சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஒன்ஸ்மோர்

சிறு பையனாய் இருந்தபோது எனக்கு நான் பிறந்த தேசமானது என்னுடைய சேவையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயமே தெரியாது.

News image
Updated On :30 மே 2016, 1:00 pm IST

சிறு பையனாய் இருந்தபோது எனக்கு நான் பிறந்த தேசமானது என்னுடைய சேவையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயமே தெரியாது. அப்போதெல்லாம் என் மனதறிந்து தேசத்திற்கு ஒருவித சேவையும் செய்ததில்லை. ஒருநாள் தற்செயலாக ""தேசத்துக்கே உழைக்க ஜன்மம் எடுத்தோம்'' என்ற பாட்டைக் கேட்க நேர்ந்தது. உடனே தேசத்துக்கே உழைக்க வேண்டுமென்ற ஆசை என்னைத் தீவிரமாகப் பற்றிக் கொண்டது.

மேல் சட்டை, மேல் வேஷ்டி எல்லாவற்றையும் கழற்றித் தலையைச் சுற்றி எறிந்துவிட்டு காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினேன். ""மகாத்மாஜி! தேசத்துக்கு உழைக்கத் துணிந்துவிட்டேன். நான் அவ்விடம் வரட்டுமா? அல்லது தேசத்தை இங்கே அனுப்பி வைக்கிறீர்களா?'' என்று கேட்டேன்.

மகாத்மாஜி நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் ""கைராட்டையில் தினம் ரெண்டாயிரம் கெஜம் நூல் நூற்று வா! உன் மனது தெளிவடையும்'' என்று எழுதினார்.

ரொம்ப லக்ஷணம்! நான் தேசத்துக்கு உழைக்க வந்தேனா? நூல் நூற்க வந்தேனா?

உடனே உடையை மாற்றினேன். ஒரு கதர் ஜிப்பாவும் அதன் மேல் கம்பளி வெயிஸ்ட் கோட்டும் அணிந்து தலையில் ஒரு காந்தி குல்லா தரித்துக் கொண்டேன். அச்சமயம் காங்கிரஸ் தலைவராயிருந்த பண்டித ஜவஹர்லால் நேருவுக்குக் கடிதம் எழுதினேன்.

""தேச சேவைக்குத் தயார். காங்கிரஸ் தலைமைப் பதவியை வகிப்பது சிரமமாய் இருந்தால் தந்தியடிக்கவும். உடனே புறப்பட்டு வருகிறேன்!'' என்று குறிப்பிட்டிருந்தேன்.

ஜவஹர்லால்ஜியிடமிருந்து பதில் வந்தது. ""தற்சமயம் இந்தியாவுக்குத் தேவை சீனப் போர்க்களத்தில் போர் செய்ய வேண்டும். உடனே புறப்பட்டுப் போகவும்'' என்று எழுதியிருந்தார்.

எனக்குக் கோபமாய் வந்தது. உடனே வெயிஸ்ட் கோட்டையும் காந்தி குல்லாயையும் எடுத்தெறிந்துவிட்டு தலையில் உச்சிக் குடுமி வைத்துக் கொண்டேன். புகைக் கண்ணாடி வாங்கி மாட்டிக் கொண்டேன். நமது சொந்த மாகாணத் தலைவர் ராஜாஜிக்குக் கடிதம் எழுதினேன்.

""தேசத்துக்காக உயிரைவிடக் கங்கணம் கட்டிக் கொண்டேன். எவ்விடத்தில் ஆரம்பிக்கலாம்?'' என்று கேட்டிருந்தேன்.

""கள்ளுக் கடையில் ஆரம்பிக்கலாம். ஒரு குடிகாரனைக் குடியை விடும்படி செய்தால் ஒன்பது தடவை உயிரை விடுவதைவிட அதிக பலன் உண்டு!'' என்று ராஜாஜி பதில் எழுதினார்.

இவரும் சுகமில்லையென்று தீர்மானித்துக் கொண்டு கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தேன். கதரைக் கழற்றி எறிந்துவிட்டு பூரண சுதந்திர இங்கிலாந்தில் நெய்த பூரண சுதந்திரத் துணியை உடுத்திக் கொண்டேன். மாஜி காங்கிரஸ் தலைவர் ஸ்ரீசீனிவாச அய்யங்காருக்கு கடிதம் எழுதினேன். ""தேசத்துக்காக உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்யத் தயார்! எவ்வளவு பணம் தருகிறார்கள்?'' என்று கேட்டிருந்தேன்.

அப்போது அய்யங்கார், ""கேஸ் கட்டு படித்துக் கொண்டு இருக்கிறேன். பணம் எண்ண சாவகாசம் இல்லை!'' என்று தமது குமாஸ்தாவைக் கொண்டு பதில் எழுதி விட்டார்!

எனக்கு மனம் வெறுத்துப் போயிற்று. இந்தத் தலைவர்களை நம்பிப் பிரயோசனமில்லை, நாமே நம் இஷ்டம்போல் தேச சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து நேரே ""வீர சுதந்திரன்'' என்னும் தினசரிப் பத்திரிகை ஆசிரியரை நேரில் சந்தித்து ""தங்கள் பத்திரிகை மூலம் தேச சேவை செய்ய விரும்புகிறேன்'' என்றேன். அவர் அதற்கு ஒப்புக்கொண்டு ""மாதம் பதினைந்தரை ரூபாய் சம்பளம். ஆனால் அவ்வளவையும் ஒரே தவணையில் கேட்கக் கூடாது. பிரித்துப் பிரித்துத்தான் தர முடியும்'' என்றார்.

""சம்மதம். என்னைப் பணம் கேட்காமல் இருந்தால் சரி!'' என்றேன். அப்புறம் கேட்க வேண்டுமா என்னுடைய தேச சேவையை? சக்கை போடுதான்!

"போடு சக்கை' என்ற நூலில் கல்கி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.