

என் வயது 51. இரண்டு வருடங்களாக காலில் மற்றும் தலையில் புண்கள் தானாக தோன்றுகின்றன. அய்ற்ண்க்ஷண்ர்ற்ண்ஸ்ரீ மாத்திரைகள் சாப்பிட்டாலும் குணமாக ரொம்ப நாட்கள் ஆகின்றது. குணமானதும் அடுத்த இடத்தில் புண் தோன்றுகிறது. எதிர்ப்பு சக்தி குறைவால் வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். எனக்கு எவ்வித கெட்ட பழக்கமும் கிடையாது. காபி, டீ அருந்துவதில்லை. சுகர், கொலஸ்ட்ரால், பிரஷர் இல்லை. நான் என்ன மாதிரியான மருந்துகள் எடுத்துக் கொண்டால் புண்கள் வராமல் தடுக்கலாம்?
ஈ.சரவணன், பாண்டியன் நகர், மதுரை.
இரத்தத்தில் காந்தலை ஏற்படுத்தக் கூடிய ஒரு சில உணவுப் பொருட்களாகிய காரம், புளி, உப்பு வகைகளை உணவில் அதிகமாகச் சேர்ப்பது, பட்டை சோம்பு, கரம்மசாலா, எண்ணெய் வகையறாக்களால் தயாரிக்கப்படும் புலால் உணவை அதிகமாகச் சாப்பிடுவது, புளித்த தயிர், புளிப்பான ஊறுகாய், பழைய சோறு போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவது, தண்ணீர் விட்டு குளிக்கும்போது தோலிலுள்ள அழுக்கைப் போக்குவதற்காக அதிக அளவில் சோப்பை உடலில் தேய்த்துக் குளிப்பதால் ஏற்படும் வறட்சி, க்ளோரின் ப்ளீசிங் பவுடர் ஆகியவற்றை அதிக அளவில் சேர்க்கப்படும் தண்ணீரில் குளித்தல், தோலில் நெய்ப்பின்றி வறண்டநிலையில் அதிகமாக வெயிலில் சுற்றித் திரிவது, உட்புற நெய்ப்பைத் தரும் நெய், வெண்ணெய், உளுந்து, எள்ளு, வெந்தயம் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்க்காதிருப்பது, இரவு படுக்கையை வெயிலில் போட்டு காய வைக்காமல் உதறாமல் தும்பு தூசி மற்றும் அதிலுள்ள அணுக்கிருமிகளை நீக்காமல் அதன்மீதே படுத்து உறங்குவது, லாஹிரி வஸ்துகளாகிய மதுபானம், புகைப்பிடித்தல், புகையிலை போன்றவற்றின் பயன்பாடுகள், சிறு சிறு விஷயங்களுக்குக் கூட பொறுமையின்றி கோபப்படுதல், அணிந்து கொண்டிருக்கும் ஆடைகளில் சோப்புத்துகள் நன்றாக விலகாதவாறு நீரில் அலசி வெயிலில் காய வைக்காதிருத்தல், மற்றவரின் ஆடை அணிகலன்களை அணிதல், தோல் மற்றும் இரத்தத்தை சுத்தப்படுத்தும் வேப்பெண்ணெய், கடுகெண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றில் ஒன்றை உடலில் தேய்த்துக் குளிக்காதிருத்தல் முதலிய சில காரணங்களால் உடலில் புண்கள் ஏற்படக்கூடும்.
மேற்கூறிய உணவு மற்றும் செயல்களில் செய்யக்கூடிய தவறுகளால் தோல், இரத்தம், மாமிசம் மற்றும் மேதஸ் எனப்படும் உட்புற தாதுக்களிலும் நிணநீர் க்ரந்திகளில் ஏற்படக்கூடிய கிருமித்தொற்று, அவற்றில் ஏற்படக்கூடிய பிசுபிசுப்பு, கசிவு, மேற்புறத் தோலில் புண்களைத் தோற்றுவிக்கிறது. உணவிலும் செயலிலும் காட்டக்கூடிய ஒரு கவனமின்மையே புண்கள் ஏற்படக் காரணமாகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அழித்துவிடக்கூடிய உணவு மற்றும் செயல்பாடுகளே இந்த புண்கள் ஏற்படக் காரணமாகின்றன.
மேற்குறிப்பிட்ட கிருமித்தொற்று, பிசுபிசுப்பு மற்றும் கசிவு ஆகியவற்றை உட்புற தாதுக்களிலிருந்து அழித்து நீர்த்து வெளியேற்றச் செய்யும் ஒரு சில மூலிகை மருந்துகளாகிய நன்னாரி வேர்ப் பட்டை, வேப்பம்பட்டை, சரக்கொன்றைப்பட்டை, அரசம்பட்டை, ஆலம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை, கருங்காலிக்கட்டை, ஏழிலம்பாலைப்பட்டை, புங்கம்பட்டை போன்றவற்றை வகைக்கு ஐந்து கிராம் எடுத்து பெருந்தூளாக உடைத்து வைத்துக் கொண்டு அதில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். 125 மில்லி லிட்டராக இந்த தண்ணீர் வற்றியதும் வடிகட்டி வைத்துக் கொண்டு காலையில் சுமார் 65 மில்லி லிட்டரும், மாலையில் மீதமுள்ள 60 மில்லி லிட்டரும் வெதுவெதுப்பாக வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் சாப்பிட்டு வர நல்லதொரு பலனைத் தரும். இதே மூலிகைப் பட்டைகளை வகைக்கு 200 கிராம் எடுத்து சுமார் மூன்று லிட்டர் தண்ணீரில் நன்றாக வேகவிடவும். ஒன்றரை லிட்டராக அவை குறுகியதும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். சாதாரண தண்ணீரில் குளித்த பிறகு இந்த மூலிகைத் தண்ணீரை உச்சந்தலை முதல் கால் வரை விட்டுக் கொள்ள தோல் பகுதியில் ஏற்படக்கூடிய புண்களை விரைவில் ஆற்றும்.
உட்புற பிசுபிசுப்பை இரத்தம் மற்றும் நிணநீர் க்ரந்திகளிலிருந்து அகற்றக்கூடிய ஆரக்வதாதி கஷாயம், படோல கடுரோஹிண்யாதி கஷாயம், படோலமூலாதி கஷாயம், திக்தகம் மற்றும் மஹாதிக்தகம் கஷாயம் ஆகியவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி நன்றாகக் கேட்டறிந்து ஒன்று அல்லது இரண்டை மட்டும் தேர்வு செய்து சாப்பிட்டு வர புண்கள் விரைவில் ஆறக்கூடும். கசிவு அல்லாத வறட்டுப் புண்களாக மட்டுமே ஏற்படுமாயின் மூலிகைத் தைலங்களாகிய நால்பாமராதி, தினேசவல்யாதி, ஏலாதி, தூர்வாதி போன்றவற்றில் ஒன்றை மட்டும் வெளிப்புறம் பயன்படுத்தலாம். இப்படியாக உள்ளும் புறமும் மருந்துகளைச் சாப்பிடும் தறுவாயில் மேற்குறிப்பிட்ட உணவு மற்றும் செயல்பாடுகளைத் தவிர்ப்பதின் வாயிலாக நோய்எதிர்ப்பு சக்தியை நீங்கள் வளர்த்து ஏற்பட்டுள்ள உபாதையிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.