கிராமத்தான்

வெயிலின் தாக்கம் ஏறுவதற்குள் எப்படியும் புறப்பட்ட காரியத்தை முடித்து விட்டு வந்துவிட வேண்டும் என்ற நினைப்பு மண்ணாய்த்தான் போனது ஆறுமுகத்திற்கு.
கிராமத்தான்

வெயிலின் தாக்கம் ஏறுவதற்குள் எப்படியும் புறப்பட்ட காரியத்தை முடித்து விட்டு வந்துவிட வேண்டும் என்ற நினைப்பு மண்ணாய்த்தான் போனது ஆறுமுகத்திற்கு.
வியர்வை பிடரி வழியாக வழிந்து சட்டைக்குள் இறங்கி தார்க் கோடு போட்டுக் கொண்டு இருந்தது. நரைத்திருந்த தலைக்கு மட்டும் ஏதோ ஜீவனில்லாத வெறுமை வந்து ஒட்டிக் கொள்கிறது. எண்ணெய் வைத்தால் தலை நோகும் புதுவியாதி அவருக்கு...
ரோட்டோர கடையில் நின்று ஏதாவது தாகத்துக்குக் குடித்து விட்டு நகரலாமா என்று யோசித்தார். வரிசையாய் நின்றிருந்த தூங்குமூஞ்சி மரங்களின் அடியில் தள்ளுவண்டிக் கடைகளில் குளிர்பானங்கள் விற்கப்பட்டுக்
கொண்டிருந்தன.
"விலை மலிவு' என்ற வாசகம் வெயிலைக் கவர்ந்து இழுத்துக் கொண்டு இருந்தது. இரண்டெட்டு நகர்ந்தவர் லேசாய்த் தயங்கினார். எதிர்வரிசையில் இளநீர்க்காரன் கடைபரப்பி இருந்தான் கொள்வார் இல்லாமல்...
நடைபாதை வாசிகளின் வாழ்க்கை மீது ஓர் அவசர கரிசனம் வந்து உட்கார்ந்து கொண்டது. இத்தனை இளநீர்களையும் இவன் இரவுக்குள் விற்றாக வேண்டும் அல்லது இதை பத்திரப்படுத்தி எடுத்துப் போக வேண்டும் அதுவும் முடியாத பட்சத்தில் இங்கேயே இவன் படுக்கையைப் போட
வேண்டும்...
மூன்றுமே அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஆனால் இது அவர்களுக்கு வாழ்க்கைப்பாடு. கையில் இருந்த சில்லறைகளைப் பொறுக்கிக் கொண்டு அவன் கடையை நோக்கி நடந்தார்.
இவனைக் கண்டதும் இளநீர்க்காரன் காட்டிய ஆவலில் அவன் வாடிக்கையாளரைப் பார்த்து சிலமணி நேரங்கள் கடந்து இருக்கும் என்று தோன்றியது.
விலை பேசாமல் இளநீர் வெட்டச் சொன்னது வேறு அவனுக்கு சந்தோசமாக இருந்திருக்க வேண்டும்.
இளநீருக்கு வாய் கீறி ஸ்ட்ரா சொருகி நீட்ட, அதை வாங்கிக் கொண்டவர் ஸ்ட்ராவை தூக்கி எறிந்துவிட்டு பதமாகக் குடித்தார். இளநீர்க்காரன் முகத்தில் சின்ன ஆச்சர்யம்... அவன் பார்வையின் பொருள் அறிந்து சிரித்தார்.
""என்ன அப்படிப் பாக்குறீங்க? நான் என்ன பட்டணத்துக்காரனா? இப்படி குழலைப் போட்டு உறிய? கிராமத்துக்காரன்... பதறாம சிதறாம குடிக்கத் தெரியும். அதுசரி எங்கத்த இளநீ இது?''
"" பொள்ளாச்சி''
""இருக்கவே இருக்காது... அது கரும்புச்சாறில கல்கண்டைப் போட்டாப்புல இல்ல இனிக்கும்... இது வெறெங்கத்த காய்ப்போ... இப்பத்தான் ஆயிரம் காய்ச்சியும், ஐயாரெட்டு மகசூலாட்டம் வந்துருச்சே... உலகம் சுருங்கச் சுருங்க எல்லாம் ருசியத்துத் தான் போச்சு... அது சரி... என்ன இந்த அக்னி கழுவுக்கே கூட்டத்தைக் காணோம்...'' கண்கள் அலைபாய்ந்தன. இவர் வார்த்தைகள் அந்த இளநீர்க்காரனுக்கு ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும்? நன்றியாய்ப் பார்த்தான்.
""என்னங்க செய்ய? யாரும் முப்பது நாற்பதுன்னு தந்து இளநீ வாங்கி குடிக்கறதில்லே. கண்ட தண்ணியில ஏதோ கலரைப் போட்டு பத்து ரூபாயுக்கும் இருபது ரூபாயுக்கும் தர்றான். அங்கேதான் குவியுது ஜனங்க... யாரையும் சொல்றாப்புல இல்ல'' சில நொடிகளுக்குள் பொருளாதர நலிவை அவன் பார்வையில் பதிவு செய்து இருந்தான்.
"" வருத்தப்படாதய்யா... நமக்குன்னு போட்டது நமக்கு கிடைச்சே தீரும்... நீயேன் அதுக்கு கவலைப்
படற... கடையைத் திறக்க வேண்டியது தான் நம்மோட வேலை... ஆளை அனுப்பறது ஆண்டவன் வேலை... விடியும் விடியும் பொறுமையா இரு'' பேசியபடியே பாக்கெட்டுக்குள் கைவிட்டு ஐம்பது ருபாய்த் தாளை எடுத்து நீட்டினார்.
அவன் மீதியைத் தர, உற்றுப் பார்த்தார்.
"" என்னய்யா கொறைவா எடுத்திருக்க போல''
"" அதெல்லாம் இல்லீங்க... முப்பது ருவா இளநீ உங்களுக்கு இருப்பதைஞ்சு தந்திருக்கேன்'' அவன் சொல்ல இப்போது இன்னும் பெருங்குரலெடுத்துச் சிரித்தார்.
"" எனக்கு எதுக்கு குறைச்ச? நான் இரண்டு வார்த்தை பேசின்னனா? அங்கதான்யா நாம எல்லாரும் தப்பு செய்றோம்... இது மனுசனுக்கு மனுசன் செய்ய வேண்டிய மரியாதை... பேச்சுக்கும், விசாரிப்புக்கும் ஏதோ ஒரு வகையில லஞ்சத்தைத் தந்து ஊரைக் கெடுக்கறோம்.'' அவன் கையில் சில்லறையைத் திணித்துவிட்டு நிழலில் நடந்தார். அவன் கண்கள் முதுகில் குளுமையாக ஊர்வது தெரிந்தது.

