தன்னலமற்ற தேசத் தலைவர்கள் காமராஜர், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆகிய இருவர், நாட்டைப் பாதுகாக்கும் பணியின்போது உயிர்த் தியாகம் செய்த பத்து பேர் என 12 பேருக்கு திருச்சி தீரன் நகரில் மணப்பாறை சாலையில் உள்ள தனியார் கார் விற்பனை, சர்வீஸ் நிலைய வளாகத்தில் நினைவுத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அந்த நிறுவன உரிமையாளர் ஜெயகர்ணா கூறியது:
'நாட்டை காப்பதில் ராணுவத்தினர் பணி மகத்தானது. தேசத்துக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவத்தினருக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது. அந்த வகையில் 2017- ஆம் ஆண்டு முதல், எங்களது நிறுவன வளாகத்தில் நினைவுத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், தமிழகத்தில் இருமுறை முதல்வராக பதவி வகித்து 1,400-க்கும் மேலான அரசுப் பள்ளிகளைத் தொடங்கிய தன்னலமற்ற கர்ம வீரர் காமராஜர், ராணுவத்தில் பணியாற்றி உயிர்த்தியாகம் செய்து மத்திய அரசின் விருதுகளைப் பெற்ற அமர்ஜவான் ஜ்யோதி, மேஜர் ஜஸ்வந்தசிங் ராவத், மேஜர் மனோஜ்குமார் பாண்டே, மேஜர் சோமந்த் சர்மா, பிரிகேடியர் முகமது உஸ்மான், மேஜர் யோகேந்த்ராசிங் யாதவ், படைத்தளபதி அஜய் அகுஜா, ஃபீஸ்டு மார்ஷல் சாம் பகதூர், ஃபீல்டு மார்ஷல் கோ தந்தேரா, மாடப்பா கரியப்பா, மேஜர் சரவணன் ஆகிய பத்து பேர் என 12 பேருக்கு நினைவுத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் உள்ள கல்வெட்டுகள் ஒவ்வொருவரின் விவரங்கள் தனித்தனியாகப் பொறிக்கப்பட்டு அவற்றில் தேசியக்கொடியும் வரையப்பட்டுள்ளது.
எங்கள் நிறுவனத்துக்கு வருகை தருவோர் இவற்றைக் காணாமல் நுழைய முடியாது. அருகில் ஒரு கொடிமரமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டுதோறும் சுதந்திர, குடியரசு தினங்களில் நிறுவனம் சார்பில் தேசியக்கொடியேற்றி, அங்குள்ள 12 நினைவுத்தூண்களுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
உயிர் நீத்த ராணுவத்தினரில் சிலரது குடும்பத்தினருக்கும் உதவிகளும் செய்யப்பட்டுள்ளன. ராணுவ அலுவலர்கள் இங்கு வந்து விவரங்களைச் சேகரித்து, சென்றுள்ளனர்' என்கிறார்.