ஆவணப்படுத்துதலில் அளவற்ற பயணம்...

மறக்கக் கூடாத தமிழ்ச் சான்றோர்களையும், தமிழுக்குத் தொண்டு செய்தவர்களையும் தேடித் தேடி ஆவணப்படுத்தி வருகிறார் முனைவர் மு. இளங்கோவன்.
ஆவணப்படுத்துதலில் அளவற்ற பயணம்...
Published on
Updated on
4 min read

அருள்செல்வன்

மறக்கக் கூடாத தமிழ்ச் சான்றோர்களையும், தமிழுக்குத் தொண்டு செய்தவர்களையும் தேடித் தேடி ஆவணப்படுத்தி வருகிறார் முனைவர் மு. இளங்கோவன்.

புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி நிறுவனப் பேராசிரியரான அவருடன் ஓர் சந்திப்பு:

தமிழ்ப் பெரியோர்களை ஆவணப்படுத்துதலில் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் நான் தமிழ் இலக்கிய மாணவராக இருந்தபோது, உ.வே.சாமிநாத ஐயரின் 'என் சரித்திரம்' நூலை விரும்பிப் படிப்பேன். தமிழ் இலக்கியங்களை ஆவணப்படுத்தலில் உ.வே.சா. மேற்கொண்ட முயற்சியும் உழைப்பும் கண்ணீர் வரச் செய்யும்.

கல்லாமையும் அறியாமையும் மிகுந்த மக்கள் நடுவே அவர் ஊர், ஊராகச் சென்று தமிழ் இலக்கியங்களைத் திரட்டித் தொகுத்து, அடுத்த தலைமுறைக்கு அளித்த பாங்கைக் கற்றபோது, அவர்போல் எதிர்பார்ப்பு இல்லாமல் தமிழுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

தேடித் திரட்டிய முதல் ஆவண முயற்சி எது ?

சிலப்பதிகாரம், சங்க இலக்கியம், பக்திப் பனுவல்கள், சித்தர் பாடல்கள், சிற்றிலக்கியங்கள் முதலியவற்றைப் பண்முறையில் பாடிய குடந்தை ப. சுந்தரேசனாரின் சேகரிப்புகளைத் திரட்டி, பாடல்களைக் கேட்டு, இசைத்தமிழின் வரலாற்றை அறிந்தேன். தமிழண்ணல், செந்தலை ந. கெளதமன், இ. அங்கயற்கண்ணி, மு.இளமுருகன், மா. வயித்தியலிங்கன், கோவை அரசு உள்ளிட்ட அறிஞர்களிடம் இருந்த ப. சுந்தரேசனாரின் ஒலி ஆவணங்களை 25 ஆண்டுகள் முயன்று திரட்டி, அவரது வாழ்க்கையை ஆவணப் படமாக்கினேன்.

பின்னர், தமிழகம், கேரள நாட்டுப்புறப் பாடல்களையும், ஈழத்து நாட்டுப்புறப் பாடல்களையும், மலேசியத் தோட்டப்புறப் பாடல்களையும் தொகுத்து 'வாய்மொழிப் பாடல்கள்', 'நாட்டுப்புறவியல்' எனும் இரு நூல்களையும் எழுதியுள்ளேன்.

என் முயற்சியால் துரையனார் அடிகளின் வரலாறு வெளியுலகுக்குத் தெரியவந்தது. இந்த நூல் அச்சானபொழுது, 'தினமணி' நாளிதழில் ஒரு பக்க அளவில் நூலின் முதன்மைச் செய்திகளை வெளியிட்டு, என் முயற்சியை ஊக்கப்படுத்தினர்.

தமிழ்ச் சான்றோர்கள் பற்றிய ஆவணப்படுத்தல் பின்தங்கி இருப்பது ஏன்?

தமிழர்களும், அறிஞர்களும் கடுமையாக உழைப்பவர்கள் என்றாலும் தங்களைக் குறித்த ஆவணங்களைப் பாதுகாப்பதில் பின்தங்கியவர்கள்தான். வெளிநாடுகளில் பல தலைமுறையினரின் பெயர், குடும்பச் சிறப்புகளைப் பாதுகாத்து வைப்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.

பின்லாந்து, நார்வே நாடுகளுக்குச் சென்றபோது, அவர்கள் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பாதுகாக்கும் வகையில் வீடுகளையும், புழங்குபொருள்களையும் காட்சிக்கு வைத்து, அடுத்த தலைமுறைக்கு அவற்றை அறிமுகம் செய்கின்றனர். தமிழர்கள் தங்கள் தாத்தா பெயர் கூடத் தெரியாதவர்களாக இருப்பது வருத்தம்தான்.