வங்கியில் கூட்டம் அதிகம் இல்லை. கிட்டத்தட்ட மூன்று மாதமாய் நடையாய் நடந்து ஓய்ந்து ஆகிவிட்டது.
வீடு ரொம்பவும் பழுதடைந்து போய்விட்டது. வங்கியில் கடனை வாங்கி வீட்டை மராமத்து செய்து கொண்டால், அடுத்த அறுவடையில் கடனைக் கட்டிவிடலாம் என்று முடிவு செய்துதான், இங்கே நடையாய் நடந்து தேய்ந்து கொண்டு இருந்தார்.
வீட்டுப் பத்திரத்தில் இருந்து மூலப்பத்திரம் மட்டுக்கும் கொண்டு வரச் சொன்னார்கள். அதை எடுத்துக் கொண்டு ஒருநாள் வந்து நின்றார்.
அன்றைக்கு -அங்கே இருந்த அதிகாரி மறுநாள் மாறி இருந்தார். இவரைப் புதுசாய்ப் பார்த்தார். மறுபடியும் ஆதி முதல் அந்தம் வரைக்கும் விளக்கினார்.
இவர் இன்னொரு மறுநாளை வழங்கினார். கூடவே வில்லங்க சர்ட்டிபிகேட்டைக் கொண்டு வரச் சொன்னார். அதுக்கு இரண்டு நாள் பிடித்தது.
முதல்நாள் இவர் சென்றபோது கணிணி மையத்தில் மின்சப்ளை இல்லை. திரும்பி வந்து விட்டார். அடுத்த நாள் போய் போராடி ஒரு முழு நாளைத் தந்து வில்லங்க சான்றிதழுடன் வந்து நின்றார்.
இவர் கொண்டு போய் நீட்டியபோது அந்த செக்ஷன் ஆபிசர் அதை தன் கண்ணாலும் வாங்கிப் பார்க்கவில்லை என்பதுதான் மனசு வலிக்க வைத்தது.
ஆறுமுகத்தை விட நைந்து கிடந்த பேப்பர்களை ஒருமுறை திருப்பி பார்த்துவிட்டு முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசினார்,
ஆறுமுகத்தின் மனசில் சடுதியில் அந்த சந்தேகம் வந்தது. இதுபோல பதவிகளில் இருப்பவர்கள் முகங்கள் மட்டும் ஏன் கருணையைத் தொலைத்ததாகவே இருக்கின்றன? படிப்பறிவில் குறைந்தவர்கள் என்று அறிந்திருந்த போதும் எதுக்காக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்? புரியத்தான் இல்லை...
"" தமிழ்ல சொல்லுங்கய்யா'' என்றார் அமைதியாக.
""இது வேறயா... உங்களோட டீடெயில் எல்லாம் தந்துட்டுப் போங்க. நாளைக் கழிச்சு ப்ரைடே பேங்கல இருந்து வெரிபிகேசனுக்கு வருவாங்க... அதுக்கு முன்னாடி உங்களுக்கு கால் பண்ணுவாங்க. உங்க நம்பர் சொல்லுங்க'' பேனாவைத் திறந்து ஆறுமுகத்தின் ஃபைலில் கை வைக்க ஆறுமுகம் திருதிருவென விழித்தார். ஆபிசர் எரிச்சலாகப் பார்த்தார்.
"" செல்போன் நம்பர் கேட்டேன். என்ன இன்னைக்கு முழுக்க உங்க ஒருத்தரை வச்சுட்டே நான் உட்கார்ந்து இருக்கணுமா?'' வார்த்தைகள் சுள்ளென்று வந்தன.
"" போன் எல்லாம் இல்லீங்க'' என்றார் பரிதாபமாக.
"" என்ன போன் இல்லையா? எந்த காலத்துலயா இருக்க நீ?'' போன் கூட இல்லாதவன் என்றதும் வார்த்தை ஒருமையில் இறங்கியது போலும்.
"" ஏங்க, போன் இல்லாட்டி இருக்க முடியாதுங்களா?'' என்றார் வெள்ளந்தியாக.
"" அப்புறம் எப்படிய்யா எல்லார் கூடயும் பேசுற?'' வார்த்தையில் அத்தனை எக்காளம்.
"" போனை பக்கத்துல வச்சுகிட்டு மனுசங்களை தூர வைக்கிற மனுசங்க இல்லீங்க நாங்க எல்லாம். போனை தூரமா வச்சுட்டு பக்கத்துல இருக்கிற சனங்ககிட்ட முகம் பார்த்து அளவளாவுவோம்'' சாட்டையாய் விழுந்தது பதில். அதுவே அந்த அதிகாரிக்கு உவப்பாய் இல்லை.
"" சரி சரி... அது உன் பிரச்னை... நேர்ல வர்றவங்களுக்கு திருப்தியா இருந்து லோன் அப்ளிகேசன்ல கையெழுத்து போட்டாத்தான் லோன் சாங்சன் ஆகும்... அதுவும் நினைவுல வச்சுக்க'' பேப்பர்களை அலட்சியமாய் தூக்கிப் போட்டார்.

