வெப் சீரிஸை நோக்கி

கதைகளையும் கலையையும் தேடி மக்கள் அரங்குக்கு வந்தனர். கலைஞர்களை மக்கள் அண்ணாந்து பார்க்கத் தொடங்கினர்.
வெப் சீரிஸை நோக்கி
Updated on
2 min read


கதைகளையும் கலையையும் தேடி மக்கள் அரங்குக்கு வந்தனர். கலைஞர்களை மக்கள் அண்ணாந்து பார்க்கத் தொடங்கினர்.
மேடை என்பதால் விளக்குகளில் வெளிச்சம் கூட்டிக் கதைகளை இன்னும் சுவாரஸ்யமாய்ச் சொல்ல முடிந்தது; கலைத் தன்மை கூடியது. காலம் கடக்க, தொழில்நுட்பம் மேடை நாடகத்தை சினிமாவாக்கியது. சினிமாவின் சாத்தியங்கள் வாய்ப்புகளை அகலப்படுத்தி அதிகப்படுத்தியது. கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே திரை வந்தது. அதுவரை ரசிகர்கள் தன்னைப் போன்ற, தன்னளவிலேயே உள்ள கலைஞர்களையே கண்டுவந்தனர்.
சினிமா அதை மாற்றியது; விஸ்வரூபம் எடுத்தார்கள் கலைஞர்கள். பறந்து பறந்து சண்டை போட்ட நாயகன், நொடிக்கு ஒருமுறை உடை மாற்றிய நாயகி, இரட்டைக் கதாபாத்திரங்கள், வண்ண மயமான லொகேஷன் என சினிமா மேஜிக் காட்டியது. தொழில்நுட்பம் புரியாத ரசிகர்கள் அந்தக் கலையில் மயங்கிப் போயினர். பெரிய திரையில் பார்த்ததாலோ என்னவோ கலைஞர்கள் ஹீரோவானார்கள்.
ரசிகர்கள் அவர்களைக் கடவுளாகவே பார்க்கத் தொடங்கினார்கள். போலவே, கதைகளும் கதை சொல்லும் உத்திகளும் எதார்த்தத்தை மீறிப் போயின. சினிமா ஆரம்பப் புள்ளியான தெருக்கூத்திலிருந்து எவ்வளவோ மாறி வந்திருக்கிறது; விலகி வந்திருக்கிறது. அதற்கு இன்னுமொரு சாட்சி வெப் சீரிஸ்.
சினிமாவுக்கு இப்போது ஆன்லைனில் ஆதரவு அமோகம். தியேட்டர்களைவிட ஆன்லைனில் சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல கோடிகளைத் தாண்டிக்கொண்டிருக்க, ஆன்லைனுக்காகவே படம் எடுக்கும் கலாசாரம் தொடங்கிவிட்டது .
"வெப் சீரிஸ்' என அடையாளப்படுத்தப்படும் இந்த வகைப்படங்கள்தாம் இப்போது ட்ரெண்டிங். இதனால் இதுவரை திரையரங்கையே நம்பியிருந்த பல நட்சத்திரங்கள் வெப் சீரிஸ் பக்கம் வந்து விட்டார்கள்.
முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் எனத் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது வெப் சீரிஸ் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பி யிருக்கிறார்கள். சமீபத்தில் தனுஷ் அளித்த பேட்டியில், ""வெப் சீரிஸ் இயக்கும் எண்ணம் இருக்கு. அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறேன்'' என்று கூறியிருந்தார். அவர் ஒப்பந்தமான படங்களின் வேலை முடிந்திருப்பதால் தனுஷின் வெப் சீரிஸ் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் தனது "ஒன்றாக என்டர்டெயின்மென்ட்' தயாரிப்பில் "வீக் எண்ட் மச்சான்' என்னும் வெப் சீரியஸை தயாரித்துவருகிறார்.
அவரைத் தவிர, "முகவரி', "தொட்டி ஜெயா', "ஏமாலி' படங்களை இயக்கிய வி.இஸட் துரையும் தற்போது "அருவி' படத்தில் நடித்த சுவேதா சேகரை வைத்து ஒரு வெப் சீரிஸ் இயக்க திட்டமிட்டுள்ளார். ஆனால், இதை அவர் ஹிந்தியில் இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை சுவேதா அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
"திருதிரு துறுதுறு' படத்தை இயக்கிய நந்தினி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெப் சீரியஸ் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். அவரின் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் சுனைனா நடிக்கிறார். இந்த சீரிஸூக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
பாலிவுட், டோலிவுட் சினிமா பிரபலங்களும் வெப் சீரிஸில் பிஸியாக நடித்து வருகின்றனர். நடிகர் மாதவன், உடல் உறுப்பு தானத்துக்காகத் தொடர்ந்து நடைபெறும் கொலைகளை மையமாக வைத்து "பிரீத்' என்ற வெப் சீரியஸில் நடித்தார். ஹிந்தியில் இதை மயங் ஷர்மா இயக்கினார். மாதவனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் ராணாவும், தமிழில் பாபி சிம்ஹாவும் வெப் சீரிஸ் ஒன்றைத் தயாரித்து நடிக்கும் முடிவில் இருக்கிறார்கள்.
நடிகர் ராதாரவி முதன்முதலாக வெப் சீரீஸில் நடித்திருக்கிறார். சினிமா, அரசியல் ஆகியவற்றை தன் நகைச்சுவை கலந்த எதார்த்தமான பேச்சால் கவர்ந்த இவர், இப்போது வெப் சீரிஸ் பக்கம் வருவது எதிர்பார்ப்புக்குரியதாக மாறியிருக்கிறது.
தமிழ், மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் நடித்துப் புகழ்பெற்ற இவர் சின்னத்திரை நாடகங்கள், குறும்படங்கள் என நடித்து வந்தார். "சர்கார்' போன்ற பெரிய படங்களில் நடித்து வந்தாலும் இளம் இயக்குநர்களின் புது முயற்சிகளுக்கு உறு
துணையாக இருந்து வருகிறார். தற்போது, இன்றைய டிரெண்டான வெப் சீரிஸிலும் களமிறங்கி இருக்கிறார். "கேங்ஸ்டர் டைரீஸ்' எனும் வெப் சீரிஸின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு இயக்குநர் இயக்குகிறார்கள்.
அதில், இயக்குநர் ஜமீர் கான் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "நேம்லெஸ் கேங்ஸ்டர்' என்ற பகுதியில் ராதாரவி முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார்.
ராதிகா சரத்குமார் தயாரிப்பில் இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் தலைமைச்செயலகம் வெப் சீரிஸ் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அரசியல் விமர்சனக் கதையாக இது உருவெடுக்கிறது.
இயக்குநர் பிரியா, நடிகர் இயக்குநர் பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெப் சீரிஸ் ஒன்றை இயக்குகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் அமீர் நடிக்க "நிலமெல்லாம் ரத்தம்' என்ற வெப் சீரிஸூம் வெளியாகவுள்ளது.
ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கவுள்ள வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார் எஸ்.ஜே. சூர்யா. இதனை புஷ்கர் காயத்ரி தயாரிக்க உள்ளார். தற்போது படப்பிடிப்புக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com