ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் வலிமை பெற மூங்கில் அரிசி!

தற்போது புதிதாக மூங்கிலரிசி பற்றி பேசுகிறார்கள். பல நோய்களுக்கு அருமருந்து என பேசப்படுகிறது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் வலிமை பெற மூங்கில் அரிசி!
Updated on
2 min read

தற்போது புதிதாக மூங்கிலரிசி பற்றி பேசுகிறார்கள். பல நோய்களுக்கு அருமருந்து என பேசப்படுகிறது. தவிர, தினை, சாமை, குதிரைவாலி ஆகிய அரிசி வகைகளில் உள்ள விசேட மருத்துவகுணம் யாது? ஆயுர்வேதத்தில் இவ்வகை அரிசிகளைப் பற்றி குறிப்பு உள்ளதா?

-சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.

மூங்கில் பூப்பதும், அதில் அரிசி விளைவதும் ஓர் அரிய நிகழ்வு. மூங்கில் நெல் என்று ஒன்று இருக்கிறது. சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகிப் போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசியாகும். மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் அல்லது பாயசம் போலவும் செய்து சாப்பிடலாம். மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துச் சேர்த்து அரைத்து தூள் செய்து கொள்ளவும். இதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர தேகமெல்லாம் வலுவடையும். வஜ்ரம்போல் இறுகும். சர்க்கரை நோய் கட்டுப்படும். மூட்டுவலியை குணமாக்கும். இன்று பலருக்கும் பத்துப் படிகள் ஏறினாலே, மூச்சு வாங்குகிறது, முழங்கால் மூட்டு வலிக்கிறது. ஆனால், நம் முன்னோர்கள், பல மைல் தூரங்களை நடைப்பயணமாகவே கடந்தவர்கள். உரமேறிய அந்த உடல்வாகிற்கான அடிப்படைக் காரணம் சத்துமிக்க உணவுப் பழக்கம்தான். அவர்கள் சாப்பிட்ட மூங்கில் அரிசிக் கஞ்சியின் விவரம் - மூங்கில் அரிசி, நொய் அரிசி -  வகைக்கு 150 கிராம், சீரகம், ஓமம் - வகைக்கு அரைத் தேக்கரண்டி, பல்பூண்டு - 6, சுக்கு - ஒரு துண்டம், நல்லெண்ணெய் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு.

மூங்கில் அரிசி, நொய் அரிசி, சுக்கு ஆகியவற்றைத் தனித்தனியே ஒன்றிரண்டாகப் பொடித்து எடுக்கவும். பொடித்த சுக்குடன் சீரகம், ஓமம் சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவும். அதில்,  நல்லெண்ணெய் ஊற்றி, பொடியாக அரிந்த பூண்டைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். முதல் கொதி வந்ததும் மூங்கில் அரிசியை அதில் கொட்டவும். அடுத்த கொதி வந்ததும் நொய் அரிசியையும் அதில் போட்டுக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்து கஞ்சி பதம் வந்ததும், தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து இறக்கவும். இதை உண்பதால் மூட்டு வலி, மூட்டில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகெலும்பு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கும். மூங்கில் அரிசி நார்ச்சத்து மிக்கது. உடல் வலிமை பெறும். சர்க்கரை அளவைக் குறைக்கும். எலும்பை உறுதியாக்கும். நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.

தினை - உடலிற்கு வலிவு தரும். சிறுநீரை அதிகம் வெளியேற்றி தசைகளை இறுகச் செய்யும். கொழுப்பு - ஊளைச்சதை சேரவிடாது. நல்ல பசியை உண்டாக்கும். விந்தணுக்களை வளரச்செய்யும். வீக்கம், நாட்பட்ட காய்ச்சல், கபம், வாதநோய் இவற்றில் ஏற்ற உணவு. இதனை சாதமாக்கிச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிச் சாப்பிட வீக்கம், நீர்த்தேக்கம் வடியும். கூழை பிரசவித்த மாதர் சாப்பிடுவது வழக்கம். இதனை லேசாக வறுத்து மாவாக்கி தேனுடன் சாப்பிட களைப்பு நீங்கும்.

சாமை - எளிய உணவுப்பொருள். இனிப்பும், குளிர்ச்சியும் தரும். எளிதில் செரிக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். உள்ளெரிச்சல் காய்ச்சல் நிற்கும். உடல்வளர்ச்சிக்கும், தாதுவிருத்திக்கும், புஷ்டிக்கும் ஏற்றது. இதன் கஞ்சி பேதியை நிறுத்தும்.

குதிரைவாலி - குதிரைவாலியில் நார்ச்சத்து மிகுதியாக காணப்படுவதால் உடலில் மலச்சிக்கலை தடுப்பதிலும், கொழுப்பு அளவை குறைப்பதிலும் செரித்தலின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது. உடலில் கபத்தினுடைய ஆதிக்கம் அதிகரித்து அதனால் அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுவார்கள்.

குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும். நூறு கிராம் குதிரைவாலியில் புரத சத்து  6.2கிராம், கொழுப்பு சத்து  2.2 கிராம், தாது உப்புகள் 4.4 கிராம், நார்ச்சத்து 9.8 கிராம், மாவுச்சத்து 65.5 கிராம், கால்சியம் 11 மில்லிகிராம், பாஸ்பரஸ் 280 மில்லிகிராம் என அடங்கியிருப்பதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இதனுடைய மருத்துவ பயன்கள் - உடலைச் சீராக வைக்க உதவுகிறது, சர்க்கரை அளவினை குறைக்க வல்லது, ஆண்டி ஆக்ஸிடன்ட்ஆக வேலை செய்கிறது, இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும், அதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.

 (தொடரும்)

எஸ். சுவாமிநாதன், டீன்
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com