சொந்தத் தொழிலா? வேண்டவே வேண்டாம். எதற்குத் தேவையில்லாத ரிஸ்க்? எங்கேயாவது வேலைக்குப் போய்ச் சம்பாதிப்பதே நல்லது என்று ஆண்களே ஒதுங்கிப் போகும் காலம் இது. ஆனால் திருச்சியில் பெண்கள் சொந்தத் தொழில்கள் செய்கிறார்கள். பாக்கு மட்டை செய்வது, ஆயத்த ஆடைகள் செய்வது, ஊறுகாய் செய்வது, சானிட்டரி நாப்கின் செய்வது போன்ற தொழில்களை மட்டுமல்ல, ஆண்கள் போல வெல்டிங் பட்டறைகள் கூட வைத்திருக்கிறார்கள். பெண்கள் இந்த அளவுக்குத் துணிந்து தொழில்முனைவோர்களாக உருமாறியிருப்பதற்குத் தூண்டுகோலாக இருப்பவர் மணிமேகலை. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் மகளிர் இயல் துறையின் தலைவராகவும், பேராசிரியராகவும் பணிபுரியும் மணிமேகலையின் இன்னொரு அவதாரம்: தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கத்தின் இயக்குநர், தலைவராக இருப்பது. இந்தச் சங்கத்தின் மூலம் நிறைய பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க பல்வேறு பணிகளை அயர்வில்லாமல் செய்துவரும் அவரிடம் பேசினோம்.