கிராமப்புற மாணவர்களை ஊக்குவித்து, பயிற்சியும் அளித்து விளையாட்டு வீரர்களாக உருவாக்கி வருகிறார் இருபத்து எட்டு வயதான இளைஞர் ஜீவன்பாபு.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட அயோத்தியாப்பட்டணத்தைச் சேர்ந்த தனியார் வாகன ஓட்டுநர் தீர்த்தகிரி- சுமதி தம்பதியின் மகன் இவர்.
யோத்தியாப்பட்டணம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு வரையும், சேலம் சிறுமலர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பும், சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டமும், செல்வம் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியர் பட்டமும் பெற்றார்.
படிக்கும்போதே ஓட்டம், மும்முறை தாண்டுதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகளில் பங்கேற்று, தேசிய அளவில் சாதனைகளைப் புரிந்துள்ளார்.
அவரிடம் பேசியபோது:
'எனக்கு சிறுவயதிலிருந்தே தடகள விளையாட்டுகள் மீதான ஆர்வம் அதிகம். இதனால், போதிய பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று, பரிசுகள் பதக்கங்களும் பெற்றுள்ளேன்.
சென்னையில் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றினேன். அப்போது எனக்கு சொந்த கிராமத்தைச் சேர்ந்த மாணவ - மாணவிகளையும், இளைஞர்களையும் ஊக்குவித்து தேசிய அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதனால் பணியைத் துறந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த ஊர் திரும்பினேன்.
'தோழா அகாதெமி' என்ற பயிற்சி மையத்தைத் தொடங்கினேன்.
தினம்தோறும் காலை, மாலை வேளைகளில் ஓட்டம், மும்முறை தாண்டுதல், நீளம்- உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு, தட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகள விளையாட்டுப் போட்டிகளுக்கும் குறைந்த கட்டணத்தில் முறையாகப் பயிற்சி அளித்து வருகிறேன்.
உள்ளூர் முதல் தேசிய அளவிலான போட்டிகளுக்கு என்னிடம் பயிற்சி பெறுவோரை அழைத்துச் சென்று பங்கேற்க செய்து, பரிசுகளையும் பதக்கங்களையும் பெறச் செய்து வருகிறேன்.
வாழப்பாடியில் அண்மையில் நடைபெற்ற சேலம் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் என்னிடம் பயிற்சி பெற்ற 23 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர்' என்றார்.