

என் மாமியார் வயது 66. குளியலறையில் தவறி வழுக்கி விழுந்ததால், கழுத்துத் தண்டுவடப் பகுதியில் அடிபட்டு அலோபதி நவீன மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தண்டுவட அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு கழுத்து முதல் பாதம் வரை உணர்ச்சியே இல்லாமல் இருக்கிறார். டியூப் வழியாக உணவு செலுத்தப்படுகிறது. அவர் உடல் நலம் தேற ஆயுர்வேத மருத்துவம் உதவுமா?
-லலிதா,
சென்னை.
மனித உடலில் 107 மர்ம ஸ்தானங்கள்உள்ளதாக ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அதில் "க்ரிகாடிகா' எனும் மர்மம் கழுத்துத் தண்டுவடத்திலுள்ளது. இவ்விடத்தில் அடிபட்டுவிட்டால் சிலருக்கு தலையானது தொடர்ந்து ஆடிக்கொண்டேயிருக்கும்.
வேறு சிலருக்கு, நீங்கள் குறிப்பிடுவதுபோல, உடல் மரக்கட்டை போல உணவற்றுக் கிடக்கும். மலம்- சிறுநீர் கழிப்பது தெரியாது. பசி எடுத்தாலும் கூற இயலாது. இப்படி முக்கியமான செயல்கள்அனைத்தும் கட்டுப்பாட்டிலிருந்து நழுவி விடுவதால், தண்டுவடப் பகுதியானது மனித வாழ்வில் பெரும்பங்காற்றக் கூடியதாக இருப்பதால், அதை வலுவாக வைத்திருக்க வேண்டும் என்ற அறிவுரையை வழங்கியுள்ளது.
அறுவைச் சிகிச்சையின் மூலமாக, உங்கள் மாமியாருக்கு தண்டுவடங்கள் இடையே அமைந்துள்ள வில்லைகளை மாற்றி, புதிதாக வைத்து தைத்துள்ளார்களா அல்லது கம்பி- ஸ்க்ரூ வைத்து முடுக்கியுள்ளார்களாக என்பதை அறிய வேண்டும்.
உணர்விழந்த உடல்பகுதிகளுக்கு தண்டுவிட வழியாக உணர்வூட்டக் கூடிய வழிகள் என்ன என்பதை நாம் ஆராய வேண்டியுள்ளது.
முகுதுத் தண்டுவடப் பகுதி முழுவதும் மூலிகைப் பொடி ஒத்தடம் கொடுப்பதன் பலனாக, அங்கு ஏதேனும் நீர்க் கோர்வை ஏற்பட்டிருந்தால் அதைப் பிரித்து அகற்றிவிடலாம். நீருள்ள பகுதியில் தைலத்தை வைப்பது தவறானது என்பதால், முதலில் அப்பகுதியை வரட்சியுறச் செய்து, அதன் பிறகு தைலத்தின் மூலமாக நெய்ப்புறச் செய்வதே நலம்.
வரண்ட சைக்கிள் செயினில் கிரீஸ் போட்டால், சைக்கிள் சத்தமின்றி ஓடுவதைப் போல, வரண்ட பகுதியில் தைலமானது உடன் உறிஞ்சப்பட்டு, அந்தப் பகுதிக்கான செயல்திறனைத் தூண்டுகிறது.
அவரால் குப்புறப் படுக்க முடியாது என்பதால், பிறர் துணையுடன் குப்புறப்படுக்க வைத்தால்தான் மேற்குறிப்பிட்ட சிகிச்சை முறையைச் செய்ய முடியும். உட்கார வைத்து செய்ய முடியுமா என்று ஆலோசித்தால், இடுப்புப் பகுதி அதற்கு ஒத்துழைக்காது.
மூலிகைப் பொடி ஒத்தடம் சுமார் முக்கால் மணி நேரம் முதல் ஒரு மணி நேரமாவது இதமாகவும் பதமாகவும் செய்ய வேண்டும். அதன்பிறகு இரண்டு மூன்று மணி நேரம் கழித்து, தைலத்தை இளஞ்சூடாக தண்டுவடப் பகுதியில் பஞ்சில் நனைத்துப் போட வேண்டும். அதற்கும் சுமார் ஒரு மணி நேரம் படுத்திருக்க வேண்டும்.
உணவு செல்லும் ரப்பர் போன்ற குழாய் இருந்தால் அது சாத்தியப்படுமா என்ற சந்தேகம் உள்ளது. ஏற்கெனவே அவர் அதன் மூலமாகத் தான் வயிற்றில் உணவைப் பெறுகிறார் என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அதனால் அவர் ஆங்கில மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், திரவ உணவையாவது வாய் வழியாக விழுங்கக் கூடிய õலையில் இருந்தால்தான் முன்குறிப்பிட்ட சிகிச்சை முறைகளைச் செய்ய இயலும்.தைலத்தைப் பொத்தி வைக்கும் தண்டுவட சிகிச்சை நிறைவடைந்தவுடன் மூலிகைகளால் உண்டாக்கப்படும் நீராவிக் குளியலை, தண்டுவடம் முழுவதும் காட்டப்பட வேண்டும். அதற்கு மேலும் 20-3- நிமிடங்கள் தேவைப்படும்.
உடல் வாகு- உபாதையின் தன்மை - தாங்கக் கூடிய உடல் தின்மை- உணவேற்கும் முறை என பல விஷயங்கள் அவருடைய நிலையை நன்கறிந்த பிறகே, வைத்தியம் செய்ய முடியுமா, முடியாதா என்பதைக் கூற முடியும்.
மருத்துவமனையிலிருந்து அவர் வீட்டுக்கு வருவதற்குள், மருத்துவர்களின் தரமான சிகிச்சையால் முன்னேறிவருவார் என்று திடமாக நம்புவோமா?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.