தமிழகத்தின் கோயில்கள், புகைப்படங்கள், ஓவியங்கள், சிற்பங்கள், சிலைகள், ஓலைச்சுவடிகளை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தினர் பாதுகாத்து வருகின்றனர்.

உங்கள் பயணம் எந்த அளவுக்குச் சென்றுள்ளது?

தமிழுக்குத் தொண்டாற்றியவர்கள் பற்றி கடந்த இருபது ஆண்டுகளாக இணையத்தில் எழுதி வருகிறேன்.

'தமிழ்ப் புலவர் வரிசை' என்னும் அமைப்பில் முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளைத் தமிழ் ஆய்வுலகுக்கு அளித்த கருப்பகிளார் இராமசாமிப் புலவரின் வரலாற்றை இணையத்தில் பதிந்ததற்காக, எனக்கு 'தமிழ் விக்கிப் பெரியசாமித் தூரன்' என்ற விருதை எழுத்தாளர் ஜெயமோகன் அளித்தார்.

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வாயிலாக, சங்க நூல்களுக்கும் காப்பியங்களுக்கும் உரை வரைந்த பெருமழைப் புலவர் வாழ்ந்த திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள மேலைப்பெருமழைக்குச் சென்று, அவர் குடும்பத்தினரின் வறுமை நிலையை 'தினமணி' நாளிதழ் வழியாக உலகுக்குத் தெரிவித்தோம். இந்தச் செய்தியைப் பார்த்த அப்போதைய முதல்வர் மு. கருணாநிதி உடனடியாக நடவடிக்கை எடுத்து, பெருமழைப் புலவரின் வாரிசுகளுக்கு பத்து லட்சம் ரூபாய் பரிவுத்தொகையாக வழங்கினார்.

பெருமழைப் புலவருக்கு நூற்றாண்டு விழாவும் நடைபெற அறிஞர்கள் பலரும் அந்தச் சிற்றூருக்கு வருகைபுரிந்து, அவரது சிறப்புகளை எடுத்துப் பேசினர். வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையினரும் பெருமழைப் புலவருக்கு அமெரிக்காவில் நூற்றாண்டு விழாவை நடத்தினர்.

இலங்கையில் பிறந்த விபுலானந்த அடிகளாரின் தமிழகத்துப் பணிகள் இலங்கைத் தமிழர்களுக்கே ஓரளவுதான் தெரிந்திருந்தது. நானும் கனடாவில் வாழ்ந்துவரும் சிவம் வேலுப்பிள்ளையும் இணைந்து, விபுலானந்த அடிகளாரின் வாழ்வியலை 55 நிமிடம் ஓடும் ஆவணப்படமாக எடுத்தோம். அடிகளாரின் 'யாழ்நூல்' தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்த புகழைக் கொண்ட நூலாகும்.

இதுவரை இப்படி எத்தனைப் பேரை இந்த வகையில் ஆவணப்படுத்தி இருக்கிறீர்கள்? அனுபவங்கள் என்ன?

ஆவணப்படுத்துவதற்கு நூல்களும், களப்பணிகளும் உதவியாக இருக்கும். பல ஊர்களுக்குச் சென்றுவந்தபோது, பலரின் உதவிகளையும் பலரின் எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளேன்.

தமிழ்ச்சான்றோர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வரலாறு (http://muelangovan.blogspot.com) என்ற இணையத்தில் கட்டுரைகளாகவும் ஒளி ஆவணங்களாகவும் அமைகின்றன. இதை சிலர் தங்களது பெயரில் நூல்களாகவும், கட்டுரைகளாகவும் வெளியிட்டு வருகின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வாழும் அறிஞர்களின் பணிகளையும் 'அயலகத் தமிழறிஞர்கள் ‘என்ற நூலில் தொகுத்துள்ளேன்.

'பொன்னி' இதழை நூல் வடிவிலும் கட்டுரை வடிவிலும் வெளிக்கொண்டு வந்ததற்கு, 'பொன்னி' ஆசிரியர்கள் முருகு சுப்பிரமணியன், அரு. பெரியண்ணன் ஆகியோரின் குடும்பத்தினர் செய்த உதவிகளை என்றும் நன்றியுடன் போற்றுவேன்.

'கங்கையில் எழுதிவிட்ட ஓலை' என்ற தலைப்பில், 'கையறுநிலைப் பாடல்' ஒன்றை விபுலானந்த அடிகளார் எழுதி, தனது நண்பர் இரா. கந்தசாமியார் மறைவுக்காக 'தமிழ்ப்பொழில்' இதழில் வெளியிட்டுள்ளார். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளாருடன் பணியாற்றிய தொல்காப்பிய அறிஞர் இரா. கந்தசாமியார் என்று அறிந்தேன்.

