கண்ணுக்கு தட்டுப்படாத கரிசனம்!

ஒவ்வோர் அரசுத் துறைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. கல்வித் துறையின் நோக்கம் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி வழங்குவது; சுகாதாரத் துறையின் நோக்கம், தரமான மருத்துவ வசதிகளை அனைவருக்கும் வழங்குவது
கண்ணுக்கு தட்டுப்படாத கரிசனம்!

"ஒவ்வோர் அரசுத் துறைக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. கல்வித் துறையின் நோக்கம் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி வழங்குவது; சுகாதாரத் துறையின் நோக்கம், தரமான மருத்துவ வசதிகளை அனைவருக்கும் வழங்குவது; வனத் துறையின் நோக்கம் வனங்களைப் பாதுகாப்பது. இப்படி டாஸ்மாக் என்ற அரசுத் துறையின் நோக்கம் என்ன... ? தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குடிகாரரை உருவாக்குவதா?   நான் ஒருவன் குடிப்பதால் என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்து விடும் என்பதெல்லாம் ஓவர் என்பது பல குடிகாரர்களின் எண்ணம். தன் போதையும் குடியும் எப்போதும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே இவர்கள் கருதிக் கொள்கிறார்கள். ஆனால் போதை, இவர்களை மயக்கி, வீழ்த்தி சாத்தானின் சாலைக்கு இழுத்து வந்து விடுகிறது. அதன் பின் அந்த குடும்பம் என்ன ஆகிறது...?'' கேள்விகளால் நிறைத்து கொண்டே இருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரகாஷ். என். நாளைய இயக்குநர் சீசனின் முத்திரை பதித்தவர். இப்போது குடிமகான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். 

குடி குடியை கெடுக்கும்... இதுதான் கதையின் உள்ளடக்கமா...

மதி, பவி  இவர்களின் எளிய வாழ்க்கைதான் படம். வாழ்க்கையை உற்சாகமாக, ரசனையாக பார்க்கிறவன் மதி. ஒவ்வொரு நிமிஷத்தையும் நம்பிக்கையோடு கடக்கிற மனுஷி பவி. இவர்களின் அன்பு மகன் சந்தோஷ், அருமை மகள் திவ்யா. இயலாமை என இருந்தாலும் அன்பு மட்டுமே இவர்களின் பிரதானம். அழகு, பணம் என நம்முடைய அத்தனை அபத்தங்களையும் அடித்து நொறுக்கி அன்பையும், அக்கறையையும் முன் வைக்கிற காதல். அவ்வளவு அற்புதமாக, அழகாக வாழ்கிற வாழ்க்கை ஒரு கட்டத்தில் சின்னபின்னமாகிறது. குடிப் பழக்கமே இல்லாத மதி, ஒரு கட்டத்தில் குடியின் கோரப் பிடிக்கு போகிறான்.  அவன் வாழ்வு, குடும்பம் எல்லாமே குடி என்ற அரக்கனால் சபிக்கப்படுகிறது.  ஒரு பெரும் சோகக் காவியத்தின் உணர்ச்சியும் உயிர்த்துடிப்பும் மிக்க அந்தக் கணங்களை எண்ணிப்பார்க்கவே மனம் நடுங்குகிறது.

எப்படி இருக்கும் படத்தின் திரை பாணி வடிவம்....

இந்தப் படத்துக்காக ஒரு காட்சி, ஒரு வசனத்தைக்கூட எங்கேயோ யாருடனோ விவாதிக்கவில்லை. . எல்லாமே எங்கேயோ நடந்த சம்பவம், யாரோ பேசின வார்த்தைகள், நம் உள்ளங்கை உணர்ந்த  கண்ணீர், கண் கூடாக பார்த்த அம்சங்கள்...இது உண்மைக்கு நெருக்கமெல்லாம் இல்லை... இது உண்மையேதான். "ஒரு சினிமா, இரண்டரை மணி நேரம்தான். ஆனா, ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் 24 மணி நேரம். வாழ்க்கைதான் நாம யோசிக்கவே முடியாத சினிமா' என்பது டிஸிகாவின் கோட். இது எவ்வளவு உண்மை. நாம் அனுதினமும் கவனிக்காமல் கடந்து போகிற ஒவ்வோர் எளிய மனிதனின் வாழ்க்கைதான் இது. கண்ணுக்குத் தட்டுப்படாத பிரியங்களின், கரிசனங்களின் குவியல்தான் இந்தக் குடிமகான். எங்கோ கோடி பேரில் ஒருவனுக்கு நடக்கிற கதை இல்லை. இது எல்லோருக்குமானது. உங்களை விட, என்னை விட எல்லோரும் சந்திக்கப் போகிற பிரச்னை. இந்தக் கோரத்தின் பிடியில் யாரும் சிக்கிக் கொள்ளலாம்... அதற்கான விழிப்புணர்வு இது. அதை கமர்ஷியல் சட்டகத்துக்கு உட்பட்டு நெய்திருக்கிறேன். 

