

சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஒரு விண்கலத்தை (இஎஸ்ஏ) அனுப்பியுள்ளது. இதன் "ஆர்பிட்டர்', சூரியனை மிக நெருங்கி ஆய்வில் ஈடுபடத் தயாராகியுள்ளது.
வரும் மார்ச் 26-ஆம் தேதி இதுவரை இல்லாத அளவில் சூரியனை இந்த சோலார் ஆர்பிட்டர் நெருக்கமாகக் கடந்து செல்லும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக இஎஸ்ஏ தெரிவித்துள்ளது.
அப்படி மார்ச் 26-ஆம் தேதி என்னதான் நடைபெறும்? சூரியனை நெருங்கும் நிகழ்வின்போது, சூரியனிலிருந்து பூமிக்கு உள்ள தொலைவில் மூன்றில் ஒரு பங்கு தொலைவில் சோலார் ஆர்பிட்டர் கடந்து செல்லும்.
இப்போது ஆர்பிட்டர் சூரியனிலிருந்து 75 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது. இதே தொலைவை 2020, ஜூன் 15-ஆம் தேதியும் ஆர்பிட்டர் கடந்திருந்தது.
சூரியனை ஆர்பிட்டர் நெருங்கியதும், அது தனது அனைத்து உபகரணங்களையும்
பயன்படுத்தி தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கும். அதன் ரிமோட் சென்சிங் கருவிகளும் இந்த நிகழ்வை ஆய்வு செய்யத் தயாராக உள்ளன. எந்த ஒரு பெரிய நிகழ்வும் நடைபெறவில்லை எனினும், சூரிய காற்றின் பரிணாம வளர்ச்சி குறித்து நிறைய ஆய்வு செய்ய முடியும் என இஎஸ்ஏ தெரிவித்துள்ளது.
இஎஸ்ஏவின் சோலார் ஆர்பிட்டர் இப்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே பாதி வழியில் உள்ளது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் ஹினோட், ஐஆர்ஐஎஸ் போன்ற விண்கலங்கள் மூலம், சோலார் ஆர்பிட்டரின் தரவுகளைத் தொகுக்க விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
இஎஸ்ஏ சோலார் ஆர்பிட்டரின் முன்னோடியாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் 2018-ஆம் ஆண்டு அனுப்பப்பட்டுள்ள "பார்க்கர்' சோலார் விண்கலம் திகழ்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்ததன் மூலம், "வரலாற்றில் முதல் முறையாக ஒரு விண்கலம் சூரியனைத் தொட்டுள்ளது' என நாசா அறிவித்தது.
கடந்த பிப்ரவரியில் 11-ஆவது முறை சூரியனை நீள்வட்டப் பாதையில் வலம் வந்த பார்க்கர், தனது 7 ஆண்டு திட்டத்தில் சூரியனை 24 முறை வலம் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.