கருப்புத் தழும்புகள் மறைய...

டீன் ஏஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொள்ளாமல் விட்டோமேயானால்
கருப்புத் தழும்புகள் மறைய...

டீன் ஏஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொள்ளாமல் விட்டோமேயானால், பல ஆண்டுகள் கழித்தும் பருக்களால் ஏற்பட்ட கருமையான தழும்புகள் முகத்தை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும். எனவே பருக்கள் வராமல் தடுக்கவும், வந்த பருக்களால் உண்டான கருப்புத் தழும்புகள் மறையவும் சில டிப்ஸ் இங்கே.
 சந்தன ஃபேஸ் பேக் :-
 சிறிது சந்தன பவுடர் மற்றும் பன்னீர் ஆகியவற்றை நன்றாகக் கலந்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரத்திற்கும் மேல் ஊற வைத்து, பின்னர் நல்ல சுத்தமான தண்ணீரால் முகத்தை நன்கு கழுவுங்கள். இதனால் பருக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.
 வெந்தயக்கீரை ஃபேஸ் பேக் :-
 சிறிது வெந்தயக்கீரை இலைகளை எடுத்துக் நன்றாக மை போன்று அரைத்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து நன்கு கழுவி விட வேண்டும் இப்படித் தொடர்ந்து செய்து வர விரைவில் பருக்களின் தழும்பு மறையும்.
 வெந்தய ஃபேஸ் பேக் :-
 சிறிது வெந்தயத்தை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிடவும். தண்ணீர் நன்கு ஆறியதும், அதனை முகத்தில் தழும்புள்ள இடங்கள் மீது தடவுங்கள். மேலும் முகத்தைக் கழுவ இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக கழுவிய பின்னர் துடைக்க வேண்டாம். அப்படியே காற்றில் உலரவிட வேண்டும்.
 ஆலிவ் எண்ணெய் :-
 ஆலிவ் எண்ணெய்யை பருக்களால் ஏற்பட்ட தழும்பு இருந்த பகுதிகளின் மீது தடவி மசாஜ் செய்து வர, தழும்புகள் விரைவில் மறையத் தொடங்கி நல்ல பலன் கிடைக்கும்.
 கற்றாழை ஜெல் :-
 கற்றாழை இலையைக் கீறி உள்ளே உள்ள ஜெல்லை தனியே எடுத்தால் சற்று நேரத்தில் அது சாறு போலாகிவிடும். இதனை முகத்தில் நாள்தோறும் தடவி வர, இவற்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.
 பன்னீர்/ரோஜா:-
 சிறிது பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள். பன்னீர் கிடைக்கவில்லையென்றால், ரோஜா இதழ்களை சிறிது எடுத்துக் கொண்டு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, குளிர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். பன்னீர் அல்லது ரோஜா தண்ணீரை முகத்தில் தடவிக் கொள்ளலாம்.
 உருளைக்கிழங்கு :-
 உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்து மிக்ஸியில் போட்டு மைபோல அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை முகத்தில் பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவுங்கள். நன்றாகக் காயும் வரை வைத்திருந்து பிறகு கழுவி விடுங்கள்.
 ஐஸ்கட்டி:-
 சிறிது ஐஸ் கட்டிகளை எடுத்து, அவற்றை முகத்தில் மென்மையாகத் தேயுங்கள். தழும்புள்ள இடங்களில் சற்று அதிகமாகத் தேயுங்கள். தினந்தோறும் தவறாமல் இதனை செய்யுங்கள். பின் அதன் பலன் தெரியும்.

முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் :-
 வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் குளிர்ந்த நீர் கொண்டு, முகத்தை நன்கு கழுவி வாருங்கள். இது முகத்தில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவதுடன், படிந்துள்ள பாக்டீரியாக்களையும் நீக்கும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் பருக்கள் வராமல் தடுக்கவும், பருக்களால் உண்டான கருப்புத் தழும்புகள் மறையவும் வாய்ப்புகள் கிடைக்கும்.
 - எல்.மோகனசுந்தரி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com