பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மாணவர்களை சிந்திக்க விடுங்கள்!

பிளஸ்-2 தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பிளஸ்-2 தேர்வை எழுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தேர்வு முடிவுகளுக்காக இப்பொழுதே காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

News image
Updated On :21 மார்ச் 2016, 3:08 pm

வி.குமாரமுருகன்

பிளஸ்-2 தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பிளஸ்-2 தேர்வை எழுதியுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் தேர்வு முடிவுகளுக்காக இப்பொழுதே காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

தேர்வு எழுதிய மாணவர்களைக் காட்டிலும் அவர்களுடைய பெற்றோர்கள்தான் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். பெற்றோர்கள் மட்டுமல்ல, பக்கத்து வீடு,எதிர்வீடு, நண்பர்கள் என ஆளாளுக்கு மேல்கல்வி குறித்து இலவசமாக ஆலோசனைகளையும் வாரி வழங்கி மாணவர்களை விழி பிதுங்கச் செய்து வருகின்றனர்.

தேர்வு முடிவுகள் வருவதற்குக் கூட காத்திருக்க விரும்பாத சிலர் உயர்தர கல்லூரிகளில் அட்வான்ஸ் கொடுத்து இடத்தையும் ரிசர்வ் செய்துள்ளனர். பொதுவாகவே, மேல்படிப்புக்கு மட்டுமல்ல, பிள்ளைகள் எல்.கே.ஜி. சேர்ந்ததில் இருந்தே படிப்பு குறித்த ஆலோசனைகள் எல்லாரும் கூறுவது என்பது வழக்கமான நடைமுறையாகிவிட்டது.

பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும்போதே பொறியாளர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற தனது ஆசையை தங்களின் மகன் அல்லது மகளின் தோளில் ஏற்றி சுமக்கச் சொல்வதே பெற்றோர் பலரின் செயலாக இருக்கிறது.

பிள்ளைகள் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே, பக்கத்து வீட்டில் நன்றாகப் படித்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்த மாணவனைக் காட்டி, ""அவனைப்போல் படிக்க வேண்டும். அப்போதுதான் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும்'' என்று கூறுவதுதான் பல குடும்பங்களில் வழக்கமாக உள்ளது. இது பிள்ளைகள் ஆழ் மனதில் பதிவாகி, எப்படியாவது பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தையும் உருவாக்கிவிடுகிறது.

இப்படிப்பட்ட நிலையில், பொறியியல், மருத்துவம் போன்றவை தவிர்த்த மற்ற படிப்புகள் குறித்து, மாணவர்கள் மத்தியில் ஒரு தெளிவான பார்வை இல்லாமலேயே போய்விடுகிறது. எத்தனையோ படிப்புகள், அதுவும் படித்தவுடனே வேலைவாய்ப்பு வழங்கும் படிப்புகள், பல்வேறு பல்கலைக்கழகங்கள் நடத்தும் பட்டய படிப்புகள் என எண்ணற்ற படிப்புகள் இன்றைய கல்விச் சந்தையில் குவிந்து கிடந்தாலும். அந்தப் படிப்புகளுக்கு பொறியியல், மருத்துவம் போன்று கிராக்கி இருப்பதில்லை.

தங்களுக்குத் தெரிந்தவரின் மகன் அல்லது மகள் பொறியியல் படித்து இன்று கைநிறையச் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற பிரமிப்புதான் பெற்றோர்கள் மத்தியில் நிலவுகிறதே தவிர, எண்ணிக்கையில் அடங்காத பொறியியல் படித்த மாணவர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளில் மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்வதைக் கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.

பெற்றோர்கள், அவர்களுடைய பிள்ளைகளின் மனதில் சிறுவயதில் விதைத்த பொறியியல் என்ற செடி அந்த மாணவன், பிளஸ்-2 முடித்த சமயத்தில் நல்ல மரமாக வளர்ந்துவிடுவதால், அந்த மாணவனும் எப்படியாவது பொறியியல் கல்லூரியில் சேர்ந்து விட வேண்டும் என்று துடிப்பதும் அதிகரித்து வருகிறது.

இப்படி குடும்பமும், சொந்தமும், அக்கம்பக்கமும் ஒவ்வொரு மாணவனையும் பொறியியல் படிப்புக்காக தயார்படுத்தி இருக்கின்ற நிலையில், பிளஸ்-2 தேர்வில் சரியான மதிப்பெண் எடுக்க முடியாத நிலையில், குறைவான கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற நிலையிலும்கூட வேறு வழியின்றி ஏதாவது ஒரு கல்லூரியில் அவர்கள் கேட்கும் கட்டணத்தைச் செலுத்தி படிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அங்கு அவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்குமா என்பதைக்கூட யோசிப்பதில்லை.

தனது பிள்ளை என்ஜினீயரிங் படிக்கப் போகிறான் என்பது மட்டுமே அவர்களுக்குப் பெருமைக்குரிய விஷயம். இது ஒரு சமூக அந்தஸ்தாகிவிட்டது என்றே சொல்லலாம். இப்படி குறைவான மதிப்பெண்கள் பெற்று ஏதோ ஒரு கல்லூரியில் பொறியியல் படிப்பதைவிட தனது பிள்ளைகளின் திறனுக்கு ஏற்ப வேலைவாய்ப்புக்குரிய கல்வியை அவர்கள் கற்க வேண்டும் என்று பெற்றோர்களும் விரும்புவதில்லை. மாணவர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கிடையே விரும்பிய கல்லூரியில் படிக்க வாய்ப்பில்லாத சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் கூட நடந்து வருவதை பார்க்க முடிகிறது.

குறைந்த மதிப்பெண் பெற்ற நிலையில், பணத்தைச் செலவழித்துப் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களால், பொறியியல் கல்லூரிகளிலும் தனது திறனை வெளிப்படுத்த இயலாமல் போகிறது. இதனால் பல மாணவர்கள் தங்கள் கல்வியை தொலைத்த சம்பவங்களும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கின்றன.

இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துள்ள விவரங்கள் ஏராளம். உலகியல் நடப்புகளை உள்ளங்கையில் வைத்திருக்கும் திறன் பெற்றவர்கள் அவர்கள். எனவே, மாணவர்களுக்கு வழிகாட்டுவதில் தவறில்லை. ஆனால் நமது (பெற்றோர்,மற்றவர்) எண்ணங்களை மாணவர்களின் மனதில் வலியத் திணிப்பதுதான் பிரச்னையாகி விடுகிறது. இதனால் சிந்திக்கும் ஆற்றலை மாணவர்கள் இழந்து வருகின்றனர் என்பது கண்கூடு.

மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்ட தொலைக்காட்சிகள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. நாளிதழ்களும் கல்லூரிகளின் புதிய பாடப்பிரிவுகளைத் தொகுத்து வழங்கி வருகின்றன. எத்தனையோ கல்வித்துறை வல்லுநர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதை மாணவர்கள் கவனித்தாலே எதிர்கால வாழ்க்கை வசப்படும். எனவே, பெற்றோர்களே பிள்ளைகளைச் சிந்திக்க விடுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.