நான்கு ஆண்டுகளில் 25 பதக்கங்கள்!
கோயம்புத்தூரை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் பூஜா (19) 2014- ஆம் ஆண்டு முதல் இதுவரை மாநில அளவில் நடந்த குறிபார்த்து துப்பாக்கியால் சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு 25 பதக்கங்களைப்


கோயம்புத்தூரை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்கும் பூஜா (19) 2014- ஆம் ஆண்டு முதல் இதுவரை மாநில அளவில் நடந்த குறிபார்த்து துப்பாக்கியால் சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு 25 பதக்கங்களைப் பெற்றுள்ளார். அண்மையில் மதுரையில் நடந்த 44-ஆவது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில், ஜூனியர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப்பதக்கமும், 25 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் பூஜா பெற்றுள்ளார்.
ஈசா காலேஜ் ஆப் என்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியில் பி.டெக் படித்துக் கொண்டிருக்கும் பூஜா, கடந்த நான்காண்டுகளாக துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். தற்போது இந்த துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஓராண்டிற்கு முன்புதான் தேசிய அளவில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவுக்கு பூஜா முன்னேறியுள்ளார். சர்வதேச ஷூட்டிங் ஸ்போர்ட்ஸ் பெடரேஷனை சேர்ந்தவர்களுடன்தான் போட்டியிட வேண்டும் என்பதால் இதில் தங்கம் வாங்கியதை பெருமையாக கருதுகிறார் பூஜா.
இவருக்கு துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்கும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது? அவரே சொல்கிறார்:
""என்னுடைய அம்மா சாந்தி, என்.சி.சி.யில் சேர்ந்திருந்தபோது, துப்பாக்கி சுடும் பயிற்சி பெற விரும்பினார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் எனக்கு எப்படியாவது துப்பாக்கி சுடும் பயிற்சியளிக்க விரும்பினார். ஆரம்பத்தில் எனக்கு ஈடுபாடு இல்லையென்றாலும், பின்னர் இந்த விளையாட்டை மிகவும் விரும்பத் தொடங்கினேன். கோயம்புத்தூர் ரைபிஃள் கிளப் பெரிதும் ஆதரவளித்தது. வீட்டில் பயிற்சிபெற 10 மீட்டர் தொலைவு இடைவெளி இருந்தாலும், கிளப்பில் பயிற்சி பெற்றேன். கிளப்பை புதுப்பித்த போது, பல அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. கிளப்பில் உள்ள 10 அடி தொலைவு இடைவெளி கூட இப்போது ஏர்கண்டிஷன் செய்யப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியில் எனக்கு ரோல் மாடல் யாரும் இல்லை. ஆனால் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஹீனா சித்து பங்கேற்று வெற்றி பெற்ற போட்டிகள் அனைத்தையும் பார்ப்பேன். அதில் அவர் துப்பாக்கி ஏந்தும் விதம், குறிபார்க்கும்போது கால்களை எப்படி வைப்பது போன்ற சில நுணுக்கமான விஷயங்களை கவனித்து அதன்படியே செய்வேன். 10 மீட்டர் தொலைவு ஏர்பிஸ்டல் போட்டிகளில் பங்கேற்பதைவிட, 25 மீட்டர் தொலைவு பிரிவில் பங்கேற்பதை மிகவும் விரும்புவேன். அதற்கான பயிற்சியும் பெற்றுள்ளேன்.
கடந்த ஆண்டு தேசிய அளவில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் போட்டிகளில் பங்கேற்ற நான், தற்போது சென்னையில் ஆக.30 முதல் செப்.14-ஆம் தேதி வரை தேசிய அளவில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்கவுள்ளேன். அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்'' என்று கூறும் பூஜா, வருங்காலத்தில் பொது சேவை துறையில் பணியாற்ற விரும்புகிறார்.
பூஜாவின் சாதனையை பற்றி அவரது தாய் சாந்தி கூறுகையில், ""பெற்றோர் தங்கள் குழந்தைகளை குறிப்பாக பெண்களை ஏதாவது ஒரு விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்துவது அவசியமாகும். அப்போதுதான் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிவு பிறக்கும். என்னைப் பொருத்தவரை நான் என்.சி.சி.யில் இருந்தபோது, எனக்கு கிடைக்காத வாய்ப்பை என் மகள் பூஜாவுக்கு ஏற்படுத்தி தர விரும்பினேன். எதிர்பாராதவிதமாக அவளுக்கும் விளையாட்டில் ஆர்வம் ஏற்படவே, அவள் படிக்கும் கல்லூரியும் அவள் பயிற்சிக்குச் செல்லும் போதும், போட்டிகளில் பங்கேற்கும் போதும் ஊக்கமளித்து வருகிறது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...