மசாலா பொடி வகைகள்!

மசாலா பொடி வகைகள் செய்முறை உங்களுக்காக
Updated on
4 min read

பருப்புப்பொடி

தேவையானவை: துவரம்பருப்பு - 2 கப், கடலைப்பருப்பு - ஒரு கிண்ணம், காய்ந்த மிளகாய்  - 6, மிளகு - ஒரு

தேக்கரண்டி, பெருங்காயத்தூள் -

சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அடுத்து கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து,

மிக்ஸியில் அரைக்கவும்.

குறிப்பு: சூடான சாதத்தில் பருப்புப் பொடியைப் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து

சாப்பிட சுவையாக இருக்கும்.

•••

பூண்டுப்பொடி

தேவையானவை: பூண்டு - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 10, உளுத்தம்பருப்பு - ஒரு கப், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறு மொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும். பூண்டுடன் மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு: பூண்டு, வாயுத் தொல்லையை நீக்கும். இதய நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.

•••

இட்லி மிளகாய்ப்பொடி

தேவையானவை: காய்ந்த

மிளகாய் - 100 கிராம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு  தலா - ஒரு கிண்ணம், எள் - 50 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 2

தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, எள்ளையும் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். முதலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை மிக்ஸியில் ரவை பதத்துக்கு அரைத்து, அதனுடன் வறுத்த எள், காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.

•••

மிளகு சீரகப்பொடி

தேவையானவை: மிளகு, சீரகம்  தலா - 100 கிராம், பெருங்காயத்தூள் - சிறிதளவு.

  செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடித்து, இதனுடன் பெருங்காயத்

தூளை சேர்க்கவும். இதை சாதத்துடன் கலக்கும்போது தேவையான உப்பு சேர்த்து கலந்து உண்ணவும்.

குறிப்பு: இந்தப் பொடியை ரசம் தயாரிக்கும்போதும் பயன்படுத்தலாம்.

••••

ரசப்பொடி

தேவையானவை:  துவரம்பருப்பு, மிளகு, சீரகம் தலா - 50 கிராம், தனியா - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 10.

செய்முறை: வாணலியில்  எண்ணெய் விடாமல் அனைத்து பொருட்களையும்  தனித்தனியாக வறுத்து, ஒன்று சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.

•••

கறிவேப்பிலை பொடி

தேவையானவை: கறிவேப்பிலை - 4 கைப்பிடி, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் கறிவேப்பிலையை எண்ணெய் விடாமல் மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும். உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயையும் தனியாக வறுக்கவும். இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும்.

குறிப்பு: கறிவேப்பிலை கண்ணுக்கு நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் மிகவும் உதவும்.

நாரத்தை இலை பொடி

( வேப்பிலைக்கட்டி)

தேவையானவை: நாரத்தை இலை - 2 கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நாரத்தை இலைகளின் நடுவில் உள்ள காம்பினை ஆய்ந்து எடுத்துவிட்டு வாணலியில் மிதமான தீயில்  எண்ணெய் விடாமல் இலைகளை லேசாக வறுக்கவும். பிறகு காய்ந்த மிளகாயை வறுக்கவும். அதனுடன்  உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு: இது, தயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.  ஜீரண சக்திக்கு மிகவும் நல்லது.           

••••

புளியோதரைப் பொடி

தேவையானவை: புளி - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 10, வேர்க்கடலை - ஒரு கிண்ணம், கடலைப்பருப்பு - 25 கிராம், வெந்தயம் - 2 தேக்கரண்டி, தனியா - 4 தேக்கரண்டி, மஞ்சள் - ஒன்று (உடைத்துக் கொள்ளவும்), கட்டிப் பெருங்காயம் - ஒரு சிறிய துண்டு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளியை  வாணலியில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மொறுமொறுப்பாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, வெந்தயம், தனியா, மஞ்சள், பெருங்காயம், வேர்க்கடலை ஆகியவற்றை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இவற்றுடன் உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.

குறிப்பு:வாணலியில் தேவையான போது இந்தப் புளியோதரைப் பொடியைச் சூடான சாதத்தில் தேவையான அளவு சேர்த்து, நல்லெண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து கலந்தால் உடனடி புளிசாதம் ரெடி.

•••

சாம்பார்பொடி

தேவையானவை: காய்ந்த

மிளகாய் - 50 கிராம், தனியா - 100 கிராம், துவரம்பருப்பு  50 கிராம்,

கடலைப் பருப்பு - 50 கிராம்,

வெந்தயம், மிளகு  தலா - 10 கிராம்,

மஞ்சள்  - 1.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், மஞ்சள் ஆகியவற்றை மீதமான தீயில் தனித்தனியாக வறுத்து அரைக்கவும்.

••8

வேப்பம் பூ பொடி

தேவையானவை: வேப்பம் பூ - ஒரு கைப்பிடி, காய்ந்த மிளகாய் - 5, உளுத்தம்பருப்பு - 50 கிராம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் வேப்பம் பூ, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை தனித்தனியாக வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: வேப்பம்பூ, பித்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com