விமர்சிக்கிற விதமாக்கத்தான் இந்த மாதிரியான கதைகளை சொல்ல முடியும்.... 

இன்றைக்கு, "வீட்டுக்கு இரண்டு குடிகாரர் லட்சியம்; ஒருவர் நிச்சயம்' எனக் கோட்பாடு வகுக்கப்பட்டுள்ளது. 

அதனால்தான் மிகக் கடுமையாக மக்கள் எதிர்ப்பு  தெரிவிக்கும் ஊர்களில் கூட விடாப்பிடியாக மதுக்கடைகளை நடத்திக் கொண்டிருக்கிறோம். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகில் இருக்கிறது செல்லம்பட்டி  என்ற கிராமம். புது ஆற்றுத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவர... எங்கும் குளுமையும் பசுமையும் நிறைந்திருக்கின்றன. 

சுற்றியுள்ள விவசாயக் கிராமங்களுக்கு இந்த ஊர்தான் ஒன்று கூடும் இடம். மாலை நேரமாகிவிட்டால் ஆற்றுப் பாலம் எங்கும் கூட்டம் மொய்க்கும். செல்லம்பட்டியில் மொத்தம் மூன்று டாஸ்மாக் கடைகள். முழுக்க முழுக்க விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் நிறைந்த பகுதி என்பதால், மூன்று கடைகளிலும் கூட்டம் கும்மும். ஆற்றில் தண்ணீர் வந்தாலும் வராவிட்டாலும் டாஸ்மாக் தண்ணீருக்கு மட்டும் எந்தத் தடையும் இல்லை. 

ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்றால், குடிகாரர்களுக்கு அதுதான் திறந்தவெளி பார். ஆற்று மணலில் அமர்ந்து ஏகாந்தமாகக் குடிப்பார்கள். இப்படியான நிலைக்கு யார் காரணம். இது சொல்லாமல் சினிமா ஒதுங்குவது சரியாக இருக்குமா.... 

நடிகர்களின் பங்களிப்பு எப்படி கை வந்து சேர்ந்திருக்கிறது...

என் நண்பன் விஜய் சிவன். நாளைய இயக்குநர் சீசனில் இருந்தே நெருக்கம். எங்களுக்கு எப்போதும் சினிமாதான். அவர்தான் இங்கே ஹீரோ. சுத்த டீ டோட்லர் ஒருவன், போதையின் பாதைக்கு போகிறான். இந்த லைனில் அவன் வாழ்ந்திருக்கிறார். பிக் பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தி, சாந்தினி தமிழரசன், நாமோ நாராயணன் இப்படி பக்க பலத்துக்கு நடிகர்கள். அன்பின் பிரிவில் தவித்து, குடியின் கோரத்தில் சிக்கி கொண்டு திணறும் இடங்களில் அவ்வளவு அற்புதமாக பொருந்தியிருக்கிறார் விஜய் சிவன்.  வனங்களை, மிருகங்களை கடந்த பயணம் இருக்கிறது அவருக்கு. கணவன், மகன் இரண்டுக்குமான அன்பின் நெகிழ்வில் கரைந்தோடியிருக்கிறார் சாந்தினி. அத்தனை நேர்த்தியான நடிப்பு.  மெய்ந்திரேன், தனுஜ் மேனன், சிபு நீல் இப்படி தாகம் உள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்துக்கு இன்னும் பலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com