ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அந்த மூன்று நாள்கள் சீராக..!

என் மகளுக்கு வயது 18. கருப்பையில் எந்தக் கோளாறுமில்லை. ரத்தணுக்கள் நன்றாகவே உள்ளன.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அந்த மூன்று நாள்கள் சீராக..!

என் மகளுக்கு வயது 18. கருப்பையில் எந்தக் கோளாறுமில்லை. ரத்தணுக்கள் நன்றாகவே உள்ளன. நன்றாக உணவும் சாப்பிடுகிறாள். ஆனாலும் மாதவிடாய் சீராக ஏற்படுவதில்லை. தற்சமயம் 90 நாள்கள் கடந்து விட்டன. பரத நாட்டியப் பயிற்சிக்கு செல்கிறாள். உடற்பயிற்சிகளாகிய யோகா, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் எல்லாம் செய்தும் ஏன் மாதவிடாய் தாமதம் ஏற்படுகிறது...?

சுந்தரி, நங்கநல்லூர்,
சென்னை.

மூளையிலிருந்து சுரக்கும் சில சுரப்பிகளின் குறைபாடும், கருப்பையில் ஏற்பட வேண்டிய உந்துதல் சக்தியின் குறைபாட்டினாலும் மாதவிடாய் தாமதத்திற்கான காரணமாக இருக்கலாம். மாதவிடாயை சீராக்கித் தரும் வெந்தயம் - உளுந்து - எள்ளு - நல்லெண்ணெய் போன்றவை அதிகம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அரிசியும் வெந்தயமும் கலந்த தோசை, உளுந்து சேரும் இட்லி, தோசை, வடை, எள்ளு ( கறுப்பு ) பொடித்து சூடான சாதத்துடன் கலந்து, நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து காலை உணவாகச் சாப்பிடுதல், சிறு நல்லெண்ணைய்யை சூடான இட்லியின் மேல் ஓட்டைப் போட்டு அதில் ஊற்றிச் சாப்பிடுதல், வெளிப்புற உபயோகமாக தலையில் வெது வெதுப்பாக நல்லெண்ணெய்யைத் தடவி, அரை - முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, வெது வெதுப்பான தண்ணீரில் குளிப்பது ஆகியவை நல்லது. பெண்களுக்குத் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை தினமும் செய்ய முடியாத நிலையில், வாரம் இரு முறையாவது அதுவும் மிகவும் முக்கியமாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குளிப்பதை பழக்கமாக்கி கொண்டால் சுரப்பிகளின் செயல்பாடு சுறுசுறுப்புடன் ஏற்படத் தொடங்கும். 

உடற்பயிற்சியில் ஸ்கிப்பிங் எனப்படும் கயிற்றை இரு கைகளினாலும் பிடித்துக் கொண்டு தன்னைத் தானே அந்தக் கயிற்றால் சுழற்றி சுழற்றி எம்பி எம்பி குதிப்பது மிகவும் நல்லதொரு பயிற்சியாகும். யோகப் பயிற்சியில் மாதவிடாய் தாமதத்தை நீக்குவதற்கான பிரத்யேகப் பயிற்சிகள் உள்ளன. அவற்றையும் கற்றறிந்து தங்களுடைய மகள் செய்யலாம். 

அடி வயிற்றுப் பகுதியை தன்னுடைய பிடியின் கீழ் வைத்திருக்கும் அபான வாயுவின் சீற்றம் அல்லது மந்த நிலை ஆகியவற்றின் வாயிலாகவும் தாமதம் ஏற்படலாம். மலப்பை மற்றும் கருப்பையில் தங்கும் வாயுவின் வெளியேற்றத்தை விளக்கெண்ணெய் செய்து விடும் என்பதால், 15 நாள்களுக்கு ஒரு முறை, சுமார் 200 மில்லி லிட்டர் சூடான பாலுடன் கலந்து மதியம் பசித்திருக்கும் வேளையில் சாப்பிட, நீர் பேதியாகி வாயுவை நன்றாக வெளியேற்றி கீழ்க்குடல், கருப்பை ஆகிய பகுதிகளை சுத்தப்படுத்தித் தரும். இதனால் அடைபட்டுள்ள நாளமில்லாச் சுரப்பிகளின் செயல்கனைத்தும் மேம்பட்டு, மாத விலக்கை சீராக்கித் தரும். 

இது போன்ற நிலைகளில், பெண்களின் நாடித்துடிப்பை அறிந்து அதற்கேற்றாற்போல் ஆயுர்வேத மருந்துகளை அளித்து, உதிரப்போக்கிற்கான வரவை எதிர்நோக்கலாம். அதற்குக் காரணம், நீங்கள் குறிப்பிடும் வகையில் எந்தக் கோளாறுமில்லாமல் மாத விலக்கு தாமதப்படுத்துவதால், சில நேரங்களில் நாடித்துடிப்பை கணித்து மருத்துவம் செய்வதால் பலன் ஏற்படலாம். 

பிறப்புறுப்பின் வழியாக, கருப்பைக்குள் கடத்தப்படும் மூலிகைத் தைலங்கள், ஆசனவாய் வழியாக மலப்பைக்குக் கடத்தப்படும் மூலிகைத் தைலங்கள், அடி வயிற்றில் மூலிகை தைலங்களைத் தடவி, இளஞ்சூடான தண்ணீரில் வயிறு மூழ்கும் படி அமரச் செய்தல் போன்றவற்றாலும் முயற்சி செய்து மாத விலக்கை சீராக்கலாம். உள்ளுக்குச் சாப்பிடவும் நிறைய ஆயுர்வேத மருந்துகள் உள்ளன..

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com