தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மசால் தோசை 40 பைசா... ஃபில்டர் காஃபி 15 பைசா!

மும்பையில் கிழக்கு மட்டுங்கா பகுதியில் இருக்கும் கிங்ஸ் சர்க்கிள் என்ற இடத்தில் உள்ளது தென்னிந்திய உணவகம் "கஃபே மெட்ராஸ்'. சமீபத்தில் ஒருநாள், ஏழு மணிக்கு ஓட்டல் திறந்தவுடன், அங்கே சாப்பிடச் சென்றவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

News image
Updated On :13 மே 2016, 2:13 pm

சந்திரமெளலி

மும்பையில் கிழக்கு மட்டுங்கா பகுதியில் இருக்கும் கிங்ஸ் சர்க்கிள் என்ற இடத்தில் உள்ளது தென்னிந்திய உணவகம் "கஃபே மெட்ராஸ்'. சமீபத்தில் ஒருநாள், ஏழு மணிக்கு ஓட்டல் திறந்தவுடன், அங்கே சாப்பிடச் சென்றவர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. சூடாக இரண்டு இட்லியும், சூடாக ஒரு ஃபில்டர் காஃபியும் சாப்பிட்டுவிட்டு, பில்லை வாங்கிக் கொண்டு கேஷியரிடம் ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டியவரிடம்,""சார் சில்லறையா முப்பத்தைந்து பைசா மட்டும் கொடுங்க'' என்றார் கேஷியர்.

""முப்பத்தஞ்சு பைசாவா? என்ன சொல்றீங்க?'' என்று கஸ்டமர் குழம்ப, கேஷியர் சொன்னார்: ""சார் எழுபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால, இதே நாள்ல, இந்த ஓட்டல் ஆரம்பிச்சோம். எங்களுடைய 75 வருட ஆண்டு விழாவைக் கொண்டாடுகிற வகையில், எழுபத்தஞ்சு வருஷம் முன்னால என்ன விலை வெச்சிருந்தமோ, அதே விலைக்கு, அந்த அயிட்டங்களை நாங்க எங்க வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறோம்'' என்று சொன்னதும்தான் அவருக்கு விஷயம் புரிந்தது.

காலை ஏழு மணிக்குத் துவங்கிய இந்த இன்ப அதிர்ச்சி பகல் பன்னிரண்டு மணி வரை தொடர்ந்தது. காஃபி பதினைந்து பைசா. இட்லியும், உப்புமாவும் இருபது பைசா. மசால் தோசை 40 பைசா. (இவற்றின் இன்றைய விலை: இட்லி - முப்பத்தைந்து ரூபாய். உப்புமா - 25 ரூபாய். மசால் தோசை - ஐம்பது ரூபாய்), இந்த அதிரடி விலைக்குறைப்பு பற்றி ஓட்டல் நிர்வாகம் எந்தவிதமான விளம்பரமும் செய்யவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் அப், டுவிட்டர் மூலமாக மும்பை முழுக்க தகவல் பரவிவிட்டது.

""இப்படி வித்தியாசமாக எழுபத்தைந்தாவது வருஷத்தைக் கொண்டாடும் ஐடியா உங்களுக்கு எப்படி வந்தது?'' என்று உணவக நிர்வாகியான தேவவிரத் காமத்திடம் தொலைபேசியில் கேட்டோம்:

""சில வருடங்களுக்கு முன்பு எங்கள் கஸ்டமர் ஒருவர், நீங்கள் அந்தக் காலத்து விலைப்பட்டியலை, வாடிக்கையாளர்கள் பார்வைக்கு வைத்தால், சுவாரசியமாக இருக்குமே?'' என்று சொன்னார். அந்த ஐடியாவை சற்றே மாற்றி, வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்தும் விதமாக, 75 வருடங்களுக்கு முன்னால் எங்கள் தாத்தா கோபால் காமத் இந்த ஓட்டலைத் துவக்கியபோது விற்ற விலையிலேயே, இன்றைய தினம் அரை நாள் மட்டும் விற்பது என்று முடிவு செய்தோம்.

இதற்காக, எங்கள் பில்லிங் மிஷினில் பயன்படுத்துகிற சாஃப்ட்வேரில் தற்காலிகமாக, சின்ன மாறுதல் செய்ய வேண்டி இருந்தது. இது முழுக்க முழுக்க தென்னிந்திய ஐட்டங்கள் மட்டுமே கிடைக்கும் உணவகம் என்றாலும் கூட, தென்னிந்தியர்கள் மட்டுமில்லாமல், பல மொழிகள் பேசும் மும்பைவாசிகள் குறிப்பாக குஜராத்திகள் நிறையப் பேர் வருவார்கள்.ரிலையன்ஸ் நிறுவனரான திருபாய் அம்பானியும், அவர் மகன் முகேஷ்அம்பானியும் எங்களுடைய பல வருட கஸ்டமர்கள். ராஜ் கபூர் குடும்பத்தினருக்கு எங்கள் ஹோட்டல் ஐட்டங்கள் ரொம்பப் பிடிக்கும். நஸýருதின் ஷா குடும்பத்துடன் வந்து இங்கே சாப்பிடுவார். ஜாக்கி ஷெராஃப், ரெகுலர் கஸ்டமர். தீபிகா படுகோனே கூட இங்கே வந்து சாப்பிட்டிருக்கிறார்.

எங்கள் ஓட்டலின் மசால் தோசை, கேழ்வரகு தோசை, செட் தோசை, பெசரெட், ஆப்பம், பிசிபேளா பாத் எல்லாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஐட்டங்கள். இட்லிக்கு நாங்கள் கொடுக்கும் மிளகாய் பொடிக்காகவே பல கஸ்டமர்கள் வருவது உண்டு. அதே போல பகல் வேளையில் ரச வடையும், மோர் குழம்பு வடையும் நிறைய விற்பனையாகும்'' என்கிறார்.

""ஹோட்டல் பிசினசில் வெற்றிகரமாக முக்கால் செஞ்சுரி அடித்திருப்பதற்கு முக்கிய காரணம் என்ன?'' என்று கேட்டால், தேவவிரத் காமத் சொல்லும் பளிச் பதில்: ""பத்து வருடங்களுக்கு ஒரு முறை மக்களின் டேஸ்ட் மாறி வருகிறது. அதைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொண்டுவிட்டால், பிசினஸ் வெற்றி பெறும்.''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.