நிஜக்காதலர்கள் இணையும் தொடர்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆயிரம் எபிசோட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வரும் "பூ வே பூச்சுடவா' தொடர் மூலம் புகழ் பெற்றவர் ரேஷ்மா. இந்த தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரேஷ்மா, அதில் ஹீரோவாக நடிக்கும் மதனை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், ரேஷ்மா தற்போது, கலர்ஸ் தொலைக்காட்சியில் புதியதாக ஒளிபரப்பாகவுள்ள "அபி டெய்லர்ஸ்' என்ற தொடரில் நாயகியாக தையல்கலை நிபுணராக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக அவரது காதலர் மதன் நடிக்க இருக்கிறார். நிஜ காதலர்களே தொடரில் ஜோடியாக நடிக்க இருப்பதால் இத்தொடருக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மரக்கன்றுகளை நட்ட ரம்யா பாண்டியன்!
நடிகர் விவேக்கின் திடீர் மரணம் திரையுலகில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம் விவேக்கிற்கு மரியாதை செய்யும் வகையில் அவரது லட்சியமான 1 கோடி மரக்கன்று நடும் பணியை தற்போது திரையுலகினர் பலரும் முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியின் "பிக் பாஸ்', "குக் வித் கோமாளி' ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரம்யா பாண்டியன், நடிகர் விவேக்கின் மறைவையொட்டி அவர் நினைவாக போலீசாருடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார். விவேக்கின் வயதான 59 யை குறிக்கும் வகையில், திருவள்ளூர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் தலைமையில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டது. அவர்களுடன் ரம்யா பாண்டியன் இணைந்து மரக்கன்றுகளை நட்டார்.
ரசிகர்களின் வாழ்த்து!
"பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில், மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவுக்கு முன்பு மீனாவாக நடித்தவர் கவிதா கவுடா. இவர், "பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, கன்னட "பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததால், "பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரை விட்டு வெளியேறினார்.
கன்னட நடிகையான கவிதா கவுடா தமிழ் சின்னத்திரையில், "மகாபாரதம்', "நீலி' போன்ற தொடர்களிலும், கன்னடத்தில் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கவிதாவுக்கு, அவருடன் "லட்சுமி பிரம்மா' என்ற கன்னட தொடரில் நாயகனாக நடித்த சந்தன் குமார் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பான செய்தியும், புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வர, கவிதாவுக்கு ரசிகர்
களின் வாழ்த்து குவிந்து வருகிறதாம்.