சாதனைப் பெண்கள் நூறு பேர்
பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்து வரும் நூறு பெண்களைத் தேர்தெடுத்து, அவர்களைப் பாராட்டும் விதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் இருவர் இங்கே...


பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்து வரும் நூறு பெண்களைத் தேர்தெடுத்து, அவர்களைப் பாராட்டும் விதத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் இருவர் இங்கே...

டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ்
பணியில் இருந்து தற்காலிக ஓய்வு எடுக்கும் பெண்கள் மீண்டும் தங்கள் நிறுவனங்களில் பணியைத் தொடரவும், தொழில் வர்த்தகத்துறையில் நுழையவும் உதவி, உழைத்து வருபவர் டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ்.
அவர் கூறுகையில்:
"இந்தியாவை பொறுத்தவரை பணியில் இருக்கும் பெண்கள் 23.5 % தான். அதில் அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் 30 வயதுக்குட்பட்ட 48 % பெண்கள் திருமணத்திற்காகத் தங்கள் பணியைவிட்டுவிட்டு மீண்டும் பணியைத் தொடர வாய்ப்பு இல்லாத சூழலில் இருப்பதுதான். இது நமது நாட்டிற்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும் விஷயமாகும். குறைந்தபட்சம் 40% பெண்களாவது வேலை பார்ப்பவர்களாக இருந்தால் நமது நாடு விரைவில் வல்லரசு நாடாக மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது என்பதை ஓர் ஆய்வின் மூலம் கண்டுபிடித்திருக்கிறோம். திருமணம், பிரசவம், இடமாற்றம் அல்லது பிற காரணங்களுக்காக தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையில் தற்காலிக ஓய்வு அல்லது விடுமுறையில் செல்லும் பெண்களை பெரும்பாலான நிறுவனங்கள் மீண்டும் பணியில் சேர்ப்பதில்லை.
இந்த நிலையை எனது சொந்த வாழ்க்கையிலும் சந்தித்தேன். அதன்பிறகு வேறு நிறுவனங்களுக்குச் சென்று பார்ட் டைம் வேலை அல்லது ஃபிளக்சி டைம் வேலை பார்ப்பதற்காக கேட்டேன். குடும்பச்சுமை காரணமாக முன்புபோல் உற்சாகமாக பணி செய்ய முடியாது என்று நினைக்கின்றனர். யாருக்கும் நம்பிக்கை இல்லை. அதைப்பற்றி மற்றவரிடம் பேசும்போதுதான் என்னைப் போன்று பலபேர் பாதிக்கப்பட்டதை அறிந்தேன். அவர்களும் என்னைப் போல் பகுதி நேர வேலையை பெரிதும் விரும்பினார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 2000- ஆம் ஆண்டில் "அவதார் ஐ-வின்' மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். அவ்வப்போது பலவிதமான ஆய்வுகளை மேற்கொண்டேன். அதில் அதிக அளவில் பெண்கள் வேலை செய்த நிறுவனங்களின் ஆண்டு வருமானம் கணிசமாக உயர்ந்திருப்பதை கண்டறிந்தோம். இந்த ஆய்வின் அடிப்படையில் பல நிறுவனங்களை அணுகி அவர்களிடம் பெண்களை பணியில் அமர்த்துவது குறித்து பேசி புரிய வைத்தேன். இதன் மூலம் கிட்டதட்ட 8,000 பெண்களுக்கு மீண்டும் வேலை கிடைத்தது. இதன் மூலம் நமது இந்திய நாட்டின் கஜானாவிற்கு 300 கோடி ரூபாய் வரை போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்துள்ளோம்.
இதன் அடிப்படையில் தான் எனக்கு "உமன் எம்பவர்மெண்ட் விருது' கொடுத்திருக்கிறார்கள்.
இன்று 100 பெண்களில் நானும் ஒருவராக நின்றது ரொம்பவே மகிழ்ச்சியான தருணம். ஜனாதிபதி மாளிகையில் இதுவரை ஜனாதிபதியாக இருந்த அனைவரின் படங்களும் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு கீழாக எங்களை நிறுத்தியிருந்தார்கள். அதில் நான் நமது அப்துல்கலாம் ஐயாவின் படத்திற்கு கீழ் நின்றிருந்தேன். அது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது.
எல்லாவற்றையும் விட பல போராட்டங்களை கடந்து பல துறைகளில் இருந்து வெற்றி வாகை சூடியிருக்கும் மற்ற 99 பெண்களை சந்தித்தது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
தற்போது நாங்கள் 100 பெண்களும் ஃபேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற இணையங்களின் மூலம் ஒருவரை பற்றி ஒருவர் அறிந்து கொண்டு தோழிகளாகி இருக்கிறோம். அதில் ஒரு அதிசயம் என்னவென்றால் ஒவ்வொருவரின் கதையும் ஒவ்வொரு விதமாக இருந்ததுதான். பெண்கள் மனது வைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற உறுதி எங்களுக்குள் அதிகமாகி இருக்கிறது'' என்றார்.
•••

