மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தன்னம்பிக்கையின் ஒளி!

ஈராக் நாட்டின் பாக்தாத் நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது பாகுபா நகரம். 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்நகரின் சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது.

News image
Updated On :18 மார்ச் 2016, 1:45 pm

ஈராக் நாட்டின் பாக்தாத் நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது பாகுபா நகரம். 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்நகரின் சாலையில் ஒரு கார் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்தக் காரின் மீது பயங்கரவாதிகளின் குண்டுவீச்சு. காரில் சென்று கொண்டிருந்த 3 வயதேயான சிறுமி நெஜ்லா இமாத்தின் வலது கை முழங்கைக்குக் கீழே துண்டிக்கப்பட்டு தனியாக விழுந்தது. வலது கால் முழுவதும், இடது காலில் ஒரு பகுதியும் சேதமடைந்தன. எப்படியோ மருத்துவம் செய்து அந்தச் சிறுமியை உயிர்பிழைக்க வைத்தார்கள். அந்தச் சிறுமியின் பெயர் நெஜ்லா இமாத்.

இப்போது அவருக்கு 12 வயது. இப்போது ஈராக்கில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பங்கு பெற்றிருக்கிறார்.

சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இடது கையால் பந்தை விரைந்து அடிக்கிறார்.

நான்கு வயதிலேயே - அதாவது பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி ஓராண்டிலேயே - டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பயிற்சி பெற ஆரம்பித்திருக்கிறார் நெஜ்லா.

""என்னுடைய வாழ்க்கையை நல்லவிதமாக டேபிள் டென்னிஸ் விளையாட்டுதான் மாற்றியது. எனது தன்னம்பிக்கை ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்க டேபிள் டென்னிஸ்தான் காரணம்'' என்கிறார் அவர்.

டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கு கொள்ள வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை. உடல் ஊனமுற்ற அவருக்கு அது சிரமமாக இருக்குமே! ஆனால் அவரோ வேறுவிதமாகச் சொல்கிறார்:

""என்னைச் சுற்றியுள்ள மக்கள் என்னை மிகவும் அனுதாபத்துடன், அன்புடன் பார்க்கிறார்கள். எனக்கு உதவுவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறார்கள். வீட்டுக்கு வெளியே நான் செல்லும்போதெல்லாம் அவர்கள் உதவுவதால்தான் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எனக்கு எந்த வலியும் இல்லாமற் போகிறது'' என்கிறார் நெஜ்லா.

நெஜ்லாவுக்கு டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்குப் பயிற்சியளித்தவர் பாகுபா நகரைச் சேர்ந்த பயிற்சியாளர் ஹோசம் ஹுசைன். ""நெஜ்லா உள்ளூர் டேபிள் டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகளில் பலவற்றில் விளையாடினார். அது ஈராக்கின் தேசிய பாராலிம்பிக் கமிட்டியின் கவனத்தை ஈர்த்தது. அவர்கள் ஈராக்கின் 16 வயதுக்குட்பட்டோர் டீமில் இணைந்து விளையாடும்படி நெஜ்லாவைக் கேட்டுக் கொண்டனர்'' என்கிறார் அவர்.

2015 ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறார் நெஜ்லா. அதோடு "அரேபிய சாம்பியன்ஷிப்'பையும் பெற்றிருக்கிறார்.

""நெஜ்லா மிக மிகத் திறமையான டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை. அவள் பேரளவிலான திறமையையும், அளவுக்கதிகமான தன்னம்பிக்கையையும் உடையவளாக இருக்கிறாள்'' என்கிறார் பயிற்சியாளர் ஹுசைன்.

எதிர்காலத்தில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பங்கேற்று விளையாட வேண்டும் என்பதே நெஜ்லாவின் விருப்பம்.

எல்லாவற்றையும் விட முக்கியமானது, நெஜ்லா படிப்பிலும் படுசுட்டி என்பதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.