்ளி இவைகளில் ஒன்றைச் சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிடக்கூடாது. தயிரை சுடவைத்து சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் ஜ்வரம், தலைசுற்றல், சோகை, தோல் வியாதிகள், காமாலை ஏற்படும்.

உணவுப் பொருள்களில் சிறந்த தயிர், பகலில் அனுமதிக்கப்பட்டாலும் இரவில் தடுப்பதன் நோக்கம் என்ன? நெய், சர்க்கரை போன்றவை சேர்ப்பதால் அதில் ஏற்படும் விசேஷ தகுதி என்ன? ஜ்வரம், காமாலை போன்ற நோய்கள் ஏற்பட விசேஷ காரணம் என்ன?

தயிரின் குணங்கள்: வாய்க்கு ருசி அளிப்பது. பலத்தை வளர்ப்பது. உடல் உஷ்ணத்தைக் கொடுப்பது. வாத தோஷத்தைக் குறைப்பது, உடலை பருக்கச் செய்வது, எளிதில் ஜீரணம் ஆகாதது, கபத்தை அதிகரிக்கும்.

தயிர் குளிர்ச்சி என்று சிலர் நினைக்கின்றனர். தயிரின் சுவை புளிப்பாக இருப்பதால் அது உடல் சூட்டை அதிகரிக்கச் செய்யும். பசி ஜீரண சக்தி இவைகளை வளர்க்கும் சக்தி உஷ்ணமான பொருளுக்குத்தான் இருக்கும்.

முன்னிரவு கபத்தின் காலம். அப்போது தயிரைச் சாப்பிட்டால் கபதோஷம் அதிகரித்து அதனால் செரிமானக் குறைவு, மூச்சுத் திணறல், இருமல் முதலியவை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனுடைய பிசுபிசுப்புத் தன்மையால் உடலிலுள்ள உட்புறக் குழாய்களில் தடை ஏற்படும். அதனால் பித்தத்திற்கும், ரத்தத்திற்கும் சேர்க்கை இல்லாததாலும், பித்தம் வெளிப்படுவதில் தாமதம் ஏற்படுவதாலும் சோகை, காமாலை, தோல் வியாதிகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அதனால் புளித்த தயிர் சாதத்தை நீங்கள் இரவில் சாப்பிடவேண்டாம்.

அதையும் மீறி நீங்கள் இரவில் தயிரை சாப்பிட விரும்பினால் வரட்சியுள்ள, துவர்ப்புச் சுவைமிக்க, வாயுவை அதிகப்படுத்தாத பயத்தம் பருப்புக் கஞ்சி, சீரகம், பெருங்காயம், இந்துப்பு சேர்த்துச் சாப்பிட நல்லது.

தயிருடன் தேன் சேர்த்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது. உட்புறக் குழாய்களில் அடைபட்டுப் போகும் நிலைமை இதன்மூலம் நீங்கலாம். நெல்லிக்காய் புளிப்பாக இருந்தாலும், அதிலுள்ள துவர்ப்பு, ரத்தத்தை புஷ்டியாக்குகிறது. தனித் தயிரால் ஏற்படும் பித்த சீற்றத்தை நெல்லிக்காயைச் சேர்ப்பதன் மூலம் தவிர்க்கலாம். சர்க்கரை தயிரின் புளிப்பை மாற்றி அதனுடைய சூட்டையும் குறைத்து விடுகிறது. அதனால் இச்சரக்குகளின் சேர்க்கையை தயிருடன் உணவாக ஏற்க நம் முன்னோர் வற்புறுத்தியுள்ளனர்.

நீங்கள் காலை வேளையில் தயிர் சாதத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிட கபம் வளராமல் கட்டுப்படுத்தலாம். உணவின் முடிவில் தயிர்சாதம் சாப்பிட்டால் நெல்லிக்காய் சேர்த்துச் சாப்பிடவும்.

இனிப்பான தயிர் லஸ்ஸி வடிவில் விற்கப்படுகிறது. இதைப் பெருவாரியான மக்கள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். பசி உள்ள வேளையில் இதைச் சாப்பிடுவதே நல்லது. அதிகமாகப் புளித்த தயிர் சாதம் சாப்பிட நல்லதல்ல. ஜீரணம் தாமதமாகும். இரைப்பையில் புளிப்பு அதிகமாகி குடல் வேக்காளம், ஸ்தம்பித்த நிலை, தலைசுற்றல் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். அதனால் புளித்த தயிரை ஊறுகாய்களில் சேர்த்தோ, மோர்க்குழம்பு போன்றதாகக் காய்ச்சியோ அதிலுள்ள புளிப்பையும் பிசுபிசுப்பையும் குறைத்து உபயோகிப்பது நல்லது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com