எனக்கு வயது 63. உணவுக்கு முன் மூன்று வேளையும் இன்சுலின் ஊசி, இரவு படுப்பதற்கு முன் ஒருவகையான இன்சுலின் ஊசி என நான்கு தடவை இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறேன். விடியற்காலையில் மூன்று மணி சுமாருக்கு கடும் பசி மற்றும் சர்க்கரை சத்து உடலில் குறைவதாக உணர்கிறேன். அதைச் சமாளிக்க கடலை மிட்டாய், முந்திரி, எள்ளுருண்டை எனக் கிடைத்ததை எல்லாம் வாரித் தின்றால்தான் காலையில் எழும்போது நன்றாக உணர்கிறேன். இதிலிருந்து மீள்வதற்கு வழி என்ன?
- ராமசாமி, ஆத்தூர்.
இன்சுலின் யூனிட் அளவை நீங்கள் குறைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காலை, மதியம், இரவு என்ன வகையான உணவை எடுக்கிறீர்கள், எத்தனை யூனிட் மருந்தை ஊசி மூலம் செலுத்திக் கொள்கிறீர்கள் என்பதை ஒரு நோட்டுப் புத்தகத்தில் தேதி வாரியாகக் குறிப்பிட்டு எழுதி வருவதுடன், வீட்டிலேயே சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ளும் கருவியைக் கொண்டு ஒவ்வொரு உணவுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்து பரிசோதனை செய்து, அதையும் குறிப்பிட்டு, ஒரு மாதத்துக்குப் பிறகு மருத்துவரிடம் காண்பித்தால், அவர் துல்லியமாக யூனிட் அளவைத் தீர்மானித்துக் கூறுவார்.
இதன் மூலமாக விடியற்காலை பசி, சர்க்கரை சத்து உடலில் குறைவது போன்ற உபாதைகளைத் தவிர்க்கலாம்.
மேலும் இரவு உணவுக்குப் பிறகு ஓரிரு மணி நேரங்கள் கழித்து, வீட்டில் உள்ள பெண்களை தொல்லைப்படுத்தாமல் நீங்களே பாலைக் காய்ச்சி, சூடாக இருக்கும்போதே இரண்டு கரண்டி ஹார்லிக்ஸ் லைட் அல்லது டி -புரோட்டீன் போன்றவற்றில் ஒன்றுடன் கலந்து பருகலாம்.
அதன் பிறகு நான்காவது இன்சுலின் ஊசியைச் செலுத்திக் கொள்ளலாம். இதனால் இரவு உண்ட உணவு மற்றும் பாலுடன் செல்லும் சத்து பானம் செரிப்பதற்கு நேரம் எடுத்துக் கொள்வதால், நீங்கள் குறிப்பிடும் விடியற்காலை தொல்லையில்லாமல் நிம்மதியாக உறங்கலாம். கண்டதையும் வாரித் தின்பதையும் தவிர்க்கலாம்.
இரவில் சுமார் 8 மணி வாக்கில் ஆயுர்வேத மருந்து பொடிகளாகிய திரிபலா சூரணம், அமிருத மேஹாரி என்னும் சூரணத்தையும் வகைக்கு 5 கிராம் வீதம் எடுத்து சுமார் 200 மில்லி லிட்டர் வெந்நீரில் கலக்கி ஊற வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி, இந்த மூலிகைத் தண்ணீரை மட்டும் அருந்தவும். இதனால் உங்களுக்குப் பல நன்மைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இன்சுலின் சுரக்கும் கணையத்தின் உள்பகுதி அணுக்களைத் தூண்டிவிட்டு, சுரப்பை ஏற்படுத்துவதற்கான புத்துயிரை மேம்படுத்தும். குடலின் உள்புறச் சவ்வுகளில் உருவாகும் செரிமான சுரப்பிகளைச் சாந்தப்படுத்தும். பெருங்குடல் பகுதியில் தங்கியுள்ள சக்கையான மலத்தை துப்புரவாக வெளியேற்றும். கல்லீரலை சுறுசுறுப்புடன் இயங்கச் செய்யும். எதிர்காலத்தில் இன்சுலின் ஊசியை நீங்கள் செலுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் இதனால் தவிர்க்கப் பெறலாம்.
மூன்று மாதத்துக்கு ஒரு முறை சர்க்கரை அளவை ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மூலம் நீங்கள் அவசியம் கண்டறிவது நலம். க்ரியாட்டினின், யூரியா ஆகியவற்றையும் பரிசோதிக்கவும். தர்ப்பைப்புல் ஊறிய தண்ணீரை அருந்துவதன் மூலம் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் நன்கு கட்டுப்படும் மற்றும் உள் உறுப்புகளின் சேதாரம் தவிர்க்கப்படும் என்ற ஆயுர்வேத பரிந்துரையும் உங்களுக்குப் பயன்படலாம்.
சர்க்கரையைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் நடைப்பயிற்சி எனும் புதிய சித்தாந்தம் தற்சமயம் தலை தூக்கி உள்ளது. இன்சுலின் ஊசியைச் செலுத்திய பிறகு நீங்களும் சுமார் 15 நிமிடங்கள் வரை வீட்டினுள்ளேயே மெதுவாக நடைப்பயிற்சி செய்யலாம்.
இதனால் இன்சுலின் யூனிட் அளவைப் படிப்படியாகக் குறைக்கலாம். பின்னர் அதிலிருந்து முழுவதுமாக விடுபடவும் செய்யலாம். ஆயுர்வேதத்தின் பிரத்யேக சிகிச்சை முறைகளாகிய ஸ்நேக பானம் (மூலிகை நெய் அல்லது எண்ணெய் மருந்து பருகுதல்) வாந்தி மற்றும் பேதி சிகிச்சை போன்றவை உங்களுக்கு நன்மை தரக்கூடியவை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயக கடமையாற்றிய 90 வயது மூதாட்டி
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கடுமையான அரிப்பைக் குணப்படுத்த...

தோசை மாவு விஷமானதில் 2 பேர் பலி! தோண்டியெடுக்கப்படும் குழந்தை உடல்

நீரிழிவு இருந்தால் கருத்தரிக்க முடியாதா? ஐவிஎஃப் சிகிச்சை செய்ய முடியாதா??
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

