தேங்காய்த் துவையலுக்கு தேவையானவற்றுடன் தாளித்தெடுக்கும்போது சிறிது தனியாவையும் சேர்த்து அரைத்தால் துவையல் மணமாக இருக்கும்.
காய்கறிகளுடன் ஒரு கை பச்சை வேர்க்கடலைப் பருப்பை அரைத்துச் சேர்த்து சாம்பார் செய்தால் சுவையான சத்தான சாம்பார் தயார்.
கோவைக்காயைக் கழுவி முழுசாக குக்கரில் போட்டு வேகவிடவும். ஆறிய பிறகு வில்லைகளாக்கி உப்பு, காரப் பொடி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். ருசியான எண்ணெய் அதிகம் குடிக்காத கோவைக்காய் ரோஸ்ட் ரெடி.
மிளகாய் பஜ்ஜி செய்யும்போது குறுக்குவாட்டில் நறுக்கப்பட்ட மிளகாயின் உட்புறத்தில் தக்காளி சாஸ் அல்லது கெட்டியாகக் கரைத்து வைக்கப்பட்ட புளிச்சாறு இவற்றைத் தடவி விட்டு பிறகு கடலைமாவில் தோய்த்துப் போட்டால் மிளகாய் பஜ்ஜியின் ருசியே அலாதிதான்.
பூரிக்கோ, சப்பாத்திக்கோ மாவு பிசையும்போது வெந்நீரை உபயோகிக்கவும். அந்த வெந்நீரில் ஒரே ஒரு சொட்டு சோடா உப்பைக் கலந்து மாவில் தெளித்துப் பிசைந்தால் பூரி பெரிதாகவும் நன்கு உப்பியும் இருக்கும்.
பொரித்த அப்பளம் நமத்துவிட்டால் கூட்டு செய்து இருக்கும்போது நமத்த அப்பளத்தை சிறு துண்டுகளாகப் பிய்த்துப் போட்டு கலந்து விடுங்கள், இந்த அப்பளக் கூட்டு சுவையாக இருக்கும்.
ஆப்பத்திற்கு மாவு கலக்கும்போது, இரண்டு மஞ்சள் வாழைப்பழத்தை மிக்சியில் கூழாக்கி சேர்த்துக் கொண்டு ஆப்பம் வார்த்தால் சுவை சூப்பராகும்.
கருணைக்கிழங்கு, வாழைக்காய் வறுவல் செய்யும்போது நாலு தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு, இரண்டு தேக்கரண்டி இஞ்சிச்சாறு சேர்த்துக் கொண்டால் ருசியோ ருசி.