மகாகவி பாரதியாரின் 142-ஆவது பிறந்தநாளையொட்டி, எட்டயபுரத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு 'தினமணி' சார்பில் கடந்த 11-ஆம் தேதி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
பாரதியார் பிறந்த இல்லத்தில் காலை முதலே பாரதி அன்பர்கள் குவியத் தொடங்கினர். பின்னர், பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு 'தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தென்காசியைச் சேர்ந்த மருத்துவர் தங்கபாண்டியன், எலுமிச்சை மாலையை கொண்டுவந்து, பாரதி சிலைக்கு அணிவித்தார். அவர் தனது வீட்டில் உள்ள பூக்களைக் கொண்டுவந்து பாரதியார் சிலையின் பாதத்தில் வைத்தார். மேலும் தனது இசைக்கருவியால் பாடலை இசைத்து பாடினார்.
தொடர்ந்து, பாரதி அன்பர்கள், மாணவர் - மாணவிகள் பாரதியார் வேடமணிந்து, பாரதி பாடல்களைப் பாடியவாறு மணிமண்டபத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றடைந்தனர். அங்குள்ள சிலைக்கு 'தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன், பாரதி அன்பர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஊர்வலத்தில், எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் அனுஷியா தலைமையில் மாணவிகளும், தமிழ் பாப்திஸ்து தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் லால்பகதூர் கென்னடி தலைமையில் பாரதி வேடமணிந்த மாணவர்-மாணவிகளும் பங்கேற்றனர்.
ஜதி பல்லக்கில்...
கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் அதன் தலைவர் கவிஞர் பாரதம் தலைமையில் சுமார் 23 பேர் எட்டயபுரத்துக்கு வந்து, பாரதியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், பாரதியார் வேடமணிந்த சிறுவனை ஜதி பல்லக்கில் வைத்து ஊர்வலமாக பாரதி இல்லத்துக்கு அழைத்து வந்தனர். அந்தச் சிறுவனுக்கு தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பொன்னாடை அணிவித்து கெளரவித்து வரவேற்றார்.
கம்பம் பகுதியில் இருந்து ஜதி பல்லக்கில் ஊர்வலமாக வந்த காட்சி காண்போரை வியக்கச் செய்தது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும விளம்பரப் பிரிவு முதுநிலைத் துணைத் தலைவர் ஜெ.விக்னேஷ்குமார், எழுத்தாளர் சோ.தர்மன், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்க தேசியத் தலைவர் கோ.பெரியண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.