வெண்டைக்காயை நீளமாக நறுக்கி அத்துடன் சிறிது கடலைமாவு மற்றும் உப்பு கலந்து பொரித்து எடுத்தால் சுவையான வெண்டைக்காய் பக்கோடா ரெடி.
பலகாரங்களுக்கு பாகு காய்ச்சும்போது பதம் வந்ததும், ஒரு சிட்டிகை எலுமிச்சைச்சாறு சேர்த்தால் பாகு முறியாது.
கடுகை அரைத்து தூள் செய்து அதை வைத்து வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் வெள்ளிப் பாத்திரங்கள் மிகவும் பளிச்சென இருக்கும்.
சாப்பிட்ட பிறகு சிறிது வினிகரும், பேரபின் எண்ணெய்யும் கலந்து மேசையைத் துடைத்து விட்டால், மேசை பளபளப்பாக இருக்கும்.
பெருஞ்சீரகத்தை டீயில் சேர்த்து பருகினால் அதிக சுவை கிடைக்கும்.
- எல்.நஞ்சன், முக்கிமலை.
வேகவைத்த சேப்பங்கிழங்கில், சிறிது தயிர், கடலை மாவு, அரிசிமாவு, உப்பு, காரம் கலந்து வதக்கினால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் தனித்தனியாக மொறுமொறுவென்று வறுபடும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி, வேக வைத்தால், 5நிமிடங்களில் வெந்து விடும்.
காலிபிளவர் அரை பதம் வெந்தவுடன், வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி, மஞ்சூரியன் பவுடரைப்போட்டு நன்கு வதக்கினால் அதன் சுவை அருமையாக இருக்கும்.
மஞ்சள் பூசணிக்காயை வேக வைத்து மசித்து தயிரில் கலந்து, துருவியத் தேங்காய், நறுக்கிய பச்சைமிளகாய், கொத்துமல்லித் தழை, உப்பு சேர்த்து கலந்தால் சுவையான பூசணிக்காய் ரெய்தா தயார்.
மஞ்சள் பூசணிக்காயுடன், 5,6 முந்திரியையும் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வேக வைத்து மசித்துக் கொண்டு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய், குங்குமப்பூ கலந்து கீர் தயாரித்தால் மிகவும் ருசியாக இருக்கும்.