கண்டது
(சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓர் ஓட்டலின் பெயர்)
'மண் மணம் மாறாத உணவகம்.'
-கே. இந்து குமரப்பன், விழுப்புரம்.
(சேலம் மாவட்டம், கொளத்தூர் அருகே உள்ள சிற்றூரின் பெயர்)
'தானமூர்த்திகாடு.'
- ரா. விஜயகுமார், பம்மல்.
(சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள தேநீர் நிலையம் ஒன்றின் பெயர்)
'எங்க அப்பா கடை.'
-மல்லிகா அன்பழகன், சென்னை-78.
கேட்டது
(செய்யாறு பேருந்து நிலையத்தில் இரு நண்பர்கள்)
'எம் பொண்டாட்டி மாதிரி உம் பொண்டாட்டியும் எல்லை தாண்டுறாங்களா?'
'நீ கேக்கறது புரியலடா?'
'உன்னை அடிக்கறாங்களான்னு கேட்டேன்டா!'
-ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
(மதுரையில் ஓடும் பேருந்தில் நடத்துநரும் பயணியும்...)
'கண்டக்டர் சார்... விசில் குடுங்க!'
'விசிலை உங்ககிட்ட குடுத்துட்டு நான் எப்படி டியூட்டி பார்க்கிறது?'
-எம்.ரவீந்திரன், திருமருகல்.
(சென்னை, நந்தனத்தில் மாநகரப் பேருந்தில் இரு பயணியர்...)
'இந்த பஸ் கிண்டி போகுமா?'
'தெரியலை. மழை வருதுன்னு ஏறி உட்கார்ந்துகிட்டேன். ஃப்ரீ பஸ் தானே... எனக்கு தோதா எங்கேயாவது இறங்கிக்க வேண்டியது தான்!'
--கே.ஜி.எஃப். பழனி, கிழக்கு தாம்பரம்.
யோசிக்கிறாங்கப்பா!
சுத்தியலின் கடைசி அடியில்தான் உடைபடுகிறது, கல். புரிந்துகொள்ளுங்கள்... வெற்றி என்பது தொடக்கத்தில் இல்லை; இடைவிடாத
முயற்சியில்தான் அடங்கியுள்ளது.
-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.
மைக்ரோ கதை
'ரமா , கொல்லைப்பக்கம் கொடியிலே துணிகள் கிடக்கு... எடுத்துக்கிட்டு வா!'
வீட்டின் பின்புறம் சென்ற ரமா, வேப்பமரத்தைக் கண்டதும் பயந்து போனவளாய் வீட்டுக்குள் வந்தாள்.
'என்னடி, பேயைப் பார்த்த மாதிரி வர்றே?' என்று அக்கா சுமதி கேட்டாள்.
'பேய்.... பேய்தான்க்கா... பின்னாடி மரத்தில் வெள்ளையா நிக்குது!'
சுமதி வீட்டு கதவு, ஜன்னல் எல்லாவற்றையும் அடைத்தாள்.
இரவு இருவரும் படுத்த பின்னரும் உறக்கம் வரவில்லை.
விடிந்தது.
காலிங் பெல் அடிக்க, கதவை திறந்தாள் சுமதி. பக்கத்து வீட்டு பத்மா நின்றிருந்தாள்.
'அக்கா! உங்க வீட்டுல ஒட்டடைக்குச்சி இருந்தால் தாங்களேன்...... கொடியிலே காயப்போட்டிருந்த என்னோட வெள்ளை தாவணி காற்றிலே பறந்து போய் உங்க வீட்டு மரத்திலே மாட்டிக்கிச்சு... அதை எடுக்கணும்' என்றாள்.
சுமதியும் ரமாவும் பின்புறம் சென்று பார்த்தார்கள். வேப்ப மரத்தில் வெள்ளை நிறத்தில் நைலான் தாவணி ஒன்று காற்றில் அசைந்து கொண்டிருந்தது.
-ஜி.சுந்தரராஜன், திருத்தங்கல்.
எஸ்எம்எஸ்
எல்லாத் தலைகளையும்விட
ஒரு நல்ல இதயம் மேலானது.
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
அப்படீங்களா!
'கூகுள் மேப்ஸ்' என்ற வழிகாட்டி செயலியைப் பயன்படுத்தி பெயர் தெரியாத ஊரிலும் முகவரியைத் தேடிவிடலாம். அந்த அளவுக்கு வீதிகள், முகவரிகள் கொண்ட தரவுகளைத் துல்லியமாக கூகுள் சேமித்து வைத்துள்ளது.
கூகுள் செயலியை வாகன ஓட்டிகள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்பவும், பயணிக்கும் வாகனத்துக்கு ஏற்பவும் கூகுள் செயலி சாலைகளைத் தேர்வு செய்து காண்பிக்கும்.
இதில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) ஜெமினி புகுத்தப்பட்டு, அதன் மூலம் நடைப்பயணம் மேற்கொள்பவர்களுக்கும், சைக்கிளில் செல்பவர்களுக்கும் வழிகாட்டி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கூகுளில் உள்ள மைக்ரோபோன் ஐகானை தேர்வு செய்து, நடந்தபடியே கூகுளில் கட்டளையிட்டு தேவையான வழித்தடத்தைப் பெறலாம்.
சைக்கிளில் செல்பவர்களும், நடைப்பயணமாகச் செல்பவர்களும் கைப்பேசியில் எழுத்துகளைத் தேடிக் கண்டுபிடித்து பதிவிட்டு இடங்களைக் கண்டறிவதைத் தடுக்க கூகுள் இந்த கட்டளையிட்டு பெறும் சேவையை இணைத்துள்ளது.
நடைப்பயணம் செல்லும்போது அருகில் உள்ள உணவகம் உள்ளிட்ட தேவையான இடங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எவ்வளவு நேரத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தை சென்றடையலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
அதேநேரத்தில், சைக்கிள் ஓட்டியபடியே கூகுளில் ஜெமினி மூலம் கட்டளையிட்டு அவசர தகவல்களைப் பகிர்ந்தும் கொள்ளலாம்.
நாம் வருவதற்குத் தாமதமாகும் தகவலை குறிப்பிட்ட நபருக்கு சைக்கிளில் சென்றபடியே கட்டளையிட்டு குறுந்தகவலாக அனுப்பவும் முடியும்.
செல்லும் சாலையில் உள்ள பெரும் கடைகள் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் குறிப்பிட்டு இடதுபுறம் செல்லவும் என்றும், கூகுள் நமக்கு வழிகாட்டியாகச் செயல்படுகிறது.
இந்த புதிய சேவையைப் பெற கூகுள் மேப்ஸை அப்டேட் செய்துவிட்டு, ஜெமினியின் செயல்பாட்டை தொடங்கிவிட்டு வாகனப் பயணத்திலிருந்து நடைப்பயணத்துக்கு சேவையை மாற்றி அமைத்தால் போதும்.
-அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.