மருத்துவக் குணம் கொண்ட விதைகள்..!
By எஸ். எஸ். | Published On : 11th December 2022 06:00 AM | Last Updated : 11th December 2022 06:00 AM | அ+அ அ- |

அளவற்ற சத்துகளையும் அதிக மருத்துவக் குணங்களையும் கொண்ட விதைகளும் உள்ளன.
முருங்கை விதைகள்: முருங்கை விதைகளை நன்றாகக் காயவைத்து பொடிசெய்து பாலில் கலந்து குடிக்கலாம். முருங்கைக் காயுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இதில், ஆன்டிஆக்ஸிடன்ட், துத்தநாகம், வைட்டமின் ஏ, பி, சி காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. கொழுப்பைக் குறைக்க, புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்க, இதயத்தைப் பலப்படுத்த, ரத்தசோகையை நீக்க உதவும்.
எள் விதைகள்: எள் விதைகளை நல்லெண்ணெயாகவோ, எள்ளை பொடி செய்தோ சாப்பிடலாம். மக்னீஸியம், தாமிரம், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி, துத்தநாகம், நார்ச்சத்து ஆகியவை உள்ளன. உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும். உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவும்.
சூரியகாந்தி விதைகள்: சூரியகாந்தி விதைகள், சமையல் எண்ணெயாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், சுவையுடைய இதனை பருப்பு போலவே மென்று சாப்பிடலாம்.
இதில் அதிகமுள்ள நியாசின், வைட்டமின் இ ரத்தத்தில் கெட்ட கொழுப்பை குறைக்கும். கால்சியம், இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாது உப்புக்களும் சூரியகாந்தி விதையில் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சப்ஜா விதைகள்: சப்ஜா விதைகளை நீரில் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும். சப்ஜா விதையில் துத்தநாகம், சல்ஃபர், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இது பித்தம், உடல்சூடு, செரிமானப் பாதையில் ஏற்படும் புண்கள் ஆகியவற்றை குணப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், ரத்த சோகை வராமல் காக்கும்.
பூசணி விதை: பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீஸியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாது சத்துகள் நிறைவாக உள்ளன. நூறு கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் அறநூறு கலோரிகளைப் பெறலாம்.