குழந்தைகள் பிறப்பது என்பது இயற்கையான நிகழ்வு என்பது போய், கர்ப்பம் என்பது ஒரு வியாதி, உபாதை என்று கருதப்பட்டு நவீனமயமான மருத்துவமனைகளில்தான் பிரசவம் செய்விக்கப்பட வேண்டும் என்ற மேற்கத்திய மோகம் கிராமப்பகுதிகளில் வாழும் பாமர மக்களிடையே கூட வேரூன்றிவிட்டது. சிசேரியன் முறை மூலம் குழந்தைகளை வெளியே எடுப்பது அபூர்வமாக இருந்ததுபோய் 98 சதவீதம் சிசேரியன் முறை செய்யப்பட வேண்டியுள்ளது. சுகப்பிரசவம் இயற்கையாக ஏற்பட ஆயுர்வேதமுறையில் ஆலோசனைகள் கூறவேண்டும்.
- எஸ்.அனந்தராமன், பிரசாந்தி நிலையம்.
கர்ப்பமுற்ற ஒரு பெண், உணவில் வெண்ணெய், நெய், பால் போன்றவற்றை முக்கியமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் கரு வளரும் கருப்பையில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய அபானன் எனும் வாயுவைச் சீற்றமடையாதவாறு பார்த்துக் கொள்கிறது. அடி வயிற்றில் வாயுவினுடைய சீற்றம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதற்கு கர்ப்பிணிப் பெண் சில விஷயங்களைத் தவிர்க்கவேண்டும். அவை அதிக தேகப்பயிற்சி, சுமை தூக்குதல், உடலை கனமான துணியால் போர்த்திக்கொள்ளுதல், அகாலத்தில் கண் விழித்தல், தூங்குதல், கடினமான ஆசனங்களில் அமர்ந்திருத்தல், முழங்கால் மேல்நோக்கி வைத்துக் கொண்டு உட்கார்தல், வருத்தம், கோபம், பயம், மன அதிர்ச்சி போன்ற வேகங்களை அடக்குதல், ஆசையை அடக்குதல், பட்டினி, வழிநடத்தல், ஊடுருவும் தன்மை, சூடான வீரியம் கொண்டவை, எளிதில் செரிக்காதவை, வயிற்றில் வாயுவை ஏற்படுத்துபவை ஆகிய குணமுள்ள உணவு உட்கொள்ளுதல், சிவப்பு ஆடை தரித்தல், பள்ளம், கிணறு ஆகியவற்றைப் பார்த்தல், மது, மாமிசம், மல்லாந்து படுத்தல் ஆகியவற்றையும் மற்றும் அறிவுடைய பெண்கள் விரும்பாததையும் சுகப்பிரசவத்தை உத்தேசித்து கர்ப்பிணிப்பெண் தவிர்க்கவேண்டும்.
சுகமான பிரசவத்திற்கு கர்ப்பிணிகள் எட்டாம் மாதத்தில் பால் சேர்த்து தயாரிக்கப்பட்ட புழுங்கலரிசிக் கஞ்சியை நெய் சேர்த்து பருக வேண்டும். அவ்வாறே குடலில் வாயு சேராதிருக்கவும், பழைய மலத்தைப் போக்குவதற்காகவும் காய்ந்த முள்ளங்கி, புளிப்பு இலந்தை இவற்றின் கஷாயத்தில் சதகுப்பை கல்கமும், தைலம், நெய், இந்துப்பு இவற்றையும் கலந்து எனிமா செய்வது நம் முன்னோர் முறை. ஒன்பதாவது மாதத்தில் எண்ணெய்ப்
பசையை தருவதும், மாமிச சூப்பு கலந்ததுமான உணவு ஏற்றதாகும். முன் குறிப்பிட்ட எனிமாவிற்குரிய மருந்துகளை ஒன்பதாவது மாதத்திலும் எனிமாவாகப் பயன்படுத்துவதற்கு ஏதுவாகும். இதே எனிமா தைலத்தில் நனைத்த பஞ்சுத்துண்டை கர்ப்பிணியின் பிறப்புறுப்பில் எப்போதும் வைக்கவேண்டும். இது வாயுவை நன்னிலையில் வைக்க உதவும். மேலும் வாயுவைப் போக்கும். வாயுவைக் கட்டுப்படுத்தும் சில மூலிகை இலைகளாகிய ஆமணக்கு, புங்கை, நொச்சி, வாதநாராயணன், கல்யாணமுருங்கை, யூகலிப்டஸ் போன்றவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கி தண்ணீரில் கொதிக்கவிடவேண்டும். ஆறிய பின் இதை தினந்தோறும் கர்ப்பிணி குளிக்க இதமானது.
சுகப்பிரசவத்திற்கு ஒன்பதாம் மாதம் தொடங்கி பிரசவிக்கும்வரை உடலில் நெய்ப்புப் பொருள் இன்றி இருக்கச் செய்யக்கூடாது. அதற்கு ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய தான்வந்திரம் தைலத்தை வெதுவெதுப்பாக உடலெங்கும் தேய்த்து மேற்குறிப்பிட்ட மூலிகை இலைத் தண்ணீரால் குளிப்பது பிரசவத்தின்பொழுது குழந்தை சுலபமாக வெளியே வருவதற்கு ஏதுவாக இருக்கும்.
கர்ப்பநீர் கசிய ஆரம்பித்தலும், அக்காலத்தில் கர்ப்பிணிக்குச் செய்யவேண்டிய உபகாரங்களில் உடலில் வெதுவெதுப்பாக எண்ணெய்யைத் தேய்த்து வெந்நீர் ஸ்நானம் செய்வித்து அதன் பின்னர் நெய் சேர்த்த கஞ்சியை சாப்பிடச் செய்வதால் சுகப்பிரசவத்திற்கு பேருதவியாக இருக்கும். தொப்புளுக்குக் கீழே உள்ள அங்கங்களை மட்டும் பிடித்துவிடவேண்டும். வாயு கோபமடையாமல் இருக்க பன்முறை நெய்ப்புப்பொருளும் தடவவேண்டும். இவ்வாறு செய்வதால் கர்ப்பம் மேலிருந்து கீழ்நோக்கிச் செல்கிறது. இவை அனைத்தும் மிருதுவான தரை விரிப்பில் படுத்திருக்கும் கர்ப்பிணியின் உடலில் செய்ய வேண்டியவை. பிரசவ வலி அதிகரித்தபின் கர்ப்பிணியை கட்டிலில் ஏறி படுக்கச் செய்ய வேண்டும். மருத்துவரை அணுக வேண்டும்.
(தொடரும்)
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சோ்வைகாரன்பட்டியில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுது: 2 மணி நேரம் காத்திருந்த வாக்காளா்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