சோழவந்தான் என்னும் ஊரில் கிண்ணிமடத்தில் இரா. கந்தசாமியார் தங்கி, அங்குள்ள பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர். அவரது ஊரான வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள கூமாப்பட்டிக்குச் சென்று அவரின் உறவினர்களைக் கண்டும், சோழவந்தான் சென்று கிண்ணிமடம் மற்றும் இரா. கந்தசாமியார் சமாதி உள்ளிட்டவற்றைக் கண்டு வந்தும் எழுதியுள்ளேன்.

குடந்தை ப. சுந்தரேசனின் ஆவணப்படத்தைப் பல ஆண்டுகள் முயன்று உருவாக்கி, மலேசியாவில் டத்தோஸ்ரீ சாமிவேலு தலைமையில் வெளியிட்டோம். தருண் விஜயும் பங்கேற்றார். மலேசியத் தொழிலதிபர் டத்தோ சூ. பிரகதீஸ்குமார் அந்த ஆவணப்படத்தை உருவாக்க உதவி செய்தார்.

வெளியீட்டு நிகழ்வின்போது சாமிவேலுவிடம், 'இந்த ஆவணப் படத்தின் படிகள் ஆயிரம் எண்ணிக்கையில் வாங்கி, எதிர்வரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மாநாட்டுக்கு வரும் அன்பர்களுக்கு இலவசமாக வழங்கினால் தமிழிசை உலகம் முழுவதும் பரவும்' என்றேன். அவரும் சம்மதித்தார்.

ஆவணப்பட வெளியீட்டுக்குத் துணைசெய்த பேராசிரியர் மன்னர் மன்னனின் மகன் அந்த நேரத்தில் திடீரென இயற்கை எய்தியதால் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் வழங்க நினைத்த என் விருப்பம் தடைப்பட்டதே என்று கவலையுடன் இருந்தேன்.

அந்த நிலையிலும் மன்னர் மன்னனோ, 'ஆவணப்பட ஒளிவட்டுகளுடன் வருக' என்றார். நானும் பெரும் முயற்சி எடுத்து இரவோடு இரவாக ஆயிரம் ஒளிவட்டுகளைப் புதுச்சேரியில் தயார் செய்தோம்.

மலேசியாவுக்குப் பயணம் செய்யும் நேரத்தில் ஒளிவட்டைச் சோதித்துப் பார்த்தபொழுது, ப.சுந்தரேசனார் ஆவணப்படத்துக்குப் பதிலாக வேறு இரண்டு படங்கள் எங்கள் ஒளிவட்டில் பதிவாகி இருந்தன. தொழில்நுட்பச் சிக்கலால் இக்குழப்பம் நேர்ந்து பல லட்சம் ரூபாய் இழப்பு.

ஒளிவட்டுகள் இல்லாமல் மலேசியப் பயணத்தைத் தொடர்ந்தேன். இடையில் என் நிலையை மன்னர் மன்னனுக்குத் தெரிவித்தபோது, அந்த நெருக்கடியான நிலையிலும் 'மாஸ்டர் காப்பி இருக்கின்றதா?' என்று கேட்டார்.

அப்பொழுது மாமல்லபுரத்தைக் கடந்து எங்கள் மகிழுந்து, விமான நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. உடன் மாற்றுத் திட்டமிட்டு, அடுத்த விமானத்தில் பயணம் செய்த பேராசிரியர் ஒப்பிலா மதிவாணனிடம் மாஸ்டர் காப்பியை வழங்குமாறு புதுவை அன்பர் ஒருவருக்குத் தகவல் சொன்னேன்.

அவரும் புதுவையிலிருந்து எடுத்து வந்து மாஸ்டர் காப்பியை சென்னை விமான நிலையத்தில் மதிவாணனிடம் கொடுத்தார். ஐந்து மணிநேரம் இடைவெளியில் மலேசியாவுக்கு ப. சுந்தரேசனாரின் ஒளிவட்டு மாஸ்டர் காப்பி வந்து சேர்ந்தது. இரவு முழுவதும் படியெடுக்கப்பட்டு, மறுநாள் மாநாட்டுப் பேராளர்கள் கையில் சுந்தரேசனார் ஆவணப்படத்தின் ஒளிவட்டுகளை இலவசமாகச் சேர்த்தோம்.

தொல்காப்பியத்தை மட்டும் நீங்கள் முன்னெடுத்து ஆவணப்படுத்துவது ஏன்?

