தமிழ்நாட்டில் ஓடும் 125 ஆறுகளின் பெயர்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் வகையில், மனதைத் தொடும் வகையில் பாடல் உருவாக்கப்பட்டு, வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர் டாக்டர் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் கூறியது:
'ஐ.ஐ. டி. முன்னாள் மாணவர்களான நாங்கள் இணைந்து உருவாக்கிய ' சுத்தமான நீருக்கான சர்வதேச மையம்' என்ற அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய ஆறுகள், நீர்நிலைகளைப் பாதுகாப்பதையும் மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
ஆறுகள், ஆறுகளால் உருவாகும் ஏரிகள், கண்மாய்கள், குளங்களைப் பாதுகாப்பதற்கு முன்பாக, எத்தனை ஆறுகள் உள்ளன, அவற்றின் பெயர்கள் என்ன என்பதை மக்கள் அறிய முடிவு செய்தோம்.
முக்கிய ஆறுகளான காவிரி, வைகை, தாமிரவருணி, பவானி, தென்பண்ணை உள்ளிட்டவையே பெரும்பாலானோருக்குத் தெரியும். 125 ஆறுகளின் பெயர்களை மக்களின் மனதைத் தொடும் பாடலைத் தவிர வேறு எந்த வழியிலும், அணுக முடியாது.
'ஆறு' என்ற தலைப்பில், 'காவேரி தென்பெண்ணை செய்யாறு மொய்யாறு பொங்கும் பொருநை நொய்யல் வைகை எங்கள் ஆறு... பாலாறு தேனாறு தென்னாறு ஐயாறு கொங்கு
பவானி கொள்ளிடம் யாவும் எங்கள் ஆறு...' என்று பாடலை எழுதி, இசையும் அமைத்துவிட்டேன். பின்னணி பாடகர்கள் உன்னிகிருஷ்ணன், ஸ்ரீநிவாஸ், பின்னணிப் பாடகிகள் உத்ரா, சரண்யா உள்ளிட்டோர் பாடினர். தற்போது அது வைரலாகி வருகிறது.
ஏற்கெனவே பாம்பே ஜெயஸ்ரீ, அவரது மகன் அம்ரித் ராம்நாத், கெளஷிகி சக்ரவர்த்தி ரிஷித் தேசிகன் இணைந்து பாட, இந்தியாவில் பாயும் 51 நதிகள், ஆறுகளின் பெயர்கள் மட்டும் பாடலில் வருமாறு தயாரித்து வெளியிட்டிருந்தோம்' என்கிறார் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன்.