சமூக சேவகி லதா சுந்தரம்
கடந்த 4 1/2 ஆண்டுகளில் கிட்டதட்ட 99,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தற்காப்பு பயிற்சியும், கவுன்சிலிங்கும் வழங்கியிருக்கிறார் லதாசுந்தரம். அதன் அடிப்படையில் இவரை தேர்ந்தெடுத்து பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் பாதுகாப்பு விருது வழங்கப்பட்டிருக்கிறது. அவர் கூறியது:
""சாதாரண குடும்பத்தில் பிறந்தவள் நான். ரயில்வேயில் அக்கவுண்ட்ஸ் அசிஸ்டென்டாக வேலை பார்க்கிறேன். ஆசிரியர்களான எனது அம்மாவும், அப்பாவும் நல்ல பழக்கவழக்கங்களை சொல்லி சொல்லி வளர்த்தாங்க. இதனால் சிறுவயதில் இருந்தே சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.
இந்த சமூகத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்பட்டால் நிச்சயம் எல்லாமே சரியாக நடக்கும் என்பது என் எண்ணம். இதனால் வேலைக்கு போக ஆரம்பித்ததும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில், நான் செய்கிற விஷயங்களை முறையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதன்பிறகு என் சகோதரர் மற்றும் நான்கு நண்பர்களின் உதவியுடன் "அறம் ஃபவுண்டேஷன்' தொடங்கினேன்.
கடந்த 4 1/2 ஆண்டுகளாக இந்த அமைப்பின் மூலம் பல டீம்களாக பிரிந்து கிட்டதட்ட 13 வகையான புரொஜக்ட்டுகள் செய்து வருகிறோம்.
எங்களின் முக்கியப் பணி பள்ளி குழந்தைகளுக்கு முக்கியமாக பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு கராத்தே, குங்ஃபூ, களறி போன்ற தற்காப்பு பயிற்சியும் வளர் இளம் குழந்தைகளுக்கு (நஹச்ங் ற்ர்ன்ஸ்ரீட்) தொடு உணர்ச்சி, பருவ மாற்றங்கள், நல்ல பழக்கவழக்கங்கள், தாழ்வு மனப்பான்மை, டிராபிக் ரூல்ஸ் போன்றவை குறித்து ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான வாழ்க்கை வாழ உரிமை இருக்கிறது என்பதை எடுத்து சொல்லி புரிய வைக்கிறோம். அதுபோன்று நல்ல சூழ்நிலையில் சந்தோஷமாக வாழுகிற குழந்தைகளாலதான் நாளை நல்ல குடிமக்களாக வளர முடியும் என்பதையும் எடுத்து சொல்கிறோம். குழந்தைகள் நலம் சார்ந்த விஷயங்கள் போன்றவற்றை குறித்தும் கவுன்சிலிங் கொடுத்து வருகிறோம்.
மேலும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அவர்களது பொறுப்பை உணர்த்துகிறோம். இதுபோன்று இதுவரை 99 ஆயிரம் பெண்கள், குழந்தைகளுக்கு மேல் கவுன்சிலிங் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம். ஆண்டு முழுக்க அதாவது 365 நாள்களும் விடுப்பு என்பதே இல்லாமல் உழைத்து வருகிறோம்.
இப்படி ஒரு விருது இருப்பதே எனக்கு இதுவரை தெரியாது. என் மகள் மதுமிதாதான் இதைப்பற்றி கேள்விப்பட்டு என் பெயரை நாமினேட் செய்தாள். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தியா முழுக்க உள்ள பெண்களில் நான் தேர்வாவது என்பதை நினைத்துக் கூட பார்க்கவில்லை. என்னை தேர்வு செய்திருப்பதாக 1 மாதத்திற்கு முன்பு தகவல் வந்தபோது கூட நான் நம்பவும் இல்லை, என் வீட்டில் கூட யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.
விருதுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அமைச்சகத்தில் இருந்து எழுத்து மூலம் கடிதம் வந்தபின்தான் எல்லாருக்கும் சொன்னேன். என் அம்மா,மாமியார்,கணவர் அனைவருக்கும் மிகவும் சந்தோஷம், பெருமை. இதை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். எங்கள் அமைப்பை ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்ததால், அதன் மூலம்தான் எனக்கு ஓட்டுகள் அதிகம் கிடைத்தன.
விருதுக்கு சென்றிருந்தபோது ஜனாதிபதியும், மேனகா மேடமும் எங்களுடன் பழகியதையும், எங்களுக்கு நம்பிக்கையுட்டும் வகையில் பேசியதையும் மறக்கவே முடியாது. ஜனாதிபதிக்கு மிக அருகில் அமர்ந்து உணவு அருந்தியதையும் மறக்க முடியாது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...