குஜராத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை மிருதுளா ஜடேஜா, மற்ற வீரர்கள், வீராங்கனைகளைவிட இவர் சொத்து மதிப்பில் உயர்ந்தவராக இருக்கிறார்.
அன்றைய ராஜ்கோட் சமஸ்தான அரசரின் அரண்மனைதான் சரித்திரத்தில் இடம் பெற்ற 'ரஞ்சித் விலாஸ்'. 225 ஏக்கரில் அமைந்துள்ளது. 150 அறைகள் இருக்கின்றன.
பிரபலமான பழைய கார்கள் அரண்மனை வளாகத்தில் அணிவகுத்து நிற்கின்றன.
இந்தியாவில், அரண்மனைகள் எல்லாம் நட்சத்திர ஹோட்டல்களாக மாறிவிட்ட நிலையில், 'ரஞ்சித் விலாஸ்' மட்டும் அரச குடும்பத்தினர் வசிக்கும் அரண்மனையாகவே இன்றைக்கும் இருக்கிறது.
சௌராஷ்டிரா அணிக்காகவும், மேற்கு மண்டல அணிக்காகவும் கிரிக்கெட் ஆடும் மிருதுளா 46 வரையறுக்கப்பட்ட ஓவர்கள் உள்ள போட்டிகள், 36 'டி20'-க்கள், ஒரு முதல்தரப் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
மிருதுளாவும் தனது அரண்மனையைப் பல்வேறு கோணங்களில் படம் பிடித்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டு அசத்தி வருகிறார். மிருதுளா ஆல்-ரவுண்டர். வலது கையில் பேட்டைப் பிடித்து விளாசுபவர். முப்பத்து இரண்டு வயதான மிருதுளா, கிரிக்கெட்டில் ஆண் கிரிக்கெட் வீரருக்குத் தரப்படும் ஊதியத்தை கிரிக்கெட் பெண் வீராங்கனைகளுக்கும் தர வேண்டும் என்று உரிமைக் குரல் எழுப்பியவர்.
இவருக்குப் பிடித்தமான இன்னொரு விளையாட்டு கோல்ஃப். ராஜ்கோட் அரச குடும்ப சொத்தின் மதிப்பு 4500 கோடி ரூபாய். அதில், மிருதுளாவின் பங்காக சுமார் ரூ.1,500 கோடிக்கு மேல் இருக்கும். 'இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் ஆட்டக்காரர்' என்று மிருதுளா ஜடேஜாவைச் சொல்வதில் அர்த்தம் உள்ளது.
அரச குடும்பங்களிலிருந்து கிரிக்கெட் ஆட வந்த ஒரே பெண்ணும் இவர்தான். அரச குடும்பத்திலிருந்து கிரிக்கெட் ஆட வந்தவர்கள் இரண்டு ஆண்கள் மன்சூர் அலிகான் பட்டோடி, அஜய் ஜடேஜா.