வெளியில் இறங்கி வந்தார். லேசான தளர்வாய் இருந்தது. வீட்டுப் பத்திரங்களை வாங்கிக் கொண்டு கடன் தரப்போகிறார்கள். கடன் கட்டவில்லை என்றால் வீட்டை ஜப்தி செய்வார்கள். அரசு தந்த மானியமாக ஒரு தொகை கழியும் இதில். மீதியுள்ள காசை குறிப்பிட்ட தவணையில் கட்டவேண்டும். இவ்வளவுதான் லோன் தருவதிற்கான சாராம்சம். அதற்கு ஏன் இத்தனை இழுத்தடிப்பு?
இவரை நோக்கி உள்ளிருந்து ஒருவன் வந்தான்.
""நில்லுங்க ஐயா லோனுக்கா வந்தீங்க?'' என்றான். தலையசைத்தார்.
"" நீங்க எதுக்கு இவ்வளவு அலைஞ்சுகிட்டு இருக்கீங்க? புரியல. இதெல்லாம் இப்போ அத்தனை எளிதாக நடக்காது. எங்கே போகணும், யாரைப் பார்க்கணும்கிற விவரம் எல்லாம் உங்களை மாதிரி ஆளுங்களுக்குப் புரியாது. எல்லாம் ஏற்பாடு பண்ணி ஆளுங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சரிக்கட்டி செக்கை கூடவே இருந்து வாங்கித் தருகிற வரைக்கும் ஆள் இருக்கு... கமிசன் தந்தாப் போதும்'' அவன் குரல் தாழ்த்திச் சொன்னான்.
ஆறுமுகம் கண்களை குறுக்கிப் பார்த்தார்.
"" அதுசரி, அதுக்கு எம்புட்டு கமிசன்...''
""பத்து ப்ரெசண்ட்... லோன் தொகையில. உங்களுது லோன் அம்பதாயிரம்னா ஐயாயிரம் தந்தாப் போதும்'' தந்தாப் போதும் என்பதில் அழுத்தம் பதிந்து கிடந்தது. ஆறுமுகம் லேசாய் சிரித்தார்.
"" அதென்ன சாமி கணக்கு? புரியல... மானியக் காசை உனக்கு தந்துட்டுத் தான் நான் லோன் எடுக்கணும்னா எனக்கு இதுல என்ன அவசியம் வந்துச்சுன்னு தெரியல... அது மட்டுமில்ல என் பொருளை காட்டறேன். அதுல திருப்தி இருந்தா பேங்குக்காரன் காசு தரட்டும். இல்லாட்டி போறான். எதுக்குய்யா நடுவுல தரகன் எல்லாம்'' கிராமத்தானின் வெவரம் அவனுக்கு உவப்பானதாக இல்லை. முனங்கிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
சொன்ன நாளில் வெரிபிகேசனுக்கு வரவில்லை. அடுத்தநாள் ஆறுமுகம் வேகாத வெயிலில் பேங்குக்கு வந்து நின்றார். இன்று வெரிபிகேசனுக்கு வரும் அதிகாரியின் மனைவிக்கு குழந்தைக்கு பிறந்திருக்கிறது என்று விடுப்பில் போய் இருந்தார்.
மூன்று நாட்கள் கழித்துத் தான் அவர் வெரிபிகேசனுக்கே வந்தார். அவர் வந்து மோலோட்டமாய் வீட்டைச் சுற்றிப் பார்த்தார்.

(அடுத்த இதழில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com