தெலங்கானா மாநிலத்தில் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள சிறுநகரம் ஜம்மி குண்டாவில், தினமும் காலையில் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
சுமார் 45 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த ஊரில் காலையில் எட்டு மணிக்கு தேசிய கீதம் இசைக்கப்படும்போது, பொதுமக்கள் தங்களது வேலைகளை நிறுத்திவிட்டு, எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்துகின்றனர். வாகனங்களை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள், அவற்றை நிறுத்தி அமைதி காக்கின்றனர்.
இதுகுறித்து ஜிம்மிகுண்டா நகராட்சி ஆணையர் சம்மையாவைக் கேட்டபோது:
""2017-ஆம் ஆண்டு முதல் இங்கே தினமும் காலையில் தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது. சுதந்திரத் தினத்தின் 75-ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், இந்த ஊரின் நகராட்சி ஆணையராகப் பணியாற்றுவதில் பெருமைப்படுகிறேன்'' என்றார்.
இந்த முயற்சிக்குத் துணை நின்றவரும், தற்போது ஹைதராபாதில் இன்டலிஜென்ஸ் பிரிவில் காவல் ஆய்வாளராகப் பணிபுரியும் பிங்கிலி பிரஷாந்த் ரெட்டியைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது:
""நான் ஜம்மிகுண்டாவில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றும்போது, காவல் துறையின் வழக்கமான பணிகளைத் தவிர மக்கள் மத்தியில் நட்பும், சகோதரத்துவமும் வளர வேண்டும். தேசப் பற்றும், மத நல்லிணக்கமும் நிலவ மக்களை தேசிய கீதத்தின் மூலமாக ஒருங்கிணைக்க விரும்பினேன்.
இதுகுறித்து ஜம்மிகுண்டா நகரத்தின் பல்வேறு தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி, தேசிய கீதத்தை இசைப்பது என முடிவு செய்யப்பட்டது. 2017-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று அதனைத் துவக்கிவைத்தேன். ஊரில் மொத்தம் 16 இடங்களைத் தேர்ந்தெடுத்தேன். காவல் நிலையம், பள்ளிக்கூடம், கல்லூரி, சந்தை, ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் என பல்வேறு முக்கிய இடங்களும் அடங்கும். அங்கெல்லாம் ஒலிப்பெருக்கிகளை நிறுவினேன்.
ஜிம்மிகுண்டா காவல் நிலையத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையை அமைத்தேன். வெறுமனே தினமும் 52 விநாடிகளுக்கு தேசிய கீதத்தை மட்டும் இசைத்தால் போதாது. எனவே, தினமும் காலை ஏழரை மணியிலிருந்து தேசப் பக்திப் பாடல்கள் ஒலிக்கும்.
முதல் பாடல் ஜானகி அம்மா பாடிய ஒருதிரைப்பட தேசப் பக்திபாடலுடன் தொடங்கி, சில பாடல்கள் ஒலிக்கும். இது மக்களை தேசிய கீதத்துக்குத் தயார்படுத்தும். சரியாக எட்டு மணிக்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து "ஜன கண மன...' பாடல் ஒலிக்கும். ஆங்காங்கே உள்ள ஒலிபெருக்கிகள் மூலமாக ஊரெங்கும் தேசிய கீதம் ஒலிக்கும். ஆங்காங்கே மக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் ஹைதராபாதுக்குப் பணியிட மாறுதல் ஆனேன். முன்பு ஜம்மிகுண்டாவில் பணியாற்றும்போது, தினமும் காலை பக்திப் பாடல்களுக்கு இடையே சாலைப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும், இளைஞர்களையும், மாணவர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் சில வார்த்தைகள் பேசுவேன். அடுத்து தேசப் பக்திப்பாடல்கள் ஒலிக்கும். காவல் அதிகாரியாக என கடமையைச் செய்ததற்கும் அப்பால் இந்தத் தேசப் பக்தி சேவை எனக்கு மிகுந்த மனத் திருப்தியை அளித்தது.வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாக இன்னமும் ஜம்மிகுண்டா மக்களுடன் தொடர்பில் இருக்கிறேன்.
ஜம்மிகுண்டாவில் தினமும் தேசிய கீதம் இசைக்கப்படுவது பற்றிக் கேள்விப்பட்டு, தெலங்கானாவின் பல்வேறு ஊர்களிலும் இருந்து வந்து வார்வையிட்டுச் செல்கின்றனர். அவர்கள் தங்கள் ஊர்களிலும் இதனை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
ஹரியானாவில் இருந்துகூட ஒரு குழு இங்கே வந்து பார்த்துவிட்டுச் சென்று தங்க ள்ஊரில் இதனைஅறிமுகப்படுத்திஉள்ளனர்.
தேசம் என்பது மண் மட்டுமில்லை; அதன்மக்களும்தான்!
தினமும் காலையில் நாடு முழுக்கத் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும்; அதனால் மக்களிடம் தேசப் பற்று நிச்சயம்அதிகரிக்கும்'' என்றார்.