/

தொகுதி மறுவரையறை: ஏப். 29-க்குப் பிறகு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த கார்கே வலியுறுத்தல்!

தொகுதி மறுவரையறை குறித்து கார்கே கூறியது..

News image

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - PTI

Updated On :12 ஏப்ரல் 2026, 6:42 am

தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பான பிற அம்சங்கள் குறித்த விவரங்கள் இல்லாமல் மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் குறித்து பயனுள்ள விவாதம் நடத்துவது சாத்தியமற்றது. ஏப்ரல் 16 முதல் 'நாரி சக்தி வந்தன் ஆதினியம்' குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பாகப் பிரதமர் அனுப்பிய கடிதத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, கார்கே இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு கார்கே எழுதிய கடிதத்தில்,

மாநிலத் தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவது, மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதில் அரசு அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் அவசரம் காட்டுவதாக எழும் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

2023 சட்டத் திருத்தங்களுடன் இணைக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து விவாதிக்க ஏப்ரல் 29-க்குப் பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாரி சக்தி வந்தன் ஆதினியம் - மகளிர் இடஒதுக்கீடு (106வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2023)-இல் நாடாளுமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அச்சமயத்தில், இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில், இந்த முக்கியமான சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும் என்று நான் வலியுறுத்தியிருந்தேன்.

இச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்குப் பரவலான ஒருமித்த கருத்து நிலவியதாகப் பிரதமர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபோதிலும், அவர் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. அந்தச் சம்பவம் நிகழ்ந்து 30 மாதங்கள் கடந்துவிட்டன. இப்போது, ​​எங்களை நம்பிக்கையில் எடுத்துக்கொள்ளாமலேயே இந்தச் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை குறித்த எந்த விவரங்களையும் வெளியிடாமலேயே, உங்கள் அரசு மீண்டும் எங்கள் ஒத்துழைப்பைக் கோருகிறது.

தொகுதி மறுவரையறை மற்றும் அது சார்ந்த பிற அம்சங்கள் குறித்த விவரங்கள் இல்லாமல், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டம் குறித்துப் பயனுள்ள வகையில் விவாதிப்பது சாத்தியமற்றது. இதுதொடர்பாக உங்கள் அரசு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.

இது உண்மைக்குப் புரப்பானது என்பதை வேதனையுடன் கூறுகிறேன். தற்போது திட்டமிடப்பட்டு வரும் அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்காக, ஏப்ரல் 29 தற்போதைய தேர்தல் சுற்று முடிவடைந்த பிறகு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Summary

Congress President Mallikarjun Kharge has urged Prime Minister Narendra Modi to convene an all-party meeting to discuss constituency delimitation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.