ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குழந்தை பாக்கியம் கிடைக்க...

கருத்தரிக்கவும் மலட்டுப் புழு விழவும் நாட்டு மருந்துகள் இருந்தால் கூறவும்.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: குழந்தை பாக்கியம் கிடைக்க...

கருத்தரிக்கவும் மலட்டுப் புழு விழவும் நாட்டு மருந்துகள் இருந்தால் கூறவும்.

கல்யாணி,
திருவள்ளூர்.

வெல்லம் ஒரு கட்டி, குப்பைமேனிச் சாறு ஐம்பது மில்லி, சுத்தமான பொரித்த பெருங்காயம் மூன்று கிராம் ஆகியவற்றை கலந்து ஒரு புதுச்சட்டியிலிட்டு ஒரு வெள்ளைத் துணியால் மூடி, இளம் வெயிலில் வைத்து, மாதவிடாய் காலத்தில் மூன்று நாளும் சாப்பிட்டு வரக் கருப்பையில் உள்ள மலட்டுப் புழு விழும். மூன்று முறை செய்தால் ஸ்திரீ கர்ப்பம் அடைவாள்.

ஆடாதோடை இலை, சிறுகுறிஞ்சா இலை, மலர்ந்த முருங்கைப் பூ ஆகிய மூன்றையும் பசுவின் பாலில் அரைத்துக் குழப்பி மூன்று நாள் சாப்பிட, மலட்டுப் புழு விழும். ஸ்திரீக்குக் கர்ப்பமும் உண்டாகும்.

தேங்காய் எண்ணெய்  நூறு மில்லி, நல்லெண்ணெய் ஐம்பது மில்லி, ஆடாதோடைச் சாறு முப்பது மில்லி, வேப்பிலைச் சாறு பதினைந்து மில்லி ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பின் மீது ஏற்றிப் பக்குவமாய் எரித்து வடித்த இந்த எண்ணெயை பக்குவமாக எரித்து வடித்த இந்த எண்ணெயை பன்னிரண்டு நாள்கள் சாப்பிட்டு வர, அந்த ஸ்திரீக்குப் பிள்ளை உண்டாகும்.  புளிப்பு, காரம் போன்ற உணவுப் பொருள்களை நீக்கிவிடவும்.

பிரமியிலைச் சாறு நூறு மில்லி எடுத்து சூரிய கிரணத்திலும், சந்திரக் கிரணத்திலும் வைத்து அதைப் பருகிவர ஸ்திரீக்குக் கர்ப்பம் உண்டாகும். அதனோடு, சௌக்கியமும் உண்டாகும்.

துத்தி இலையை வாய் பேசாமல் கடவுளைத் தொழுது பறித்து, நெல்லைக் குத்தி அரிசி எடுத்து அதனுடன் நன்றாக இடித்து வைத்துகொள்ளவும்.  இதை நல்லெண்ணெயில் குழைத்துச் சாப்பிட, ஆண் குழந்தை உண்டாகும். நெய்யில் குழைத்துச் சாப்பிட, பெண் குழந்தை உண்டாகும்.

தீட்டான தினங்கள் மூன்று நாள்களிலும் இரவு பட்டினியாய் இருந்து, மறநாள் விடியற்காலைகளில் தாமரைப் பூவைப் பசும்பாலில் அரைத்து அந்த நாள்களில் பருகி, வரக் குழந்தை உண்டாகும்.

தீட்டாகி ஸ்நானம் செய்த தினத்திலிருந்து காலையில் நெய்யும்,  நல்லெண்ணெயும் சேர்த்துப் பனை வெல்லமும் சிறிது கூட்டிக் கையில் குழைத்துப் பகவானை ஸ்மரித்துச் சாப்பிட்டு வந்து புணர்ச்சியில் கூடினால் குழந்தை உண்டாகும். இவ்வாறு மூன்று நாள் சாப்பிடவும்.

இந்துப்பு, காசுக்கட்டி, பூவரம்பட்டை ஆகிய மூன்றையும் எடுத்துத் தண்ணீர்விட்டு நன்றாக அரைத்து தலை முழுகிய நாலாந்தினம் முதல் காலையும் மாலையும் நான்கு நாள்களுக்கு இந்த மருந்தைச் சாப்பிட்டு, வரக் கர்ப்பம் உண்டாகும்.

முருங்கை வேர் பதினைந்து கிராம், நிலப்பனைக் கிழங்கு பதினைந்து கிராம், அரை லிட்டர் பால் விட்டு நன்றாக அரைத்துச் சாப்பிட்டு, புணர்ச்சியில் ஈடுபட குழந்தைகள் உண்டாகும்.

ஒரு புது மண் குடத்துக்குள் மஞ்சளை அரைத்துத் தடவி, அதில் தண்ணீர்விட்டு வைத்து, மாதவிடாயின் மூன்றாம் தினத்தன்று இந்த மஞ்சள் தண்ணீரால் குளிப்பாட்டி தலை துவட்டுவதற்கு முன் முடக்கத்தான் சாறு ஐம்பது மில்லி, நல்லெண்ணெய் ஐம்பது மில்லி ஆகிய இரண்டையும் குலுக்கிச் சாப்பிட, அந்த ஸ்திரீக்குக் குழந்தை உண்டாகும்.

மேற்குறிப்பிட்ட குறிப்புகள் அனைத்தும் சரபேந்திர வைத்திய முறைகள் (கர்ப்பிணி பாலரோக சிகிச்சை) ஐந்தாம் பதிப்பு எனும் நூலில் காணப்படுகிறது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com