ஏற்கனவே அமெரிக்காவில் திருமணமான ஒருவன், இங்குள்ள ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று, அவளுக்குப் பலவிதங்களில் தொல்லை கொடுக்கிறான். ஒருகட்டத்தில் பணத்திற்காக அவளை இன்னொருவனின் படுக்கையறையில் தள்ளவும் முயற்சிக்கிறான். அதற்கு உடன்படாத அந்தப் பெண், அதனால் ஆத்திரமடைந்து அவனைக் குத்திவிடுகிறாள். அவள் கைது செய்யப்படுகிறாள். அவளை எப்படி மீட்பது என்று தெரியாமல் இங்குள்ள பெற்றோர் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் வழக்கறிஞராக உள்ள சிம்ரன், அந்தப் பெண்ணுக்கு உதவுகிறார். கதைப் போக்கில் அமெரிக்க மாப்பிள்ளைக்குப் பெண் கொடுப்பதானால் என்ன என்ன விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்? என்னென்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்? என்பது போன்ற நிறையத் தகவல்களைச் சொல்லியிருக்கிறோம். வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், மக்களுக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லியிருப்பதுதான் இந்தத் தொடரின் வித்தியாசமான தன்மை என்று நான் நினைக்கிறேன்.