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். இந்த நூலின் தாக்கம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழ் இலக்கியப் பரப்பில் தொடர்கிறது. இந்த நூலில் கூறப்பட்டிருக்கும் செய்திகளைக் காணும்போது, பழந்தமிழ் மக்களின் அறிவார்ந்த வாழ்க்கை முறைகள் பதிவாகியுள்ளதை அறியலாம். தமிழின் இயல்பை எடுத்துரைக்கும் இந்த நூலை பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களிலிருந்து ஒதுக்கப்படும் நிலை உள்ளது.

நான் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்றபோது, தொல்காப்பிய அறிஞர் கு.சுந்தரமூர்த்தி உள்ளிட்டோரின் தொல்காப்பியப் பதிப்புப் பணிகளையும் அவரின் தொல்காப்பியப் புலமையையும் நேரில் கண்டுள்ளேன்.

தொல்காப்பியம் குறித்து எழுதுவோரும் பேசுவோரும் குறைந்துவரும் சூழலில் தொல்காப்பிய அறிஞர்களைப் பேசச் செய்து யூடியூபில் ஏற்றி, இதுவரை பல லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

கடல்கடந்த நாட்டினரும் தொல்காப்பியச் சுவையை அறிந்து வருகின்றனர். 'உலகத் தொல்காப்பிய மன்றம்' தொடங்கி, கிளைகளை உருவாக்கியுள்ளோம். தொல்காப்பியத்துக்கு என்று ஓர் இணையதளத்தை உருவாக்கிப் பராமரித்து வருகின்றோம். தொடர்ப்பொழிவுகளும் நடக்கின்றன.

தொல்காப்பியத்தை எந்த அளவிற்கு ஆவணப்படுத்தி இருக்கிறீர்கள்?

தொல்காப்பியம் தொடர்பான ஆவணங்கள் ஏறத்தாழ ஐந்நூற்றைத் தொகுத்து கனடாவிலும், அடுத்ததாக மும்பையிலும் கண்காட்சிகளை நடத்தினோம். இருநூற்றுக்கும் மேற்பட்ட தொல்காப்பிய அறிஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், உரையாசிரியர்கள், பதிப்பாளர்களின் படங்களைத் தொகுத்துப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்தோம். தொல்காப்பியம் குறித்த கு.சுந்தரமூர்த்தியின் பலமணி நேர ஆடியோக்கள் எம்மிடம் உள்ளன.

தொல்காப்பியம் குறித்த 'சிங்கப்பூர் தமிழ்முரசு' இதழில், மலேசிய நாட்டில் வாழ்ந்த திருநெல்வேலியைச் சேர்ந்த இரா. சண்முகம் 1950-களில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, நூலாகியுள்ளது.

ஆவணப்படுத்துதலில் உங்கள் தொலைநோக்குத் திட்டமும், எதிர்கால இலக்கும் என்ன?

கு. சுந்தரமூர்த்தியின் தமிழ் இலக்கியங்கள் குறித்தும், சைவ சித்தாந்த சாத்திரங்கள் குறித்தும், சமய நூல்கள் குறித்தும் பேசிய பலநூறு மணிநேர ஒலிவட்டுகளைத் தொகுத்துப் பாதுகாத்து வைத்துள்ளேன்.

இவ்வாறு பலரின் வரலாற்றை அடையாளம் கண்டு, பதிவுசெய்வதும் பாதுகாப்பதும், பரப்புவதும் எனது எதிர்காலத் திட்டமாகும். நூலில் எழுதினால் சிலரை மட்டும் சென்றடையும். இணையத்தில் பதிந்தால் பலரின் பார்வைக்கும் சென்று, தமிழ் ஆவணங்கள் பாதுகாக்கப்படும்.

நாட்டுப்புறப் பாடல்களோடு, நடவுப்பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், கும்மிப் பாடல்களைப் பதிந்து வைத்துள்ளேன்.

'பரிபாடல்' என்னும் நூல் இசையுடன் பாடப்பட வேண்டிய இலக்கிய நூலாகும். ஆனால் அதனை இசையுடன் பாடுவோர் தமிழகத்தில் இல்லை.

குடந்தை ப. சுந்தரேசனார் பண்முறையில் பாடிய பரிபாடலின் சில பாடல்கள் கிடைத்துள்ளன. முழுமையாகப் பாடிய பாடல்கள் பிரான்ஸ் நாட்டில் இருப்பதாக சில குறிப்புகள் உள்ளன. அந்தப் பாடல்களை மீட்டெடுத்தால் பழந்தமிழிசை அமைப்பை மீண்டும் கண்டு அடைய முடியும். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com