

கண்டியில் "பைலட் பிரேம்நாத்' படப்பிடிப்பு நடைபெற்றபொழுது, அந்நகரின் பூமியிலிருந்து ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்து பிளாஸ்டிக் டப்பாவில் போட்டுக் கொண்டேன்!
சென்னை திரும்பியதும் எம்.ஜி.ஆரைச் சந்தித்தேன்.
""அண்ணே! இதுவரையில் உங்களுக்கு யாருமே கொடுக்காத - கொடுக்க முடியாத ஓர் அரிய பரிசை இப்ப நான் கொடுக்கப் போறேன்''
""அப்படியா? என்ன அது?''
""கையை நீட்டுங்க!''
நீட்டினார்.
என் சட்டைப் பையிலிருந்த அந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து அவரது சந்தனக் கரத்தில் வைத்தேன்.
""என்ன இது? மண்ணு!''
""ஆமா. நீங்க பிறந்த மண்! கொழும்பு கண்டி நகர்லே சேகரிச்சி ஒங்களுக்குன்னே கொண்டு வந்தேன்!'' என்று விளக்கினேன். இதைக் கேட்டதும் எம்.ஜி.ஆர் சட்டென்று சற்று நேரத்திற்கு உணர்ச்சிவசப்பட்டவராய், அந்த டப்பாவை தனது இரு கண்களிலும் ஒற்றிக் கொண்டார்.
மூடியைத் திறந்தார். விபூதியை எடுப்பதுபோல, பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து, அவர் பிறந்த அந்த மண்ணில் சிறிது எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.
சிறிதளவைத் தன் சிரசில் தூவிக்கொண்டார். கல் விழுந்த தடாகமாக அவரது கண்கள் இரண்டும் கலங்கி இருக்கக் கண்டேன்.
""இதை இப்படியே நான் வச்சிக்கலாமா?'' என்றார். ஒரு குழந்தையைப் போல!
""என்னண்ணே, அப்படிக் கேக்குறீங்க? ஒங்களுக்காகத்தானே எடுத்துக்கிட்டு வந்தேன்'' என்றேன்.
""நன்றி! இதை நான் என்னைக்கும் பத்திரமாக வச்சிக்குவேன்'' என்றவாறு என் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டார் அவர்.
(ஆரூர்தாஸ் எழுதிய "எம்.ஜி.ஆர் - சிவாஜி என் இரு கண்கள்' என்னும் நூலிலிருந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.