அன்றாடப் பணிகளை நாமே செய்கிற நிலை மாறி, ஆள்களையும், இயந்திரங்களையும் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால், நூற்றி ஐந்து வயது முதியவர் கே.கோபாலகிருஷ்ணன் தனது வேலையை தானே செய்துகொள்வதோடு, இலவசமாக இயற்கை மருத்துவமும் பார்த்துவருகிறார்.
திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த அவரிடம் பேசியபோது:
'1918- இல் நான் பிறந்தேன். நான் இளமையில் மும்பையில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் சர்தார் வல்லபாய் படேலை நேரில் சந்தித்துப் பேசியுள்ளேன். அவரது பேச்சின் உந்துதலால், பள்ளிக்கே செல்லாமல் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றேன்.
அந்தக் காலத்தில் நாடு முழுவதும் சுற்றியதில் ஹிந்தி, மராட்டி, துளு, கொங்கணி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளை அறிந்து சரளமாகப் பேசுகிறேன். ரயில்வே துறையில் ஓட்டுநர், எலக்ட்ரிக்கல் பிரிவில் பணியாற்றி ஓய்வும் பெற்றேன்.
எனது மனைவி கமலா இறந்துவிட்டதால், ரயில்வேயில் பணியாற்றிய ஓய்வு பெற்ற மகன் வாசுதேவனுடன் வசித்து வருகிறேன். எனக்கு பேரன், கொள்ளு பேரன், பேத்திகள் உள்ளனர்.
தந்தையை இளம்வயதிலேயே பக்கவாதத்தால் பறிகொடுத்த துயரமும், நெருங்கிய சிலர் நோய்வாய்ப்பட்டு இறந்ததும் எனது மனதை கடுமையாகப் பாதித்தது. இதைத் தீர்க்கும் எண்ணத்தால் இயற்கை மருத்துவத்தை ஆர்வமுடன் கற்றேன். அனைவரும் நோயின்றி நலமுடன் வாழ்வதற்காக, இலவசமாகவே ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். நோயற்ற வாழ்வுக்கு இயற்கை மருத்துவமும், சைவ உணவுமே சாலச்சிறந்தது. அதனால் கல்வி நிலையங்கள், பொது நிகழ்ச்சிகளில் ஊக்கச் சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகிறேன்.
தற்போது 105 வயதாகும் நான் சைக்கிள், பைக், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களை தற்போதும் நன்றாக ஓட்டுவேன். தினமும் உடற்பயிற்சியுடன், சிறப்பு உணவு ஏதுமின்றி, வீட்டில் தயாரிக்கப்படும் உணவைத் தேவையான அளவு உண்கிறேன். டீ, காபிக்குப் பதிலாக 27 மூலிகைகளைக் கொண்டு நானே தயாரித்த கசாயப் பொடியில் வெல்லம் கலந்து அருந்தி வருகிறேன். இதுவே எனது இளமையின் ரகசியம்.
எனது பணிகளை நானே செய்கிறேன். உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறேன். நல்லதையே நினைத்து, நல்லதை செய்வதால் இளமையாக உணர்கிறேன். இன்றைய இளைஞர்கள் பிறருக்கு உதவிகளைச் செய்து, நல்ல உணவை உண்டு, உடற்பயிற்சி செய்தால், என்னைவிட அதிக வயது ஆரோக்கியமாக வாழலாம்.
குடும்ப வாழ்வில் சிக்கல்களை சந்திப்பவர்
களிடம் பேசி, அவர்களது இனிமையான மணவாழ்வுக்கு இலவசமாக ஆலோசனைகளையும் வழங்குகிறேன்'' என்றார்.